Monday, January 7, 2013

பொங்கலு வந்திருச்சா?

மாட்டுத் தொழுவத்துக்கு
முன்னால
அடுப்ப மூட்டி 
கோலமிட்ட பானையில் 
புதுநெல்லரிசி பொங்கலிட 

புளிய மர நெழலில் 
ஓலப் பாய் விரிச்சி 
கூடியிருக்கும் சொந்தமெல்லாம் 
வருசத்துப் பேச்சத்தனையும் 
அன்னிக்கே பேசித் தீர்க்கும்

எல்லாருஞ் சேர்ந்து பொங்க வச்சு 
வாழயெலமேல படையலிட்டு 
மம்பட்டி செதுக்கிவிட்ட ’திடீர்’ கம்மாயிக்கு 
கொடத்து தண்ணியூத்தி கரையுடைக்க 
’மறுகா’ போகுதுண்ணு 
கிழக்க விழுந்து கும்புடுவோம் 
பகுத்தறிய அதுவா நேரம்? 

பொங்கலோ பொங்கலுன்னு 
பட்டி சுத்தி வாரயில 
பித்தள வட்டி தட்டி வார 
அய்யாவுக்கும் 
’நாடு செழிக்க நல்ல மழ பெய்ய’வுன்னு 
ஒரத்துச் சொல்லுற பெரியப்பாவுக்கும் 
ஒரே பேரு! 

காதறுத்து திட்டி கழிச்சப்றம் 
துள்ளியாடும் கிடேரிக்கண்ணு 
கரும்பால மால கட்டி 
கதம்பமதுஞ் சுத்தி 
பட்டி தெறக்கயில 
பயந்து மருகிப் போகும்!
வாலத் திருகிவிட்டு 
வெரஞ்சோட பழக்குவாக 
ஆமா! 
எங்க தொழுவுலல்லாம் 
கிடேரிக்கும் காளைக்கும் 
பொதுவிதிதேன் 
நாளுங் கெழமைக்கெல்லாம் 
மொடங்கிக் கெடக்கப்படாது! 

கருத்த கன்னத்துல
மஞ்சத் தடவிப் போற 
மொறமாமன் வீரத்த 
ஓரக்கண்ணால ரசிச்சி 
மொகஞ் செவக்கும் 
அழகி யாரிருக்கா இப்பவல்லாம்?

கூடிக் களிச்சிருந்த 
நாளெல்லாம் கனவாப் போச்சுதுங்க 
பங்காளி சண்டையில 
ஊரே ஒடஞ்சுதுங்க 
பாசத்தால பேசிச் சரிகட்ட 
அங்க கிராமமேயில்லயிங்க 
நகரப் பேய் புகுந்து 
தடயமெல்லாம் அழிஞ்சுதுங்க 

பொங்கலு வந்திருச்சா?
பொங்கலு வந்திருச்சா? 

என்னத்த நாஞ் சொல்ல 
வாழ்ந்து கெட்ட எம்வூட்டுக்கதய 
இந்தா, பாட்டா எறக்கிபுட்டேன் 
புரிஞ்சவுக படிச்சிங்குங்க

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!