Saturday, January 12, 2013

நிறப்பிரிகை

எல்லா நட்பும் வெண்ணொளிக்கற்றை
என்னில் பட்டுப் பிரிகிறது 
எழுவகை நிறமாய்...
தன்னந்தனித் தடங்களில் மிளிர்ந்தாலும் 
வேசங்களற்ற மிழற்றலில் மகிழ்ந்தாலும் 
ஆளுமை ஆதரவு அலட்சியமென்று 
அதன் கரங்கள் 
அவ்வப்போது நீண்டு சிறுத்தாலும்
ஏனோ...
நம்பிக்கையுடன் தேடிக் கொண்டிருக்கிறேன்
எந்த வீச்சிலேனும் 
முன்னிருந்த வெள்ளந்தி நிறமதனை...
வளர்ந்தபின் பால்யம் சாத்தியமா 
செவி நிறைக்கும் கேலிகள்! 
ஆம்! தாயெனும் பிச்சி நான்
ஒன்றை பலவாக்கும் வித்தக நோக்கில் 
முதிர்வுக்குத் தள்ளப்பட்ட பால்யம்
குற்றவுணர்ச்சியோடு 
சுயபிரஞ்ஞையற்ற பச்சாதாபம் மனவறை நிறைக்கிறது 
இப்போதெல்லாம் 
முற்றத்தில் 
முப்பட்டகங்களில்லை 
வந்தவை தன்னியல்பு பிறழாமல் இருக்கட்டும்
தோட்டத்தில் அணிவகுக்கும் 
போன்சாய் மரங்களைப் போல்... 
வேர்கள் தொட்டிக்குள் முடங்கினாலும் 
அன்பின் மழை நிதமும் உமை நனைக்கும்!

1 comment:

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

பொங்கும் தமிழ்ச்சுவையைப் பொங்கல் திருநன்னாள்
எங்கும் அளிக்கட்டும் ஈந்து!

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!