Saturday, January 9, 2010

கிணற்றுத் தவளை



ஏதாவது ஏதாவது எழுதனும். அப்படியே படிக்கிறப்பவே 'சும்மா கலக்கிட்டடீ'ன்னு தோழிகள் அலறனும். என்ன எழுதலாம்? காதலப் பத்தி? அய்ய! பிரின்சி முன்னாடிப் போய் எப்படி வாசிக்கிறது? அப்பாகிட்டப் போட்டுக் கொடுத்துட்டா? அண்ணன் வேற புதுசா வேவு பாக்க உளவுப் படை தயார் பண்ணிருவான்(!) வேற எழுதனும்.

தமிழ் பத்தி? ம்ம் எழுதலாம். ''ழ' கரம் சரியாவே வர மாட்டேங்குது. எனக்குப் போய் இவ பொண்ணாப் பொறந்துருக்காளே. நாக்குல வசம்ப வச்சுத் தேய்க்க‌' ஆத்திரத்தில் அப்பா கொட்டிய குட்டு இப்பவும் வலிக்குது. வேணாம் இலக்கியச் செய்தியெல்லாம். வம்பு.

வேற ஏதாச்சும்?

ந‌ட்பு ப‌த்தி. ம்ம். பூபால‌ன் அதான் எழுதுறான். ஒரே த‌லைப்பு. சே. ந‌ல்லாயிருக்காது.

பெண்மை,தாய்மை இதெல்லாம். எல்லாரும் பொண்ணு எழுதுற கவிதைனா இத தான் எதிர்பார்ப்பாங்க. வேணாம்.

எது நல்லாயிருக்கும்?இப்படியே துணிகளைத் துவைத்தபடி,இழுத்து சொருகிய பாவடை சட்டையுடன் தோட்டத்து கொசுக் கடியிலும் கனவில் உழன்ற நாட்கள்.பொருளோடு மனனம் செய்ய தினம் ஒரு குறள், அப்பாவின் தினப்படி கட்டளைக்குப் பயந்தே வீட்டு வேலையில் அக்கறை இருப்பதாய் அலட்டிக் கொண்ட என் இலக்கியம் அறியாத வயது.

'க‌டுகு பொரிய‌ல‌ பார்.' 'ப‌ச்சை வாடை போன‌தும் புளி ஊத்து.' 'ஈர்க்குச்சி கீழே விழுது பார். என்ன சந்திரமதின்னு நெனப்போ.' அப்ப‌த்தாவின் வார்த்தைக‌ளை அலட்சிய‌ ப‌டுத்திய‌ப‌டி,'அடுப்ப‌டிகுள்ளேயே முட‌ங்கிப் போவேன்னு நென‌ச்சியா? நாளை பார். உல‌க‌மே என்ன‌ பாக்க‌ போகுது.அப்புற‌ம் பேசிக்கிறேன்' ச‌த்த‌மின்றிச் ச‌ப‌த‌ம் செய்த‌ப‌டி, க‌விதைக்கான த‌லைப்பைத் தேடி,தேடி வெந்நீர் கொப்ப‌ரைக‌ளிட‌மும், ச‌மைய‌ல‌றை தட்டு முட்டு சாமான்களுடனுமான என் புலம்பல்கள் அப்பத்தாவின் கழுகுப் பார்வையில் பட்டதும் அர்த்தமே மாறிப் போயிற்று.

"டேய் ச‌ண்முக‌ம்!  இவ‌ போக்கே ச‌ரியில்ல‌டா. காலேஜுக்கு அனுப்பாதே  அனுப்பாதேன்னு ப‌டிச்சு ப‌டிச்சு சொன்னேன் கேட்டியா. தானா பேசிக்கிறா. சிரிக்கிறா. பொம்ப‌ள‌ புள்ள‌ இப்ப‌டியிருந்தா ஏடாகூட‌மாக‌ப் போகுதுடா!"

"சும்மா இருங்க‌ம்மா. ஒண்ணும் இருக்காது.கேக்குறேன் இப்ப‌வே. இங்க‌ வா."

க‌ண்ணில் நீர்க்கோர்த்து நடுங்கிய‌ப‌டி,"இல்ல‌ப்பா. க‌விதை ஒண்ணு எழுத‌னும் ஒரு விழாவில‌ வாசிக்க‌ . அதுக்குத் தான்." பய‌த்திலா ? ப‌டிப்புப் பறிபோய்விடும் ஆப‌த்திலா? தாரை தாரையாய் க‌ண்ணீர்.

