Sunday, June 2, 2013

நோய்க்கூறு#5

                  மிகக் கடினமான சூழ்நிலைகளில் இருந்து வெளியே வர ஒரே வழி வாசிப்பு தான். வாசிப்பின் மீதான காதலில் திறக்கப்பட்ட கதவுகள் தான் நிம்மதியாய் சுவாசிக்க வழி செய்தன. மனதின் மொழியை பலவேறு கோர்வைகளுடன் இசைத்து மகிழ்ந்திருக்கிறேன். எப்போதும் சுருதி தப்பியதைப் பற்றிக் கவலைப்பட்டதேயில்லை.இருட்டை நேசித்ததில்லை. பீடித்தவற்றையும் விரட்டி அனுப்ப எப்போதும் வாசிப்பின் சன்னல்களும் உழைப்பிற்கான கதவுகளும்...
                  நள்ளிரவில் ஒரு நிமிட தொலைபேசி அழைப்பில் வாழ்க்கையை இருட்டாக்கி விட்டு ஓடிப் போன நம்பிக்கைகளைப் பற்றி யோசித்தாக வேண்டியிருக்கிறது.துரோகமிழைத்தவர்கெல்லாம் நன்றியைப் பரிசாக்க வேண்டியது கடமை. மோசமான மனிதர்கள் என்றெவரும் நான் பார்த்ததில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். அவர் தரப்பிலும் நியாயங்கள் இருக்கக் கூடும்.உறவுகள் உட்பட சந்தர்ப்பவாதிகளையும் யதார்த்தவாதிகளையும் அதிகமாய் அருகிருந்து பார்த்துச் சலித்திருக்கிறேன்.ஒரு போதும் எதிர்படும் மனிதரை முந்தையோர் வகையில் ஒப்பிட்டு மகிழ்ந்ததில்லை. அவர்களெல்லாம் தான் வெற்றியின் நாயகர்களாக இருக்கிறார்கள். அது போலான வெற்றியில் எப்போதும் உவப்பில்லையாதலால் இன்னும் இப்படியே...
                  நிராதரவாக விடப்பட்ட அந்தத் தருணங்களை மீட்டிப் பார்த்தேனாகில், மனக்கண்ணில் பயந்து நடுங்கும் ஒரு அபலையின் உருவம். சுயகழிவிரக்கமொன்று மடியிலேறி என்னை மடக்கிப் போடுகிறது. அவ்வேதனையைக் கண்ணீரால் கழுவி மங்கலாக இந்த இரவு விடிவதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். துணையாய் இசையுண்டு. மொழிகளற்ற நாதங்கள்,தந்திகளின் அதிர்வுகள் என் நரம்புகளை தூங்கச் செய்யும். ஜலதரங்கம் கேட்கிறேன் செல்களைப் புதுப்பிக்குமது.
    என் துக்கம், அதை நானே சுமந்து சாகனும். வார்த்தையாலும் கூட ஒத்தாசைக்கு யாருமில்லை. ஏக்கம் போய் பிடிப்பு வ்ந்து விட்டது என்மீதான நம்பிக்கையில்,காதலில், ஆசையில்.எல்லாம் இருந்த போது விரக்தி தொற்றி தற்கொலைக்கு முயன்ற அற்பமான சந்தர்ப்பங்களுமுண்டு. எதுவுமில்லாத போது எவருமில்லாத போது வாழத்தான் துடித்துக் கொண்டிருக்கிறேன் முன்னிலும் சிறப்பாய்....
                  சுகமாகத் தான் இருக்கிறது. நாதியில்லா நரகப் பெருவாழ்வு. தோல் சுருங்கி வயோதிகம் கதவு தட்டும் இந்தக் காலத்தில் தான் முனைப்புடன் இருந்தாக வேண்டும்.காலை நடை, கருப்பட்டிக் காப்பி, நிதமொரு நவதானியம், சமைக்காத காய்கறிகள்,பழங்கள்,படுக்கைக்குச் செல்லுமுன் இரண்டு பாதாம் ஒரு கோப்பைப் பால்.

என்னுலகம் மிகமிக ரசனையானது, எளிமையானதும் கூட. இசை,கவிதை,இயற்கை,குழந்தைகள்,ஓவியம் இதைத் தவிரவும் நிரம்ப உண்டு. நிரப்பிக் கொள்ளவும் எத்தனையோ உண்டு.

எவருக்கென்றுமில்லை பச்சைப்பசேலென்ற இயற்கை பிடிக்கும் பங்களிப்பாய் சில மரங்கள் நடுகிறேன்.

எந்தக் குழந்தைகென்று இல்லாது எதிர்படும் எல்லாருக்கும் தாயன்போடு முத்தமிடுகிறேன்.

என்னோடு வாழ்ந்து மரித்த ஆன்மாக்களுக்கு வருடத்தில் ஒரு நாள் அவர் பெயரால் இயன்றவரை அன்னதானம். எண்ணிக்கை சிறிதெனினும் கடமைக்குப் பலன் நிம்மதி.

புரிகிறதா!
நீ இல்லாத நான் வெறுமையாயில்லை.
வக்கிரங்களும் குரோதங்களும் என்னிடம் ஒட்டிக் கொள்ள எப்போதும் நான் வெறுமையாய் இல்லை.
ஒரு நாளில் நேரில் சொல்லிக்கொள்ளத் திராணியின்றி பிரிந்து போன கோழை நீ! உனக்கெப்படித் தெரியும் தினம் தினம் நான் உயிரோடிருக்க போராடிக்கொண்டிருப்பது. போராளி நான். தோல்விக்கு அழுவதுமில்லை  வெற்றிக்குச் சிரிப்பதுமில்லை. அந்தக் கணங்களை அப்படியே ஏற்று வாழும் திறமையிருக்கிறது.
சகுனம் பார்ப்பவரிடமும் சாதி பார்ப்பவரிடமும் சிக்கிச் சீரழியுமிந்த வாழ்வில் வெறுமையேது? ஏதேனுமொன்று மனமேறி நடக்கச் செய்கிறது... அதோ அந்தக் கிழக்கில் தானே சூரியன் உதிக்க வேண்டும் நானில்லாது போனாலும்....

தெளிவாய் இருக்கிறேன்.

நினைவுகளே துன்புறுத்தாதீர்கள்!

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!