Friday, May 31, 2013

மயர்வறு மாயவர்கோன்

ஊழித் தாண்டவ பேராழி தன்னிடமேகி
இழுத்திட்டத்தனையும் கரையுமிழ்ந்து
நுரைத்துப் பொங்கும்

பிரளய சஞ்சலத்தின் சாயலேதுமில்லாது
அரவப்பஞ்சணையில் அயர்ந்துறங்கும்
ஆதிலட்சுமி உடனாய ஆயனவன்

வழிதொலைத்த பிள்ளையென் கரம்பிடித்து
நெறி நடாத்தி நன்நடை பயிற்றுவித்தோன்
நன்றி நவில நித்தமும் நாராயணாவெனும் நாமம்

ஆயிரம் தலையதன் விடம் புகுந்து
நீலம் பூத்த மாயவர்கோன்
கமலம் நிகர்த்த கற்பூரக்குன்றதனை கடித்துண்ணும்
வெளுத்தபிடி நிகர் வேய்ங்குழல் நாச்சியார்
உள்ளங்கை உயர்த்தி ஆசி மொழிய
புடமிட்ட பொன்னெல்லாம் சிரசில் பொழிய
அரங்கத்தான் அடியொற்றி அசையும் படுக்கையிலே
அவன்வழியே கனாக்கண்டேன் தோழி!

வெண்சங்கு சுதர்சன சக்கரதாரி விஸ்வரூபம்
வானாளில் வரமாய் வாய்த்திட வேண்டி
செய்யாத செயலெல்லாம் செய்தேன் காண்பீர்!

உண்ணாநிலையிருந்தேன்
உண்ணக் கிடைக்காதாருக்கு உண்ணத் துய்த்தேனில்லை
பரமபதமாடி ஏகாதேசி நோன்புற்றேன்
துவாதிசி விருந்தை காக்கைக்கிட்டேன்
தவறியும் பிச்சை தந்தேனில்லை

அபயம் தரும் அயனவன்
அகத்தீசன் உற்றானிவன் அருள்வேண்டி
உபயமிட்ட பொருளெல்லாம் முத்திரையோடு
அவன் வாசல் நிறைத்திருக்கும் காண்பீர்!

படிப்பிழந்த ஏழைக்கு படிபென்ன
பிழைப்பே தந்தேன்
பிள்ளையவனுக்கு மாதவன் பெயர் சொல்லி
எமக்கு எடுபிடியெனும் திருப்பணி

அற்ப மானுடப் பேதையென் அபயம் உய்க்க
திருவுளத்தான் திருவருள்
ஆரல் ஆழ்கடல் அரண்
அடித்து விழுங்கி அரங்கனுறை வைகுண்டமேகும்
ஆசையில் அனுதினமும் ஒலிக்குமென்குரல் கேட்பீர்
எம்வீடுறை வீதி நுழையும் உயர்சாதி பெருங்குடியார்!

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!