அப்பா அதிசயமாய்ச் சிரித்த‌ப‌டி, "இது என்ன‌ பெரிய‌ விச‌யம். அல‌மாரில‌ இருக்க‌ புத்த‌க‌ங்க‌ள ப‌டி. ம‌.பொ.சி உரைக‌ள்,நா.காம‌ராச‌ன்,உல‌க அர‌சிய‌ல் எல்லாமும் இருக்கு பாரு. ப‌டி. பெரியாரின் சாதீய‌ம்,பெண்ணீய‌ம் எல்லாமும் இருக்கு. க‌க்க‌ன் முத‌ல் காந்தி வ‌ரை எல்லாமும் இருக்கு பார். தோணுனத‌ எழுது. திருத்தித் த‌ர்றேன். அப்புற‌ம் போய் வாசி.ஆனா 'அவை' நாகரீகம் ரொம்ப முக்கியம்"

இப்ப‌டியே என‌க்குப் புத்த‌க‌ங்க‌ள் தோழிக‌ள் ஆயின. வீட்டைத் தாண்டி வெளியே வர விருப்பமேயில்லை. சில‌ப்ப‌திகார‌மும் குறுந்தொகை கூட்ட‌மும் இவ்விதமே என் கூட்டாளிக‌ள் ஆயின‌. அம்மாவின் 'காந்தீய‌ம்' ப‌ற்றிய‌ கொள்கைக‌ள் அர‌ச‌ல் புர‌ச‌லாக‌ செவிக்கு வ‌ந்ததால் காந்தியையே என் க‌விதைக்கான‌ க‌ருப்பொருளாக்கினேன்.

புர‌ட்டிய‌ ப‌க்க‌ங்க‌ளின் வ‌ழியே சில‌ விய‌ப்புறும் உண்மைக‌ள் கிடைக்க‌ப் பெற்றேன். கோட்சேயான‌வ‌ன் ஆரம்பக் காலத்தில் காந்தியின் தொண்ட‌னென்றும் 'ம‌தம்' பிடித்த‌பின் மிருக‌மானான் என்றும். 'ஒரு க‌ன்ன‌த்தில‌றைந்தால் ம‌றுக‌ன்ன‌த்தைக் காட்டு' இது போலும் ந‌டைமுறைக்கு உத‌வாத‌(?) கொள்கைக‌ளைப் பொருட்ப‌டுத்தாத‌ வ‌ய‌து அது. கோட்சே பாவ‌ம் தெரியாம‌ ப‌ண்ணிட்டார் அப்ப‌டின்னு அவ‌ருக்கு வ‌க்கால‌த்து வாங்கிய‌து ம‌ன‌து.

துணி துவைக்கையிலும்,அரிசி களைகையிலும்,வீடு பெருக்கையிலும் க‌விதை குறித்த‌ க‌ன‌வுக‌ள்.இரவு முழுதும் எழுதி எழுதிக் கிழித்த‌ குப்பைக‌ளை அம்மா பார்க்குமுன் அப்புற‌ப்ப‌டுத்தினேன்.முடிவில் க‌விதைக்கான‌ க‌ருப்பொருள் பிடிச்சாச்சு. 'சொர்க்க‌ம் ந‌ர‌க‌ம் ப‌ற்றின‌ கோட்பாடுக‌ளில் ந‌ம்பிக்கை உள்ள‌வ‌ர்களுக்கு ம‌ட்டும்' பீடிகை எல்லாம் போட்டுச் சொர்க்க‌த்திலிருக்கும் காந்திக்கு(?) ந‌ர‌க‌த்திலிருக்கும் கோட்சே எழுதுவ‌தாய் ஒரு க‌டித‌ வ‌டிவில் க‌விதை ச‌ம‌ர்ப்பித்தேன்.

படிக்கப் படிக்கத் தாங்க முடியல நாமளா எழுதினோம்னு ஒரு பெருமிதம் கலந்த கர்வம். அடுத்து வரப் போற விபரீதம் தெரியாம. மூனு பக்கத்துக்கு கவிதை(?) எழுதி அப்பா வரட்டும்னு காத்திருந்தா ஏதோ மாநாட்டுக்குப் போறதா போனவுங்க ரெண்டு நாளாகும்னு தகவல் மட்டும் அனுபிச்சாங்க. என்ன பொறுப்பில்லாத் தனம்? அம்மாவுக்கு இந்தக் கவிதை கதை எல்லாம் படிக்கிறதே பிடிக்காது. என்ன செய்யலாம்? சரி துணிஞ்சு முடிவெடுத்தாச்சு.தப்போ சரியோ ஒரு கை பாத்துடுவோம்.

