Friday, April 17, 2015

ஆதியடிமைகள்

வசந்தசேனையின் முத்துப்பல்லாக்கில்
இரண்டாமடுக்கு கானகப் போரில்
கைபற்றிய முத்துகளாலானது
மூன்று நான்காம் அடுக்குகள் 
ஏதோவொரு தீவிலிருந்து
திருடப்பட்டது
கொள்ளையர் உபயம்
முதலடுக்கு உப்புநகரத்தில்
முதலையின் வியர்வையில்
பழுத்தது
மார்தொடும் ஆரமோ
முகலாய அரசிகளிடமிருந்து
பெற்றதாம்
வளை முத்துக்கள்
இடை முத்துக்கள்
காதணி முத்துக்கள்
விரலணி முத்துக்கள்
ஒவ்வொன்றுக்கும்
ஒவ்வொரு கதை
பன்னெடுங்கால வரலாறைச்
சுமப்பதெனவே
பெருமிதங் கொண்டனர்
தூக்குத் தூக்கிகள்
பல்லக்கு நிரந்தரம்
முக்காடிட்ட பேரழகிகள்
மாறிக்கொண்டேயிருக்கிறார்கள்
எல்லோருக்கும் ஒரே பெயர் தான்
வல்லமை மிக்க சமூகம்
நீந்திக் களிப்பதற்கும்
அவர்தம் குலவிளக்குகள்
காறி உமிழ்வதற்கும்
ஆதியடிமைகள் அவசியம் தானே?
பெண்ணுடல் மீது
ஆணாதிக்கம் தன் வக்கிரத்தை
புகழாய்
காமமாய்
வர்ணனையாய்
இரட்டுற மொழிதலாய்
இன்னும் பிறவாய்
பதித்துக் கொண்டே தானிருக்கிறது
புகழ் மிகுத்தது தன்னுடல்
வெகுமதிகள் முத்தென்று
மின்னி மறைகிறது
இளக்காரப் புன்னகை
அவள் முகத்தில்
தன்னிடமிருக்கும் சுதந்திர மனதை
கொய்திடவல்ல காதலுடைத் தலைவன்
இன்றுவரை பிறக்கவில்லையென்றே
செறுக்குடன் இறக்கிறார்கள்
தொன்மரபின் வசந்தசேனைகள்

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!