Thursday, January 3, 2013

தூபம் போல் என் ஜெபம்...

இயந்திரகதியில் ஆயத்தமாகி,மாணவிகளோடு மாணவியாய் வரிசையில்.என்னைச் சுற்றி இருநூறு பேர் ஏசுவின் நாமத்தை சிரத்தையாய் ஜெபித்துக் கொண்டிருந்தாலும், அசராமல் குலுங்காமல் சாமியாடிக் கொண்டிருப்பேன்.இல்லையில்லை இரண்டு பக்கத்திலும் அரணாய் தோழிகள் இருப்பர்.முன்வரிசையிலும் பின்வரிசையிலும் அடுத்தகட்டத் தற்காப்புக்கு தோழிகள். காலையில் 5 மணிக்கு இறைவனை துதிக்கப் பழக்கிய பள்ளிக்கு கோடானுகோடி நன்றி.

”தூபம் போல் என் ஜெபம் -அது
உன்னைச் சேர வேண்டும்
நேசத்தந்தாய் உந்தன் அருள்.... “

மொத்த தேவாலயமும் அமைதியில் ஆழ்ந்திருக்க, வாத்தியங்களுக்கு நடுவிலொரு தேவக்குயில் இந்தப் பாட்டை பாடும் அந்த அதியுன்னதமான நேரத்தில் தான் என் தூக்கம் கலையும்.அந்தக் குயிலின் பெயர் லில்லி சிஸ்டர்.கண்டிப்புக்கு பேர் போன ஒரு ராணுவக்கூடாரத்தில் நேயத்தால் என்னைக் கட்டிவைத்த சாந்தசொரூபி.தப்பியோட வாய்ப்பே தராமல் அன்பு மழை பொழியும் கருணை தேவதை.

இரண்டு முறை கூடைப்பந்தாட்ட பயிற்சிக்கும் ஒரு முறை பேச்சுப் போட்டிக்கும் விடுதி மாணவிகளை அழைத்து போகும் பொறுப்பேற்றார்.முதல் சந்திப்பிலேயே  என்னை என் தோழிகள் வட்டம் தவிர்த்து டெடி(deady) என்றழைக்கும் உரிமையுடையவராகிப் போனார். டெடி என்கிற பெயர் காரணத்துக்கு என்மீதனைவரும் கொண்ட அன்பே காரணம்.வேறொன்றுமில்லை. :)

லில்லி சிஸ்டர், வீட்டுக்கு மூத்த பெண்.வயது? எனக்கு கணிக்க தெரியவில்லை.இவருக்குப் பின் மூன்று பெண்கள் உள்ள குடும்பம். அப்பா இல்லை. அம்மா மட்டும்.அழகாய்,அறிவாய்,கம்பீரமாய்,பணிவாய் அப்படியொரு சரிவிகிதத்தில், அவரைப் போல் அவருக்குப் பின் ஒரு பெண்ணை நான் பார்த்ததேயில்லை.பலமுறை  தோன்றும் இந்த உடையில் எந்த வசீகரமும் இல்லை, ஆனாலும் எப்படி இவரால் மட்டும் இப்படி ஜொலிக்க முடிகிறது? உள்ளத்தின் தூய்மை போலும்.

ஒரு கிறிஸ்துமஸ் லீவுக்கு ஊருக்குப் போகவில்லை. புத்தகம் வாஙகவென்று காரணம் சொல்லி, புதுமண்டபத்தில் சுற்றிக் கொண்டிருந்தோம். வார்டன் அக்காவும், லில்லி சிஸ்டரும் மேற்பார்வைக்காக. நான் அவருடன் பேசிக் கொண்டும் வாயாடிக் கொண்டும் வளைய வந்து கொண்டிருந்தேன்.ஒரு கணவன் மனைவி, எங்களைக் கடக்குமுன் கணவன் மட்டும் நின்று 2 நொடி நிதானித்து திரும்பிப் பார்த்தபடியே வேகமாக கடந்து போனான். லில்லி சிஸ்டரின் மொத்த உற்சாகமும் வடிந்தே போனது. அவருக்கு நெருக்கமானவராக இருக்க வேண்டும். ஏன் பேசாமல் போகிறார்? ஏதோ புரிந்தாலும் அப்படியேதுமிருக்கக் கூடதென்றிருந்தேன்.
பள்ளிப் பேரூந்தின் கடைசிச் சீட்டில் இருந்தார். கண்ணீர் சிந்திக் கொண்டே, கண்களை மூடி, உதடு கடித்து,
“தேவரீர்..” என்ற முணுமுணுப்போடு மனதுக்குள் கடவுளோடு மன்றாடிக் கொண்டிருந்தார்.ஆட்டமும் பாட்டமும் அந்தப் பக்கம் களைகட்டியிருந்தது. கும்மாளமிட அது போல் இன்னொரு நாள் வாய்க்காது போகலாம். ஆனால் என் அன்பிற்குரிய ஜீவன் அல்லாடிக் கொண்டிருந்தது. லயிக்கவில்லை மனது.

