Thursday, April 16, 2015

செய்தீ

குதறிக் கொண்டிருக்கும்
வெறிநாயின் பற்களில்
சிக்குண்ட சதை
முன்னொரு காலத்தில்
மயிர் மழித்து 
திரவியங்கள் பூசி
வழவழவென
அழகியுடல் தாங்கி
வீற்றிருந்த வெண்ணிற தந்தம்
உறுப்புகள் சிதறிக்கிடந்த
புதர் நடுவில்
நங்கையவள் சிதையுண்ட
சிகை
கூட்டமாய் வந்திறங்கி
கூச்சமின்றி புணர்ந்து
சாட்சிகள் ஏதுமின்றி....
சில மதுக்குப்பிகள்
சில வெண்சுருட்டு
மீந்து கிடந்த நொறுவகைகள்
கொண்டாட்டத்தின்
அடையாளங்கள்
அன்றாடம் சந்திக்கும் நிகழ்வுதான்
அவருக்கு ஏதாவது சிக்குமாவென்று
தேடிக் கொண்டிருக்கிறார் அதிகாரி
காணொளி செவ்விக்கு
கறைவேட்டிகள் வரிசை
நள்ளிரவு வேலைக்குச் சென்றது
குற்றமென நீளும் ஈயவாதிகள்
புறநகர் தாண்டியொரு
பன்னாட்டு நிறுவனத்தில்
இல்லாத வசதிகளுக்கென
எறும்பாய் உழைக்கும்
அபலை சார்ந்தவெளி
வேரற்று தள்ளாடுகிறது
இன்னமும் வீட்டிற்கு வராத அம்மாவுக்கென
காத்திருக்கும் மகளிடம்
வயோதிகத்தில் தடுமாறும் பெற்றவர்களிடம்
காதலுடன் காத்திருக்கும் கணவனிடம்
எப்படி சொல்வது
வல்லூறுகள் கூறுபோட்ட
வசந்தியின் முடிவை?

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!