கல்லூரி வளாகம் களை கட்டுது.எங்கள் கணிப்பொறி துறை சார்ந்த இலக்கிய விழா. கல்லூரி முதல்வர்,துறைத்தலைவர் என எல்லாரும் இருக்க,நிகழ்ச்சியில் நான்காவதா என் கவிதை. மேடையில் என் பெயருக்கு அப்புறம் தோழி பிரசாந்தினி கவிதையின் தலைப்பை வாசிக்கிறா. வெளியில் செல்லவிருந்த முதல்வர் தலைப்பைக் கேட்டதும் திரும்பி வர்றாங்க. காரணம் என்னன்னா அவரு ஒரு காந்தியவாதி. சொந்த வாழ்க்கையிலும் எளிமையைக்  கடைபிடிக்கும் அருமையான‌ கல்வியாளர். தலைப்பு இது தான்.

"காந்தீயத்திற்கு ஒரு கலியுக விளக்கம்"

கிள‌ம்பிப் போயிருவாங்க‌ன்னு ஆர்வ‌மாப் பார்த்தா திரும்பி வ‌ர்றாங்க‌. அய்யோடா! ந‌ல்லா மாட்டிக்கிட்டோம்.முதல் இரண்டு நிமிட‌ம் செய‌ல‌ற்று நிற்க‌, அறிவிப்பாளினி வ‌ந்து சொன்ன‌தையே சொன்ன‌தும் தான் சுர‌ணை வ‌ந்த‌து.போகிற‌ போக்கில் கிள்ள‌ல் வேறு.கவிதை தொட‌ங்குமுன் கடிதம் பற்றி காட்சிகளை விள‌க்கிவிட்டு, நேராய் முத‌ல்வ‌ர் ப‌க்க‌ம் திரும்ப‌வும் அவ்ர் வெகு சுவ‌ராசியமாக‌ கவ‌னித்துக் கொண்டிருந்தார்.

பாதி வ‌ரை முடிந்திருக்கும், லேசாய் நிமிர்ந்து பார்த்தேன். என்னை எரிப்ப‌து போல் அவர் பார்ப்ப‌து தெரிந்த‌து.முச்சு முழுசா நின்னுடுச்சு. ஆகா. ச‌ரியா மாட்டிக்கிட்டோமே. என்ன‌ ப‌ண்ணுற‌துன்னு நெனைச்ச‌ நேர‌த்துல‌ அடுத்த‌ வரி வாசிக்க‌ ம‌ற‌ந்துட்டேன். க‌விதை ப‌டிச்சு முடிச்சாச்சுன்னு ஒரே கைத‌ட்ட‌ல். வீட்டுக்கு அனுப்புறதிலயே குறியா இருந்தவுங்க கைங்கரியம்.

ஆனாலும் விடாம எல்லாத்தையும் எழுதின மாதிரி படிச்சிட்டு கீழே எறங்கி வந்துட்டேன். அதுக்கப் புற‌ம் ந‌ட‌ந்த‌ எதுவுமே க‌வ‌ன‌த்துக்கு வ‌ர‌லை. ப‌ய‌ந்த‌ மாதிரி முத‌ல்வ‌ர் எதுவுமே கேட்க‌ல‌. ஆனா அப்பா தான் பிச்சு வாங்கிட்டார். புதுக்க‌விதைக‌ள் மேலே அவ‌ருக்கு அப்ப‌டி ஒண்ணும் ஈடுபாடில்ல‌. அதுவும் க‌விதை, கோட்சே ம‌ன‌ம் திருந்தி காந்தியால் ஏற்றுக் கொள்ள‌ப்ப‌ட்டான் என்கிற‌ மாதிரி. அம்மாவோட அப்பா ஒரு சுதந்திர போராட்ட தியாகி என்கிற‌ம‌ட்டில் நான் செய்த‌து கொலை பாத‌க‌ம் போல‌ சித்த‌ரிக்க‌ப்ப‌ட்டது வீட்டில். அப்பா வ‌லிய‌ போய் க‌ல்லூரி முத‌ல்வ‌ர்கிட்டே ம‌ன்னிப்பெல்லாம் கேட்டுட்டு வ‌ந்தார். அம்மா ஏதோ குல‌த்தைக் கெடுக்க‌ வ‌ந்த‌ கோடாரிக் காம்பேன்னு எல்லாம் பொறிஞ்சு த‌ள்ளிட்டாங்க‌.