“என்னாச்சு சிஸ்டர்?”
சட்டென உணர்வு வந்தவர் பதற்றமாய், “ஒண்ணுமில்லம்மா!வந்துட்டமா அதுக்குள்ளயும்? சத்த அசந்துட்டேன்” என்று நானறியாமல் கண்ணீரை துடைக்கும் முனைப்பிலிருந்தார்.
“மனசு கஷ்டபடாதீங்க சிஸ்டர்”
“பெரிய மனுசியாட்டம். போடி முன்னால” கன்னதைக் கிள்ளி தோளோடு சேர்த்தணைத்துக் கொண்டார். ஏனோ நான் அன்றிரவு முழுதும் அழுது கொண்டிருந்தேன்.

அன்றிலிருந்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவரோடு பேசிச் சிரிப்பதே என் வேலையாகிப் போயிற்று.எனக்கொரு பலவீனம்... பியானோ வாசிக்கும் பெண்கள், அதிகமாய் ஆங்கிலக் கவிதைகள் பேசும் பெண்களெல்லாரும் என் அன்புக்குரியவராகிப் போவார்கள் எந்தவித மனத்தடையுமின்றி. அப்படித் தான் இவரும், லில்லி சிஸ்டர் முதுகலை ஆங்கில இலக்கியம் படித்தவர்.வாரப் பத்திரிக்கைகளுக்கும் தமிழ் கதைப் புத்தகங்களுக்கும் பள்ளியில் தடையே தவிர காதல் சொட்டும் ஆங்கில இலக்கியத்துக்கு தடையேதுமில்லை.லில்லி சிஸ்டர் மொழிபெயர்த்து சொல்வதில் மிகத் திறமைசாலி. சேக்ஸ்பியர்,கீட்ஸ்,பைரன் இப்படி நிறைய இலக்கியங்கள் கிடைக்கும்

“....இதில என்ன சொல்றான்னா நிலவோட அவள ஒப்பிட்டு பேசறான். He is speaking about the similarities...." கண்ணிமைக்காமல் நானும் லிசாவும் சொக்கிப் போயிருந்தோம் அவர் குரலினிமையிலும் அந்த இலக்கிய நயத்திலும்.

”உங்களுக்கு காதல்னா அவ்ளோ பிடிக்குமா சிஸ்டர். இவ்ளோ அருமையா சொல்றீங்க?”

சட்டென முகம் வாடி “அதும் அன்பு தானேடி”

“சிஸ்டர். அதெப்படி அதும் அன்பாகும்?”

“உனக்கும் ஒருநாள் புரியும்.வாலு.நட முன்னால”

அரையாண்டுத் தேர்வுக்கு முந்தின நாள் இரவு. ஹாலில் யாவரும் ஒன்று கூடியிருக்க, ரோஸி அழுது வீங்கிய கண்களோடு வழிபாட்டறையில். பெண்களின் உலகம் ரகசியங்களால் நிரம்பி வழிகிறது.ஆறுதல் சொல்லும் கரத்தின் வெதுவெதுப்பில் மீட்படைந்தோருமுண்டு. ரோஸி,அவள் என் எதிரிகள் பக்கம்.நான் ஒழுங்கீனமென பட்டம் வாங்க பலமுறை காரணமாயிருந்த நல்லபிள்ளை. எனக்கு அவளைக் கண்டாலே ஏகத்துக்கு எரிச்சல்.பணக்காரி. திமிரென்பதில்லை அவள் என்னை மதிப்பதில்லை ஆகவே அவள் என் எதிரியென நானே வரித்துக் கொண்டேன்.அது தவிர என்னுயிர் தோழி ஜான்சியின் மிகப்பெரிய எதிரி, ஆகவே எனக்கும்.
நாங்கல்லாம் மாங்கு மாங்குன்னு படிகறப்போ அவமட்டும் ஜாலியா தப்புறதா? கூடாது.வத்தி வைத்தாயிற்று.கனல் பார்வை பார்த்தாள்.மிரண்டு போய்ட்டேன். கண்ணீரோடு கோவத்தை கலந்து எய்தும் பார்வையம்பு, உயிர் நீங்கலாக திராணி அனைத்தையும் உறிஞ்சிச் செல்லும். உண்மை மக்களே!

