Sunday, December 30, 2012

நேயமிகு எதிரிக்கு....

எனக்கும் அவனுக்கும் 
யாதொன்றிலும் 
கருத்தொற்றுமையில்லை 
எனக்கு ஆத்திகமென்றால் 
அவனுக்கு நாத்திகம் 
நான் பாரம்பரியமென்றால் 
அவன் நவீனம் 
இசையெனில் 
எனக்கு மெல்லிசை
அவனுக்குத் துள்ளிசை 
நான் ஆதிக்கத்தை வெறுப்பவள் 
அவனோ ஆணாதிக்கவாதியென்று 
முழங்கித் திரிபவன் 
இலக்கியத்திலும் கூட
சங்கத்தமிழென்றால் 
பின்நவீனத்துவமென்று...

நாங்கள் இருவேறு துருவங்கள்

காதல் காமமென்ற 
சராசரிகளில்லை 
பாலின பேதமென்பதேயில்லை 
தர்க்க மேடையே
எங்களின் இணைவுப் புள்ளி 

சமூகப் பார்வையில்
புரிதலில் 
ரசனையில்
ஏதொன்றிலும் 
சமரசமில்லை

எனக்கான பாசமோ பரிதவிப்போ மெனக்கெடல்களோ 
ஏதுமில்லாத நேயமிகு எதிரியென்று 
உற்சாகமாயிருந்தேன் -ஏனெனில் 
அன்பில் அதீதமென்றால் ஒவ்வாமையெனக்கு 

சலித்துக் கொண்டாலும் 
சிடுசிடுத்தாலும் 
திட்டித் திருத்தினாலும் 
எல்லாப் புலம்பலும் 
அவன் முகவரிக்கே

காதல் கடிதங்களிலிருந்து 
காதலன் முத்தம் வரை 
சொல்லிச் சிரித்து 
கைவசமிருந்த கொஞ்சமே கொஞ்சம்
ரகசியங்களையும் காலி செய்தாயிற்று 
எதிரியிடம் சொல்வானேன் 
யோசிக்கவேயில்லை 
அவனும் தான்
அத்தனை இயல்பாயிருந்தது 
உரையாடல்களனைத்தும்

வெற்றியின் மீது வெறியவனுக்கு 
தோல்விகள் பிடித்தமில்லையாயினும் 
அவனுக்கெனச் சிலமுறை 
என்னையுமறியாமல்...

என் சின்னதொரு தோல்விக்கு
அவன் ஆதங்கப்பட்ட
அக்கணம் சபிக்கப்பட்டது 

நண்பர்களென்றுணர்ந்தோம் 
பிரிந்து விட்டோம் 

அய்யோ!
கேட்க மறந்துவிட்டேன் 
எந்த அட்சரேகையில் அவன் கலம் 
பயணிக்குமென்று...
நேரெதிர் திசையில் 
தொடங்க வேண்டும் நான் 

உன் கோட்பாட்டை மாற்றியெழுது கலிலியோ
பூமி தட்டையாகவே இருக்கட்டும்!

1 comment:

கவியாழி said...

நன்று,நேர்மையான எதிரியோ? நண்பனோ தேவைதான் .

இதையும் படிச்சுப்பாருங்க

http://kaviyazhi.blogspot.com/2012/12/blog-post_30.html

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!