Friday, June 28, 2013

உயிர்வாங்கிப் பறவை

ஈரலில் படிந்த விசத்தை
கிளறி விடுகிறாய்
ஒரு கோப்பைச் சாராயத்தில்...
குடிப்பதற்கு மட்டும்
ஆயிரம் காரணங்களுனக்கு
வரிசையில் நிற்கின்றன

வசவித் தெளிந்துணர
வாடிக்கையாய்
நான்கைந்து பெட்டிகள்
புகைத்துத் தீர்க்கிறாய்!
சுகித்துக் களித்த
பெண்களனைவரையும்
ஊர்,பெயர் சகிதம்
ஒப்பித்தபடி தூங்கிப் போகிறாய்
எத்தனை தான் பாறையென்றாலும்
இத்தனையில் கடைசிக்கு
கலங்காமலா இருக்கும்?

கண்ணீர் வரிகளோடு
நிசப்தம் சூழந்த இரவு
மேல்மாடச் சாளரங்களில்லாவிடில்
குமைந்தே குறுகிவிடும் வாழ்நாட்கள்
காற்று தழுவும் இளமையையும்
மார்பிலாடும் சரடையும்
பெருமூச்சோடு தொட்டு மீள்கிறேன்
பந்தமில்லா கயிறெதற்கு
பற்றோடு ஒட்டிக் கொண்டிருக்கும்
பரிதாபமிக்க ஜீவன்கள் காரணம்

நீ சொல்லும் கதை கேட்டால்
புலரும் சூரியனும் கூசிப்போகும்
ஆணென்ற அடையாளம்
தவறுகளுக்கெல்லாம்
தனிஅர்த்தம் கற்பிக்கும்
எல்லாம் சரி!
என்னை ஏன்
பாதிரி ஆக்குகிறாய்
கவிதையெழுதுவதைத் தவிர
நின் மனையாள் வேறொரு பாவமும்
செய்தேனில்லை

சுதந்திரமானவர்கள் துணைக்கு
அடிமைகளையே தேர்கிறார்கள்

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!