Saturday, July 17, 2010

சொல்லத்துடிக்குது மனசு!

”எல்லாம் எடுத்தாச்சா?” அத்தை தான் இது, ”ம்ம்”  அய்யோ! தெரியலயே!

என்ன நான்? நானா இப்படி? ஒரு தடவைக்கு மேலே சரிப்பாக்குறது இது தான் முதல் தடவை! ஒரு இரயில் பயணத்துக்கான எல்லா ஏற்பாடுகளும் என்னைச் சுற்றி ஆரவாரமா நடந்தாலும் மனசுக்குள்ள ஒரு சின்ன புல்லாங்குழல் அது பாட்டுக்கு உருகிக்கிட்டு தான் இருக்கு!கால்கள் நடந்தாலும் மனசு மட்டும் காத்துல பறக்குற மாதிரி. ஏனோ தெரியல இங்கேயே இருந்துடலாம் போல.எல்லாத்துக்கும் காரணம் அவன் அவன் .... அவன் மட்டுமா .. அது மட்டும் தானா?

”கவுசி!ஏய் கவுசி!எத்தன தடவை கூப்பிடுறது? என்ன பண்ணுற அங்க?”

அத்தை அழைக்கவும் சட்டென சுதாரித்தேன்.

“இல்ல எல்லாஞ் சரியா இருக்கான்னு ஒரு தடவ பாத்துக்கிட்டேன்.”

“சரி சரி ரெண்டு நாளாகும் வீட்டுக்கு போக...சாப்பாடு எல்லாம் கட்டி வச்சிட்டேன்.வேற என்ன வேணும் சொல்லு.மாமாவ கடைக்கு அனுப்பறேன்.”

”ஒண்ணும் வேணாம் அத்தே. போகவே மனசில்ல. உங்க கூடவே இருக்கணும் போல இருக்கு.”, வார்த்தைகள் விசும்பலோடு வந்தது.

“என்னடா குட்டி. இதுக்கு போய் கண் கலங்கிட்டு.படிப்பு முடிஞ்சு இங்க தானே வேலை செய்யப் போற. நல்லபடியா படி. அப்பா அம்மாவ கேட்டதா சொல்லு.அடுத்த பரீட்சை லீவுக்கு இங்க தான் வரணும் சரியா.கல கலன்னு இருந்துச்சு. நீ இல்லாம திரும்பவும் வீடே வெறிச்சுன்னு ஆயிடும்.அப்பாவுக்கும் மகனுக்கும் வெளிய நெறைய வேலை.கம்ப்யூட்டரே கதி..எப்பவும் பிஸி தான்.ம்ம்ம். நான் தான் நீயில்லாம ரொம்ப தவிச்சுப் போவேன்.”

அத்தையும் கண்கலங்கவும் பேச்சை மாற்ற எண்ணி,

“கார்த்திக் எங்க அத்தை? ஊருக்குப் போறேன்னு சொல்லிட்டு வர்றேன்”

“அவன் அந்த லேப்டாப்போட தான் மல்லுக்கட்டிக்கிட்டு இருப்பான்.மேல போயி பாரு.”

அத்தை அப்பாவின் அக்கா. தன் கணவரோடும்,ஒரே மகனோடும் விசாகப்பட்டிணத்தில் வசிப்பவள்.மாமா ஒரு ராணுவ அதிகாரி என்பதால் இந்தியா முழுதும் வசிக்க வாய்ப்புக் கிடைத்தது.சரளமாக எல்லா இந்திய மொழிகளும் அங்கு புழங்கும். அத்தை மாதிரி ஒரு பூரணத்துவமான பெண்ணைப் பார்ப்பது அரிது.அழகுணர்ச்சி மிக மிக அதிகம். அந்த வீட்டின் ஒவ்வொரு பொருளும் மிகக் கச்சிதமாக இருக்கும்.தோட்டம்,பூஜையறை,சமையலறை எல்லாமும்,எல்லாமும்.

