Monday, December 10, 2012

வானவெளிக் கனவுகளோடொரு மாமிசப்பக்ஷி


உயரப் பறத்தலில்
உச்சம் தொடுகிறது
உயர்சாதிப் பருந்து
தனக்கிருக்கும் பலத்துக்கு தக்கவாறு
எம்பிச் சிறகசைக்கிறது ஊர்க்குருவி
தோற்ற முயற்சிகளுக்கு
எள்ளி நகையாடுகின்றன
மனிதக் குயுக்தி புகுந்த சில மிருகங்கள்
தனக்கும் சிறகிருப்பதை
மறக்கடிக்கும் எதையும்
செவிமடுப்பதில்ல பறக்கத் துடிக்குமது
வக்கில்லாத முன்னோடிகளை
ஏறிட்டும் பார்ப்பதில்லை
ஆமாம், அதற்கெதற்கு பருந்தாகும் நிர்பந்தம்?
அது அதுவாகவே இருக்கட்டும்
வேண்டுவதெல்லாம்
வேடர்கள் கண்ணியில் சிக்காத
சுதந்திர வாழ்க்கை
பறக்கப் பறக்க
வசமாகும் வானம்
களைத்து பூமி தொடுகையில்
கண்ணுக்குப் புலப்பட
ஏதோவொரு நீர்நிலை
இரப்பை நிறைய
ஒன்றிரண்டு தானியங்கள்
மக்கிய மரத்தினையும் உபத்திரவிக்கும் புழுக்கள்
மறந்தும் பிறவுயிர் பிரிப்பதில்லையாதலால்  
மீந்த மாமிசம்
இப்படியே இருந்து விட்டுப் போகட்டும்
மூக்கு வியர்க்கும் வியாதிகளில்லாது
இன்னும் இன்னும்
உயரப் பறத்தலின் கனவோடு...
தூறல் நனைத்த கார்காலத்தில்
அதோ
அந்த வானவில்லை நோக்கி
அம்பெனப் பாய்கிறதந்த மாமிசப்பக்ஷி!

2 comments:

semmalai akash said...

மிக அருமையான படைப்பு ரசித்து படித்தேன்.

கவியாழி said...

உங்களது வருத்தம் புரிகிறது மீண்டும் வருகிறேன் மீதமுள்ளதை தருகிறேன்

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!