வார்டன் சிஸ்டர் முன்னிலையில் முட்டி போட்டபடி அழுதுகொண்டிருந்தாள்.பதினோர் மணி சுமாருக்கு அலுப்பாய் வந்தாள். நானும் ஜான்சியும் ஒரு நமட்டுச் சிரிப்பு சிரித்து வைத்தோம்.

காலையில் வழிபாடு முடிந்து திரும்பும் போது கவனித்தேன் அவளும் ஜான்சியும் பேசிக் கொள்வதை. ஏதோ பெரிய பிரச்சினை. ஜான்சி அவளது ஊரைச் சேர்ந்தவள்.இராமேஸ்வரம் பக்கத்தில் ஒரு சின்ன கிராமம். நிறைய மீனவக் குடும்பங்கள். ரோஸியின் அப்பாவும் மற்ற சொந்தக்காரர்களும் மீன்பிடித்தொழிலை ஆதாரமாக கொண்டவர்கள். பெருந்தனக்காரர்கள் தான். பணமோ சாதாரண வாழ்வாதார பிரச்சனைகளோ இல்லை. என்னவாயிருக்கும்?
மதியம் உணவு இடைவேளை முடிந்து திரும்புகையில் காய்ச்சலென சொல்லி படுத்துக் கொண்டிருந்தாள்.சாப்பிடவுமில்லை. அவள் குழுவினரெல்லாம் அதீதப் படிப்பாளிகள். அவர்கள் கவனம் படிப்பிலிருந்தது.
நாளை மறுநாள் வரை தேர்வுகள் நெருக்கிப் பிடிக்கும்.ஏன் இந்த லூசு இப்படி சோம்பித் திரியுது. கேட்கலாம் தான். ஆனால் அனல் பார்வைக்குப் பயம்.மெதுவாய் லில்லி சிஸ்டரிடம் சொல்லி வைத்தேன்.
“நீயே போய் படின்னு சொல்றதுக்கென்ன ?”
“அவ என் எனிமி சிஸ்டர். நான் சொன்னா முறைப்பா”
“நீதாண்டி அவ பெஸ்ட் பிரண்ட். அவளும் படிக்கணும்ன்னு நெனைக்கிறேல்ல அதான்.என் செல்ல டெடி” சினேகமாய் தோளில் கைபோட்டு அழைத்து போனார். இப்படியான தருணங்களின் மிகவும் பெருமையாக இருக்கும்.பாத்தீங்களா நான் தான் இவங்களுக்கு ரொம்ப பிடிச்சமான மாணவின்னு ஒரு கர்வத்தோடும், எதிரில் வருபவர்களின் எரிச்சல் கலந்த முகத்தையும் பார்ப்பதில் அலாதி ஆனந்தம்.

அதன் பிறகு, தினமும் வழிபாடு முடிந்து திரும்பும் போது லில்லி சிஸ்டருடன் ரோஸி பேசினாள்.என்ன பேசுவார்களென்று தெரியாது, ஆனால் சொல்லும் ரோஸியும் கேட்கும் சிஸ்டரும் கலங்குவது பார்பவருக்கு எளிதில் விளங்கும்.
இரவு நேரத்தில் தூங்குமுன்பு மாதாவின் முன் அமர்ந்து வெகு நேரம் கண்ணீரொழுக பிராத்திப்பாள்.எப்போதும் சிஸ்டருடன் தான் அவளைப் பார்க்கமுடிந்தது. எனக்குள் வெறுப்பும் எரிச்சலும் மண்டிக் கிடந்தது.
அரையாண்டுத் தேர்வு முடிந்து மூட்டை முடிச்சுகளுடன் வீட்டுக்கு கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். நானும் வெகு ஜோராய் அப்பாவின் வருகைக்காகக் காத்திருந்தேன். அப்பா எதோ மாநாட்டுக்கு மதுரை வருவதாயும் இரண்டு நாள் கழித்து அழைத்துச் செல்வதாயும் தொலைபேசிச் சொல்லிவிட்டார்.அதாவது பதினோரு நாள் லீவில் இரண்டு நாட்கள் இங்கேயே போய்விடும். அதிலும் கொடுமை ரோஸியும் நானும் மட்டுமே தனித்திருக்க வேண்டும். ஆறுதல் சாப்பாடு மிகப்பிரமாதமாய் இருக்கும்.கூடவே லில்லி சிஸ்டருடன் பேசலாம்.