நான் சரியான லூசுங்க. பின்ன, எத எப்ப உங்க கிட்ட சொல்லணும்கிற அறிவிருக்கா பாருங்க. ஒரே அத்தை புராணமாயிருக்கா? ம்ம். என்னங்க செய்யுறது,பாசம் கண்ண மறைக்குது. அழகான அறிவான அம்சமான பையன பெத்தவங்குறதுனால எல்லாம் இல்லங்க. நெசமாவே அத்தையின்னா எனக்கு உயிர். பெண் குழந்தையே இல்லாத அத்தைக்கும் நான்னா கொள்ளைப் பிரியம்.

சரி வாங்க நம்ம ... ம்ம்ஹீம் என் கார்த்திக்கை கொஞ்சம் பாக்கலாம்.

********************

அதோ அவன் தான் என் கார்த்திக். அலைஅலையான கேசம் நெற்றியில் தவழ,வலிமையான புஜங்களும் அகன்ற மார்பும்,எப்போதும் கேலியாய் சிரிக்கும் உதடுகளுமாய் இருக்கும் அவன் ஒரு கணிணிக் காதலன். இந்த பதினைஞ்சு நாளா எனக்கும்.பெரிய ஏற்றுமதி நிறுவனமொன்றின் துடிப்பான இளம் அதிகாரி. நல்லா கிடார் வாசிப்பான். அருமையா பாடுவான்.மேற்கத்திய நடனத்தில் ஏதோ படித்தானாம்.பெரிசா சொன்னாங்க எல்லாரும்.மாமாவும் இவனும் பேசிக்கிறப்போ எல்லாம் இலக்கியம் தூள் பறக்கும்.ஆனா நமக்கு அதெல்லாம் புரியாதுங்க. எல்லாம் இங்கிலீசா இருக்குமுல்ல. எங்கிட்டு புரிய.ஆனா ஒரே ஒரு குறை தான்.அவன் சரியான அம்மாபுள்ளை.

“அத்தான். உள்ள வரலாமா?”

“வாடி! என்ன மரியாதை எல்லாம் தூள் பறக்குது. அத்தான்! ஹா ஹா! ம்ம் நேத்து சாயந்திரம் கூட எருமை மாடுன்னு திட்டினதா ஞாபகம்! ம்ம் என்ன விசயம்?”

“உனக்கு போய் மரியாதை தந்தேன் பாரு. என்ன எதாலயோ அடிச்சுக்கணும். தடிமாடு. எருமை மாடு.”

“பார்த்தியா எங்க போனாலும் உன் ஊரு புத்தி போகுதா பாரு. மாடு ஆடுன்னு தான் திட்டத் தோணுதில்ல.ஹா ஹா ஹா.” , கணிணித்திரையிலிருந்து பார்வை விலகாமல் பதில் சொன்னவன்,கேலியாய் சிரித்தபடி நிமிர்ந்தான்.

“ஷ்ஷ்! போதும் நிறுத்து! நான் உன்கிட்ட ஊருக்கு போறேன்னு சொல்லத்தான் வந்தேன்.”

“ம்ம்.சரி. அப்புறம்?”

மார்புக்கு நேராய் கைகளைக் கட்டிக் கொண்டு, விசமமாய் பார்க்கவும் என்னவோ போலாயிற்று இவளுக்கு.தடுமாறி சுதாரிக்கவும் அவன் கண்களில் நக்கல் தொனியில் மீண்டும் சிதைந்து போனாள்.

“அப்புறம் ஒண்ணுமில்ல.வர்றேன். காலையில ஆறு மணிக்கு இங்க இருந்து கெளம்புறேன்”

“அப்பாடா! ஒரு பதினஞ்சு நாளா என்னப் பிடிச்ச சனி இன்னையோட ஒழியுது.”

“அவ்வளோ கஷ்டப்பட்டியாடா? ம்ம்ம்? இனிமே நான் இங்க வரவே மாட்டேன் பாரு. ரொம்ப சலிச்சுக்காத”

“என்ன அழப்போறியா? கீழே போய் உன் அருமை அத்தை மடியில படுத்திட்டே அழு. இங்க ஆரம்பிச்சிடாதே. போம்மா போ”