என்ன‌ ந‌ட‌க்குமோன்னு க‌ல்லூரிக்கு போனா,வ‌குப்பில‌ எந்த‌ மாற்ற‌முமில்ல‌. ரொம்ப‌த் தான் எதிர்பாத்துட்டோம்னு ம‌ன‌ச‌த் தேத்திக்கிட்டேன். அடுத்த‌ சில‌ நாட்க‌ள்ல‌, முத‌ல்வ‌ர‌ நேருக்கு நேர் ச‌ந்திக்கும் வாய்ப்பு கிடைச்சுது. "இப்படி வா.அன்னிக்கு விழாவிலே நீ வார்தைக‌ளை கோர்த்த‌ வித‌ம் ந‌ல்லாயிருந்துச்சு ஆனா க‌ருத்துல‌யும் கொஞ்ச‌ம் க‌வ‌ன‌ம் வை. மற்ற‌ப‌டி துணிச்ச‌லா இத‌ பேசினே பாரு பாராட்ட‌த்தான் வேணும்." என்ற‌ப‌டி சென்றார். என‌க்கோ மோதிர‌க் கையால் குட்டுப் பெற்ற‌ ம‌கிழ்ச்சி.

அதுக்கப்புற‌ம் க‌ணிணி என்கிற‌ இய‌ந்திர‌ம‌ய‌ம் என‌க்குள் உள்வாங்கின‌ பின் க‌விதைக‌ள் எப்போதாவ‌து என் நாளேடுக‌ளை நிறைப்ப‌தோடு சரி. அத‌ற்க‌டுத்த‌ ப‌ரிமாண‌த்தை அவை தொட‌வேயில்லை. வலைப்ப‌திவு ஆர‌ம்பித்த‌பின் அவை கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ வ‌ள‌ர்வ‌தை அவ‌தானிக்க‌ முடிகிற‌து.

சில‌ த‌வ‌றுக‌ள், நாக‌ரீக‌ பிச‌வுக‌ள், க‌விதை என்கிற‌ பிடியில் பெண்மைக்குரிய‌ அட‌க்க‌ம் மீறிய‌ சில‌ வார்த்தைக‌ள் என இந்த கிறுக்கல்களிலும் பிழைகள் இருக்க‌க் கூடும்.கார‌ண‌ம் எதுவெனில், எல்லாவித‌மான‌ மனநிலையிலும் க‌விமொழித‌ல் கைவ‌ர‌ வேணுமென்கிற‌ ஆர்வம். அதுவே கோளாறு.

அய்ய‌,காத‌ல் தோல்வியா? யார‌ப் பாத்து காப்பிய‌டிச்சே? நெச‌மாலுமே ச‌மூக‌த்து மேல‌ கோவ‌ம் இருக்கா?இல்ல சீனா? எனக்கு டமீல்னா கொஞ்சம் அலர்ஜி . அது இது போலும் சில இழிப்புரைக‌ள். செவிடாய் ஊமையாய் இருக்க‌த் தான் முடிகிற‌தே த‌விர வேறொன்றும் சொல்வத‌ற்கில்லை.

அப்பாவின் அலமாரியில் உள்ள புத்தகங்கள் எண்ணிக்கை நூறுக்குள் அடங்கிவிடும்.அதில் நுனிப்புல் மேய்ந்தபடி கிறுக்கிய போதிருந்த துணிவு, ஓரளவு அனுபவம், கொஞ்சமேனும் மொழியறிவு,ஆழப் படித்த புத்தகங்கள், இப்படி அடிப்படை எல்லாம் கைவரப் பெற்றும் துணிவு ஏனோ துணை வர மறுக்கிறது. அந்தக் கிணற்றுத் தவளையின் கனவுகள் இன்னும் நிறைவேற்றப்படாமலேயே.

அதுல முதலாவது,
அப்பா நல்ல கவிதையின்னு சொல்லுற மாதிரி ஒரு கவிதை புனைய வேணும். சீரிய கருப்பொருளோடு கூடவே தெளிவான இலக்கண நடையும் சேர்த்து மரபு அடிபேணி.

