Sunday, April 5, 2015

காணி நிலம்

கொஞ்ச நாளாவே இயற்கை விவசாய பைத்தியம் முற்றிவிட்டது. விழித்திருக்கும் இரவுகளில் ஒருங்கிணைந்த விவசாயம் குறித்த ஆராய்ச்சிகள் தான். பெரும் ஆய்வுக் கட்டுரை எழுதுமளவு மனதைத் தயாரித்திருக்கிறேன். கணினித் துறையும் அதிலிருக்கும் நிரந்திரமின்மையும் இப்படி நெட்டித்தள்ளியதெனலாம். அப்பத்தாவைப் போல் ஆச்சியைப் போல் அமைதியாக நாட்களை ரசிக்க வேண்டிய பேராவலாய் இருக்கக் கூடும். அவர்கள் உயிருடன் இருந்தால் இப்படியான எண்ணங்கள் என்னுள் எழா வண்ணம் அறிவுரை மற்றும் பேருரைகளை நிகழ்த்தியிருப்பார்கள். அவர்கள் காணாத உலகத்தை உயரத்தை நான் தொட வேண்டுமென்றும் அது படிப்பால் சாத்தியமென்றே ஊட்டி வளர்த்தவர்கள். ஆனால் ஏனோ சேற்றில் கால் வைத்தே வாழ விருப்பப்படுகிறது மனம்.
ஒரு பசுஞ்செடியின் துளிர்ப்புக்கு அத்தனை கொண்டாடும் இம்மனதை வைத்துக் கொண்டு பொருளாதாரத்துக்கென போராடும் நடுத்தரவாசியாகவும் வாழ வேண்டியிருக்கிறது.
ம்ம்...
கனவுகள் கனவுகள் தான். சாத்தியக்கூறுகள் பற்றிய கவலைகளின்றி ஆழ்மனத் தூண்டலில் விளையும் கனவுகள். சில கவிதையாகவும் சில ஓவியமாகவும் உருப்பெற்றது போக மீந்திருக்கும் ஒரு கோடிக் கனவுகள். மிதிவண்டிச் சக்கரத்தில் நகர்கிறேன் தான் ஆனாலும் கனவுகள் மட்டும் ஆகாயவிமானத்தில் பயணிக்கின்றன.காதுமடல் பிடித்து நிகழ்வுக்கு அழைத்துவரும் பணி கணவனிடத்தே எப்போதும் தொடங்கும்.
இதோ அழைப்பொலி ..
‘ஏய்... குழம்பு கொதிச்சிடுச்சு பாரு’
இப்போதைக்கு இந்த வரிக்குள் மூழ்கி பாரதியாய் மாறிவிடுதல் சாத்தியமே...
காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும்
அங்குத் தூணில் அழகியதாய் நன்மாடங்கள் துய்ய நிறத்தினவாய்
அந்தக் காணி நிலத்திடையே ஓர் மாளிகை கட்டித் தரவேண்டும்
அங்குக் கேணியருகினிலே தென்னைமரம் கீற்று மிளநீறும்
பத்துப் பன்னிரண்டு தென்னைமரம் பக்கதிலே வேணும்
நல்ல முத்துச் சுடர்போலே நிலாவொளி முன்பு வரவேணும்
அங்குக் கத்துங் குயிலோசை சற்றே வந்து காதிற் படவேணும்
என்றன் சித்தம் மகிழ்ந்திடவே நன்றாயிளந் தென்றல் வரவேணும்
பாட்டுக் கலந்திடவே அங்கே யொரு பத்தினிப் பெண்வேணும்
எங்கள் கூட்டுக் களியினிலே கவிதைகள் கொண்டு தரவேணும்
அந்தக் காட்டு வெளியினிலே அம்மா நின்றன் காவலுறவேணும்
என்றன் பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித் திடவேணும்
- நிகரில்லா மாமணி பாரதி

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!