என்ன திமிரு. கான்வெண்ட் கலாச்சாரம். கொஞ்சமாவது மரியாதை தெரியுதா பாரு. எப்ப பாத்தாலும் மிசினோட மல்லுக்கட்டி மல்லுக்கட்டி மனசே இல்லாத மனுசனாயிட்டான் போல. சே! ஏண்டா நீ என்ன புரிஞ்சுக்கவே மாட்டேங்குற? இங்கயே இருன்னு சொல்லமாட்டியான்னு இருக்கு. பாத்துட்டே இரு. இங்க வராம,நான் சென்னையிலயே ஒரு நல்ல வேலை பார்த்து, நல்லா சமபாதிச்சு,உனக்கு முன்னாடி கார்ல வருவேன் பாரு.ஆனாலும் முன்ன மாதிரி நான் இல்லயோ?அம்மா கண்டுபிடிச்சிடுவாங்களோ? ஏன் இப்படி.. ஆனா நான் அழவெல்லாம் மாட்டேன். போறப்போ கூட உன்கிட்ட சொல்ல மாட்டேன் பாரு.

சொல்லலன்னா கூட நீ கவலையா படப்போற?

ம்ம்! நான் அவனால லூசாயிட்டேன்னு முன்னுக்குப் பின்னா மேல உள்ள பத்திய படிச்சாவே புரிஞ்சிருக்குமே! ஆனா அந்த பக்கம் எப்பவும் சிகப்பு கலருல்ல தான்பா லைட் எரியுது. என்ன செய்ய அத்தைக்கு நான் மகளா மட்டும் தான் இருப்பேன் போல. இவனுக்கு?

**************************

இன்னும் 12மணி நேரம் தான்.அப்புறம் இவனை எப்போ பார்ப்பேனோ? இன்னும் ஒரு வருசமாகும் நான் இங்க வர. அதுக்குள்ள அதுக்குள்ள.. அன்னிக்கு அவன் ஆபிஸ்லேர்ந்து ஒரு பொண்ணு பேசிச்சு. சூப்பரான பேரு...ஆங் ‘லீனா’. ஆளு கூட சூப்பரா இருந்துச்சு. குட்டைப் பாவாடையும் ஒட்டிய சட்டையுமா. இங்க எல்லாப் பொண்ணுகளும் ரொம்ப அழகு தான் இல்ல. இப்படி வளந்தவனுக்கு எப்படி என்னப் புடிக்கும்? இவன் வேற எப்ப பாத்தாலும் அமெரிக்காவில பொறந்தமாதிரி டஸ்ஸு புஸ்ஸுன்னு பீத்திக்கிட்டு அலையுறான்.அத்தையக் கூட ‘அம்மான்னு’ அழகா கூப்பிடுறதில்ல. ‘மாம்’ன்னு தான் கூப்பிடுறான். இவனெல்லாம் எங்க ஊருக்கு கூட்டிக்கிட்டுப் போயி மந்திரிக்கணும்.நாக்குல வசம்ப வச்சு தேய்க்கணும்.என்ன தான் கடலியல் துறையில் முதுகலை படித்தாலும் அத்தனை ஆதிக்கம் இல்லை எனக்கு ஆங்கிலத்தில்.இந்தக் குறை இவனிடம் பல முறை பல்பு வாங்கியபோதே தெரிந்தது.இத மொதல்ல சரி பண்ணணும்.

”அத்தை நீங்க வரலையா? இப்படியே இருக்கீங்க?கெளம்பல?”

“ம்ம்! யாரு தான் நான் சொன்னத கேக்குறா? மரியாத தெரியாத புள்ளையின்னுல்ல பேரு வாங்கப் போறான்”

“யாரு என்ன? புரியல அத்தே!”

“ம்ம்! இரு இந்தா வர்றேன்”

உள்ளே சென்ற அத்தையை குழப்பமாய் பார்த்தபடியே தயாரானாள் அரை மனதோடு.

சத்தமாய் கார்த்திக்கின் அறையில் மாமா கத்துவது கேட்டது. விடுவிடுவென மாமா படிகளில் இறங்கி வந்தார்.

“காமாட்சி! இவன் என்ன இப்படி பிடிவாதம் பிடிக்கிறான்? நீ சொல்லு வந்து...”

“நெறைய சொல்லிட்டேன்.கேட்டாத் தானே! நாம தாங்க செல்லம் குடுத்து கெடுத்துட்டோம்.”