நூற்றியிருபது பேர் இருந்த இடத்தில் இப்போது நான்கே பேர். அதில் இருவர் வார்டன் அக்காக்கள். ஏனோ அமைதி சகிக்கமுடியவில்லை. இரண்டு மணிநேரம் கூட என் வீம்பு பலிக்கவில்லை.
“ஏண்டி எப்பப் பாத்தாலும் அழுதுட்டேயிருக்க?” மௌனத்தை உடைத்தே விட்டேன்.
“”
“ஆமா நீ ஏன் ஊருக்குப் போகல? ஜான்சி லிசா கூடத் தானே போவ? ஏன் போகல?”
“”
“நீ என்கிட்ட தான் பேசனும் வேற வழியேயில்ல. ரெண்டு நாள் தான் அப்றம் நீ இப்டியே இருந்தாலும் யாரும் கேக்கப்போறதில்ல”
“”
“பேசமாட்டியா? நான் லில்லி சிஸ்டர்கிட்ட சொல்லிடறேன். நானா பேசினாலும் அவ முகத்தத் தூக்கி வச்சிக்கிறான்னு”
“நீ தான் அவங்க கிட்ட சொன்னியா?” முத்து உதிர்ந்தது.
“ஆமா. நீ ஏண்டி அழற?”
“”
அத்தனை எளிதாய் பதில் வரவில்லை.
நடு இரவில் அவள் எழுந்து பிராத்தனைக் கூடத்துக்குச் செல்வது தெரிந்தது.
“யாரு யாரு?” வார்டன் அக்காக்கள் குரல் பதற்றமாய் ஒலிக்கவே திடுக்கிட்டு நின்றாள். நாலாப்புறமும் தாளிடப்பட்ட அந்த பெரிய ஹாலிலிருந்த ஒரு பக்கத்துக் கதவைத் திறந்தால் பிராத்தனைக்கூடம். இன்று பாதுகாப்புக் கருதி எல்லாக் கதவுகளும் பூட்டப்பட்டிருந்தது.தூக்கம் கலைந்த எரிச்சலில் குதறி விட்டனர்.பாவம் அழ ஆரம்பித்தாள்.

“என்ன தாண்டி உம் பிரச்சினை? எப்பப் பாத்தாலும் அழுதுக்கிட்டே.....என்கிட்ட சொல்லுடி”
“யாருக்கிட்டயும் சொல்ல முடியாதுடி”
“லில்லி சிஸ்டர்கிட்ட மட்டும் சொல்ற”
“அவங்களுக்குப் புரியும்”
“எல்லாம் எங்களுக்கும் புரியும் சொல்லு”
”எல்லாமேயிருக்குடி எனக்கு ஆனா உசுரு தான் இல்ல”
“ஹா ஹா அப்ப பேய்கிட்ட பேசிட்டு இருக்கனா” மொக்கைத்தனமாகச் சிரித்தேன் என்பது அவள் இளக்காரப் பார்வை உணர்த்தியது.
“சரி சரி சொல்லு”
“வாழ்க்கையில தோத்துட்டேண்டி.என் அத்தை பையன் நான் உயிரா காதலிச்சவன் வேரொரு பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டான். எங்களவிட வசதி. பெரிய இடம்.மொத்தமா அவன வெறுத்தேன் என்னை ஏமாத்திட்டான்னு”
”ம்ம்”
“அவன் போன வாரம் ஒரு ஆக்சிடெண்ட்ல செத்துப் போய்ட்டான்”
“ஓ!உனக்கு செஞ்ச பாவம்.விடுடி.உனக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கும்”
“அப்டி சொல்லாதேடி.என்னை சிஸ்டராக்க போறதா என் அப்பா சொல்லியிருக்கார். எங்களுக்குள்ள இருந்த பாசம் தெரியல அப்பாக்கு அதான். இவனும் எதும் சொல்லாம கல்யாணம் பண்ணியிருக்கான்.இப்ப தாண்டி தெரிஞ்சது”
“உங்கிட்ட உங்கப்பா கேக்கலியா?”
“இல்ல இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்னு பார்த்திருப்பார்.அதுக்குள்ள... கடவுளே!நான் நெனைச்சது ஒண்ணு எனக்கு நடக்கறது ஒண்ணு”
“கஷ்டமா இருக்குடி”
“இப்ப இந்த லீவுக்கு கூட எனக்கு வீட்டுக்கு போகப் பிடிக்கல, இங்கயே தான் இருக்கணும் போல தோணுது.லில்லி சிஸ்டர் தான் என்னை சமாதானம் செஞ்சாங்க. என் வலி அவங்களத் தவிர யாருக்கும் புரியாதுடி. அப்பாகிட்ட பேசினாங்க. கொஞ்ச நாளைக்கு ஊருக்கு வரவேணாம் இங்கயே இருக்கணும்னு.இந்தத் தோல்வி முடிவில்லடி வாழ்க்கைக்கு நெறைய அர்த்தமிருக்கு.முடிஞ்சதப் பத்திப் பேச என்னயிருக்கு? தேங்க்ஸ்டி நீ மட்டும் அவங்க கிட்ட சொல்லலன்னா நான் வேற எதாவது முடிவுக்கு போயிருப்பேன்”
எனக்கும் ஏதோ புரிந்தது.
மறுநாள் பிரார்த்தனையில் நான் தூங்கவில்லை.ரோஸிக்காகவும் மன்றாடினேன். அரையாண்டு லீவு முழுவதும் விடுதியிலே கழிந்தது.
பன்னிரண்டாம் வகுப்பு முடித்து வெளிவரும் போது நாங்களிருவரும் நேயமிகு எதிரிகளாயிருந்தோம். எதிரி என்று எப்போது சொல்லிக் கொண்டாலும் உடனே கண்முன் வந்து நிற்கும் அந்த ஒடிசலான கறுத்த உருவத்துக்கு நான் ரோஸியென்று பெயரிட்டிருக்கிறேன். எரிச்சல் மூட்டாமல் சிரிக்க வைக்கிற எதிரிகளுள் அவளும் ஒருவள்.
நண்பர்கள் சடுதியில் கிடைத்து விடுவார்கள்.ஆனால் ஆத்ம நண்பர்கள்? எதிரிகளும் சட்டென முளைத்துவிடுவார்கள். ஆனால் அங்கீகரிகப்பட்ட எதிரியென்று ஒரு விசயம் உள்ளதல்லவா..