நிறைவேற உங்கள் வாழ்த்துக்களையும், வழிகாட்டுதலையும் எதிர்பார்த்தபடி
இனிவரும் படைப்புகள் அனைத்தும் தாங்களின் மேலான பார்வைக்கு. திருத்தி மதிப்பிடுங்கள். இலக்கியத்தில் வெளியுலகம் பார்க்கத் துடிக்கும் எனக்கு நட்பாய்க் கைகொடுங்கள். தவறெனில் தவறாது அடிக்கோடிடுங்கள்.

16 comments:

Thekkikattan|தெகா said...

நல்லாருக்கு... அந்தக் கவிதையை இங்கயும் போடுறது.

கயல் said...

//
Thekkikattan|தெகா said...
நல்லாருக்கு... அந்தக் கவிதையை இங்கயும் போடுறது.
//
அடுத்த இடுகையா போட்டுட்டா போச்சு! நன்றிங்க!!

நசரேயன் said...

//தவறெனில் தவறாது அடிக்கோடிடுங்கள்//

இல்ல ஆட்டோ எடுத்திட்டு தான் வருவோம்

கயல் said...

//
நசரேயன் said...

//தவறெனில் தவறாது அடிக்கோடிடுங்கள்//

இல்ல ஆட்டோ எடுத்திட்டு தான் வருவோம்
//நீங்க‌ வார‌தே பெருசுங்க‌! திட்டினாலும் குட்டினாலும் வாங்கிற‌துன்னு முடிவுக்கு வ‌ந்துட்டோமுங்க‌! மோதிர‌ கை பாருங்க‌! :-‍) அண்ணாச்சி, ஆட்டோல‌ வ‌ருவீக‌ ச‌ரி அருவா எல்லாம் இல்லாம‌ தானே! என‌க்குத் தெரியும் நீங்க‌ ரொம்ப‌ ந‌ல்ல‌வ‌ரு!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)
\\Thekkikattan|தெகா said...
நல்லாருக்கு... அந்தக் கவிதையை இங்கயும் போடுறது.//

ஆமா வழிமொழிகிறேன்.

அண்ணாமலையான் said...

ம் நடக்கட்டும்...

கலகலப்ரியா said...

aiyayo.. ivlo periya idugaiyaa... vanthu padichukkaren... avvv..

கலகலப்ரியா said...

கயல்... அருமையோ அருமை..! :)...

மாதேவி said...

படிக்கக் காத்திருக்கோம்.

கயல் said...

//
T.V.Radhakrishnan said...
நல்லாருக்கு
//

வாங்க!நன்றி!

கயல் said...

//
முத்துலெட்சுமி/muthuletchumi said...
:)
\\Thekkikattan|தெகா said...
நல்லாருக்கு... அந்தக் கவிதையை இங்கயும் போடுறது.//

ஆமா வழிமொழிகிறேன்.
//

கட்டாயமா போடுறேன்! ஆனா கொஞ்ச நாளைக்கு அப்புறம்!

கயல் said...

//
அண்ணாமலையான் said...
ம் நடக்கட்டும்...

//

நன்றிங்க!

கயல் said...

//

கலகலப்ரியா said...
aiyayo.. ivlo periya idugaiyaa... vanthu padichukkaren... avvv..

January 9, 2010 3:20 AM
கலகலப்ரியா said...
கயல்... அருமையோ அருமை..! :)...
//
நன்றிங்க!

கயல் said...

//
மாதேவி said...
படிக்கக் காத்திருக்கோம்.
//
நன்றிங்க!

ப்ரியமுடன் வசந்த் said...

அப்பா நல்ல கவிதையின்னு சொல்லுற மாதிரி ஒரு கவிதை புனைய வேணும்! சீரிய கருப்பொருளோடு கூடவே தெளிவான இலக்கண நடையும் சேர்த்து மரபு அடிபேணி!
//

ஆரம்பிச்சிட்டீங்க பின்ன என்ன தொடருங்க தாயி...

:)

கயல் said...

//
பிரியமுடன்...வசந்த் said...
அப்பா நல்ல கவிதையின்னு சொல்லுற மாதிரி ஒரு கவிதை புனைய வேணும்! சீரிய கருப்பொருளோடு கூடவே தெளிவான இலக்கண நடையும் சேர்த்து மரபு அடிபேணி!
//

ஆரம்பிச்சிட்டீங்க பின்ன என்ன தொடருங்க தாயி...

:)

//
நன்றி வசந்த்!

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!