Thursday, June 13, 2013

தேசாந்திரி

கத்தையாய் தைத்த
கையெழுத்துப் பிரதிகள்
எண்ணிலடங்கா துணுக்குகள்
பழுப்பேறிய காகிதத்தில்
அழிக்கப்பட்ட இன வரலாறு
மசி தோய்ந்த சித்திரங்களுமிருந்தன
குறிப்புகள் தான்
குவியல் குவியலாய்...
பாமரத்தியெனக்கு எதுவும் புரியவில்லை
வயிற்றுப் பிழைப்புக்கு வாழ்க்கை பட்டபின்
வரலாறும் ஒரு கேடா?
பணமென்றேதுமில்லாதபோது காகிதங்கள்
அத்துணை முக்கியமில்லை தான்
வெறுப்பில் கடாசி விட முனைகிறேன்
கால் இடறி கவனம் சிதைத்த
தேசாந்திரியின் புத்தகப் பையொன்றை...
மனக்கிலேசமொன்று மனமேறி நிற்கிறது
எல்லோரும் முன்னோக்கி
ஓடிக் கொண்டிருக்க
ஆதிக் குடிகளை ஆதூரமாய்
அணுகியவனைப் தேடிப் பார்க்கிறேன்
சுயநினைவின்றி மயங்கிக் கிடக்கிறான்
தூரத்து மரத்தடியில்..
தெளிவித்து உணவிட்டு நீங்குகிறேன்
புதையலைக் கண்டவன் போல்
பறித்துக் கொண்டான் கையிலிருந்ததை...
காணாக் குழந்தையை கண்ட
தாயின் பரவசம் கண்டேன்
பிறவாக் குழந்தை மார்முட்டும்
பரவசம் எனக்குள்ளும்...
அவன் யார்?
அந்தக் குறிப்புகளென்ன?
எவர் வரலாறு அது?
இதெல்லாமா இப்போது முக்கியம்
குழந்தையை தாயிடம் சேர்த்தாயிற்று
வரலாறு வளர்க்கப்படும்
வாழ்ந்து விட்டுப் போகட்டும்
பந்தயப் புரவியாயிராது
இவனைப் போல் இன்னும் சிலர்...

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!