“அதில்ல நாஞ் சொல்ல வந்ததது. இப்போ வேணாமுன்னு தான். அவளும் கொஞ்ச நாள் இவங்கிட்ட சிக்காம நிம்மதியா இருக்கட்டும்.”

“ம்ம்..திடு திப்புன்னு கல்யாணம்னா சொந்தகாரங்கெல்லாம் என்ன பேசுவாகளோ!ஏதோ கசமுசான்னு நெனச்சுக்க மாட்டாங்க.”

கடவுளே! என்ன நடக்குது இங்க? கார்த்திக் யாரையோ கல்யாணம் செய்திக்குவேன்னு அடம்புடிக்கிறான் போல. பேச்சிலிருந்து அத்த மாமாவுக்கு சம்மதம் மாதிரி தெரியுது.கசமுசான்னு.... அய்யோ!அப்போ நீ எனக்கில்லையா? இந்த சம்பாஷைணையும் காதில் ஏறவே இல்ல அதுக்கப்புறம். தலை கிறுகிறுவென சுற்ற படுக்கையில் சரிந்தாள்.

*************************

விடியக் காலையிலேயே ஒரு பரபரப்பு தெரிந்தது அந்த வீட்டில். மாமாவைக் காணவில்லை.

அத்தை சமையலறையில் இருப்பது புரிந்தது.

”அம்மா இந்த லூச தண்ணி தெளிச்சி எழுப்புங்கம்மா! ஊருக்கு போற பதட்டமே இல்லாம எப்படி தூங்குது பாருங்க!”

“சாரி அத்தே! கொஞ்சம் லேசா தலைவலி அதான்”

“ம்ம்! முகம் அலம்பினா எல்லாம் சரியாயிடும்.போ! சூடா ஒரு டீ போட்டு எடுத்துட்டு வர்றேன்”

அத்தை நகரவும், “சரி நீ வெளிய கெளம்புரியா கார்த்திக்? மாமா தான் வர்றாங்களா என்னை வழியனுப்ப?”

“இல்லப்பா! யாரும் வரல. நான் தான் உன்னக் கொண்டு போய் விடனும்.அப்பா ஏதோ அவசர வேலையா வெளியே போகனுமாம்.ஏன் உன்ன வழியனுப்ப ஒரு ஊரே வரணுமா? உம்மூஞ்சிக்கு நான் மட்டும் போதும்”

அத்தனை ஆர்வமும் சட்டென வடிந்தது. நேற்று வரை என்னை மகள் மகள் எனக் கொண்டாடிய மாமாவுக்கு இன்னிக்கு ஏதோ திடீர் வேலை. இந்த அத்தை ஏதோ விட்டேத்தியாவே பேசுறாங்க. என்னதான் இருந்தாலும் நான் இவங்களுக்கு தூரம் தானே இப்போ. கண்ணீர் அரும்பியது. புரிந்தும் புரியாத மாதிரி நடிப்பது எனக்கு ரொம்ப கடினம்.

”நானே போயிக்கிறேன். நீ ஒண்ணும் வர வேணாம்.யாரு வேலையும் கெட வேணாம் என்னால.”

“அடேயப்பா! தன்மானத் தமிழச்சி.சரி போ! யாரு வேணாம்னா?”

“இந்தா டீ சாப்பிடு! இதமா இருக்கும்.” பரிவோடு தலைவருடியபடி அத்தையின் அருகாமை இன்னும் கோழையாக்கியது. மெதுவா,

“மாமாவால வர முடியலைன்னா நானே போயிக்கிறேன் ஸ்டேசன் வரையும். இவன்... இவர் வர வேண்டாம். நீங்களே சொல்லிடுங்கத்த!”

”இவரா! அதுக்குள்ளேயுமா? ம்ம்... சரி சரி..அவ தான் சொல்லுறாள்ல நீ போக வேணாம் கார்த்திக் இங்கயே இரு.” நமட்டுச் சிரிப்புடன் அத்தையின் கேலி எதுவும் ரசிக்கவில்லை
இவளுக்கு.

”விடுங்கம்மா! இந்த லூசு பேச்சக் கேட்டுக்கிட்டு நீங்க வேற...”