பள்ளி முடித்து பலகாலமாகிற்று.

என்னை உங்களுக்கு நினைவிருக்குமா சிஸ்டர்? இப்பவும் நான் உங்க பாசத்துக்கு ஏங்குற அதே டெடி தான் சிஸ்டர். என்னை அடையாளம் தெரியுமா உங்களுக்கு? உங்களின் சின்ன விலகல் பார்வை கூட என்னை நொறுக்கிவிடுமென்பதாலே விலகியே நிற்கிறேன்.தோல்விகள் என்னை அமிழ்த்தும் போதெல்லாம் மூச்சுக் குமிழிகள் உங்களைத் தான் தேடுகிறது. ஒரு தேவகரம் என் தலைமயிர் பற்றி கரை சேர்கிறது.நினைவு வரும்போது தலையணை நனைக்கும் கண்ணீருடன் மேலே சுழலும் மின்விசிறி.உயிருடன் இருப்பதை உறுதி செய்கிறது.
ரோஸி, மை டியர் எனிமி. உனக்கு என்னை நினைவிருக்கா? என்னைப் பற்றி நினைக்கும் போது நீயும் சிரித்துக் கொள்வாயா?

உயரிய சேவையினால் - கலங்கமற்ற அன்பினால் - தன்னலமற்ற பாசத்தால் - நீங்களிருவரும் எப்போதும் என் நினைவில் இருக்கிறீர்கள்.

லில்லி சிஸ்டர் அதே கருணையுடன் என்னைப் போல பல்லாயிரம் மாணவிகளுக்கு தாயாக அங்கேயே அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.
ரோஸியும் பல்லாயிரம் மாணவிகளுக்கு ஆசானாக ஒரு புகழ்பெற்ற கல்லூரியில் விரிவுரையாளராக மிகச்சிறப்பாகச் செயல்படுகிறாள்.

வாழும் தெய்வங்கள். வணக்கத்திற்குரியவர்கள்!

3 comments:

கவியாழி said...

லில்லி சிஸ்டர் அதே கருணையுடன் என்னைப் போல பல்லாயிரம் மாணவிகளுக்கு தாயாக அங்கேயே அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.

நடந்து முடிந்த நாட்களை நினைத்தால் லில்லி சிஸ்டர் உங்களோடும் மற்ற மானவிகளோடும் எவ்வளவு அன்பாய் ஆசிரியையாகவும்,வார்டனாகவும் நல்ல நண்பியாகவும்.அதைவிட நல்ல மனுஷியாகவும் இருந்திருக்கிறார் என்பது புரிகிறது

Unknown said...

மிக அருமை !

johnpo said...

thanks for super story

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!