Saturday, January 30, 2010

மாவீரன்

திடீரென ஒரு நடுத்தர வயது மனிதர் பெருங்குரலெடுத்து அழுதால் எப்படி இருக்கும்? அந்த அறையின் அமைதியை முழுக்கவே கிழித்துப் போட்டுவிட்டு கதறிக் கொண்டிருந்தார் அவர். என்னவாயிற்று? சில வினாடிகள் சுரணையற்று நின்றோம் செய்வதறியாமல்! கையில் வைத்திருந்த செய்தித்தாளை முகத்தில் ஒற்றி 'இழந்துட்டோமே! இழந்துட்டோமே' என்றவாறு பிதற்றிக் கொண்டிருந்தார்.

ஏதோ ஒரு தீய செய்தி! காரணமறிய செய்தி தாளை பார்த்தால் போதும்!ஒருவாறு வழி புலப்பட்டதும்,அது அவர் குடும்பத்தினர் குறித்த செய்தியாயிருக்கலாம் என்றெண்ணினேன். கப்பற் படையில் பணிபுரியும் அவரது இளைய மகனோ? இல்லை வளைகாப்பிற்கு வருவதாயிருந்த அவரது கர்பிணி மகளோ ஆபத்திலிருக்கலாம்! அவர் மனைவியும் மருமகளும் பயந்து போய் தூர நின்றிருந்தார்கள். மெல்ல நெருங்கி அவர் தோளைத் தொட்டேன். கண்ணீருடன் நிமிர்ந்தவர்,

"பாரும்மா! இவன பாரு! இந்த முட்டாப் பசங்களுக்கு உணர்வு வரணுமின்னு தன்னையே காவு கொடுத்திருக்கான் பாரு! எத்தன நிதானம்? எத்தன‌ கொள்கைப் பிடிப்பு? சாகும் வரைக்கும் தன்னை தன் இனத்தின் பிரதிநிதியா நெனச்சு வாழ்ந்திருக்கான் பாரு! தியாகி! நெசத் தியாகி! இப்படி ஒரு பிள்ளைய நான் பெத்துக்கலயே! உணர்வுள்ள ஒரு தமிழன் செத்துட்டான்! இழந்துட்டோமே! இழந்துட்டோமே!" திரும்பவும் கதறலானார்.

"எல்லா விசயத்துக்கும் அதிகமா அலட்டிக்கிறதே இந்தாளுக்கு வேலையா போச்சு! ஏய்! நீ டீவிய போடுடீ! சீரியல் பாக்கனும்! நான் கூட‌ என்ன‌மோ ஏதோன்னு" அல‌ட்சிய‌மாய் ச‌க‌ஜ‌மான‌து அந்த வீடு!

கசங்கிய செய்திதாளுக்குள்ளே என் இனத்தின் கம்பீரம் ஒளிர்ந்திருந்தது.

முத்துக்குமார்!

தன் இனத்தின் அழிவுக்கு முற்றுப் புள்ளி வைக்க, ஈழத்தில் இறந்து கொண்டிருந்த மனித நேயத்தை உயிர்பிக்க, தன்னையே பலியிட்ட எழுச்சி மிகு தமிழன். கடைசி மணித்துளி வரையிலும் தன் மரண வாக்கு மூலத்தை மக்களிடத்தில் எடுத்துச் செல்ல துடித்தானே தவிர, பிழைக்க நினைக்கவேயில்லை!

உலகம் ஒரு முறையாவது ஈழம் பிறக்க வழி செய்ததா?

எத்தனை எத்தனை போராட்டங்கள்,மறியல்கள், உண்ணாவிரதங்கள் ஏதாவது ஏதாவது தமிழீழம் உயிர்க்க வழி செய்ததா?

தொட்டுவிடும் தூரத்தில் நீ!

நான் இந்தியத் தமிழனென்றும்

நீ ஈழத் தமிழனென்றும்!

கை பிசைந்தபடி, சர்வ வல்லமை படைத்த விதியை நொந்தபடி,

எங்கள் இழிவான இயலாமை முட்டி தள்ள

எதுவும் செய்ய முடியாமல் ......

மதிப்புமிக்க தமிழர் ஒருவர் சொன்னது, "ஊடகங்கள் தவறான அனுகுமுறையால் பிரசாரத்தால் ஒரு இளைஞனின் உயிரை பறித்துவிட்டன!"

உன் வாக்குமூலத்தை படித்திருந்தால் தெரியும் நீ சாவை எதற்கு எவ்விதம் வருவித்துக் கொண்டாய் என்று!

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினாராம் வடலூரார்!

அதற்குப் பெயர் ஜீவகாருண்யமாம்!

சொல்கிறார்கள் மெத்தப் படித்தவர்கள்! ஆயிரமாயிரம் உயிர்கள் அழிந்து கொண்டிருக்கையில் என்ன செய்தார்கள்? அஹிம்சை தேசம் என்ன செய்தது?
அவர்களுக்காக எல்லாரும் கண்ணீர் மட்டும் சிந்துகையில் உயிரையே தந்து போன மாவீரன் நீ!

மறத்தமிழா!

நீ விட்டுப் போன கனவுகளெல்லாம் பலித்ததா? தெரியாது!

தூங்கிய தமிழன் விழித்தானா? தெரியாது!

மனிதம் மலிந்த தேசத்தில் பிறந்ததாலோ என்னவோ உன் மரணம் வெறும் செய்தியாக போயிற்று!

இன்றைக்கு என்ன சமையல்? அந்த நடிகைக்கும் இந்த நடிகனுக்கும் ஏதோவாமே! அக்கம் பக்கம் புரணி என இத்தனைக்கு மத்தியிலும் உன் தியாகம் பேசுமா? தெரியாது!

சலித்துக் கொள்ள மட்டுமே முடிகிற‌,எதுவுமே செய்ய திரணியற்ற வெற்றுக் கூட்டத்தில் நானும் ஒருத்தி என்கிற குற்ற உணர்வில்,என்னால் ஆன காணிக்கையாய் இந்த கண்ணீர் வரிகள் உன் ஆன்மாவிற்கு!

5 comments:

sathishsangkavi.blogspot.com said...

//தொட்டுவிடும் தூரத்தில் நீ!

நான் இந்தியத் தமிழனென்றும்

நீ ஈழத் தமிழனென்றும்!

கை பிசைந்தபடி, சர்வ வல்லமை படைத்த விதியை நொந்தபடி,

எங்கள் இழிவான இயலாமை முட்டி தள்ள

எதுவும் செய்ய முடியாமல் ......
//

:))))))

கயல் said...

:(((((((((((

ப்ரியமுடன் வசந்த் said...

தூங்கிய தமிழன் விழித்தானா? தெரியாது! //

நோ....
மே பீ செத்திருக்கலாம் உடல் அசைவில்லாத பூத உடல் போல்..

:(

கயல் said...

என்ன‌ சொல்ல‌? :((

முல்லை அமுதன் said...

nantru.
vaazhthukal.
http://kaatruveli-ithazh.blogspot.com/

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!