”இன்னொரு தடவ லூசுன்னு சொன்னே அவ்ளோதான்”

“என்ன சொல்லாட்டி மட்டும் டைட்டாயிடுவியா என்ன?அப்படித்தான் சொல்லுவேன். லூசு... லூசு... லூசு.....”

மாமா அவசரமாய் உள்ளே நுழைந்தார்.

”என்ன சத்தம். கவுசி கெளம்பு!எல்லாம் சரியா இருக்கா ஒரு தடவ பாத்துக்க!கார்த்திக் நீயும் தான் சீக்கிரம்”

“மாமா! டிக்கெட் தான் இல்ல. உங்க கிட்ட தானே இருக்கு. இருக்கா?”

”கார்த்திக் கிட்ட இருக்கும்மா!”

மடமடவென தயாரானாள். அதிசயமாய் அவனும் அவளும் ஒரே நிறத்தில் உடையணிந்திருந்தார்கள்.

வழக்கமான விடைபெறுதலை விடவும் கனமான ஏதோ ஒன்று. இந்த பாசத்துக்கும் அருகாமைக்கும் எவளோ ஒருத்தி. அது நானில்லை. மனம் சட்டென இறகுகளை உள்வாங்கி கவலையாய் நிகழ்வுகளோடு இரண்டற கலந்தது.

மணி காலை : 6:35.

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்.வண்டி வந்ததும் குறிப்பிட்ட பெட்டி, இருக்கை எல்லாம் தேடித்தேடி அமர்ந்தார்கள்.

மாமா வெளியே நின்று கொண்டிருந்தார். கார்த்திக் சாமான்களை அடுக்குவதில் குறியாய் இருக்க,இவளோ உணர்வேயின்றி சிலையாய் இருந்தாள்.மாமா ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தார். எதுவும் காதில் வாங்காமல் தலையை மட்டும் அசைத்துக் கொண்டிருந்தாள். எதோ உள்ளுணர்வு குறுகுறுக்க நிமிர்ந்தவள் அவன் கேலியாய் சிரிக்கவும் கண்ணீர் தழும்ப மவுனமாய் தலைகுனிந்தாள்.

பதினைந்து நிமிடங்கள் கழிந்திருக்கும்.வண்டி நகரத் தொடங்கியது.அப்போது தான் சுரணை வர,

“மாமா டிக்கெட் எங்க? கார்த்திக் டிக்கெட் எங்க?ஏய் வண்டி கிளம்புது... நீ போகலையா? என்னடா சிரிக்குற.. ப்ளீஸ் சிரிக்காம டிக்கெட் கொடு!மாமா மாமா..” மாமா புள்ளியாய் மறைந்த்தார். வண்டி வேகமெடுத்தது. ஏதோ புரிய ஆனாலும் உண்மையா என்கிற குழப்பம் மேலிட அவனை பதற்றமாய் பார்த்தாள்.

”நீயும் வர்றியா ஊருக்கு?விளையாடாத. டிக்கெட் எங்க காட்டு பார்க்கணும்?”

“ம்ம்!இப்பத்தான் மகாராணி கனவிலேர்ந்து நனவுக்கு வந்தீங்களோ?அப்பா இவளோ நேரம் காட்டுக் கத்தா கத்திட்டிருக்கார் நீ பாட்டுக்கு என்னய சைட் அடிச்சிட்டிருக்க! அவருக்கு புரிஞ்சிடுச்சு!சே என்ன பொண்ணுடீ நீ? கூட வர்றவன்கிட்டயே போயிட்டு வர்றேன்னு சொல்லிட்டு வர்றா”

”ஆமாடா நான் பொண்ணே இல்ல.இவரு பெரிய மன்மதரு சைட் அடிக்கிறாங்க.நில்லு நில்லு என்ன புரிஞ்சிடுச்சு?”

“நம்ம பையன் விரிச்ச வலையில கவுசி விழுந்திட்டான்னு அப்பாவுக்கு புரிஞ்சிடுச்சு!”

”யாரும் விழல.”

“நெசமாவா? ஆனா உன் கண்ணு வேற சொல்லுதே!பொய் பேசுற இந்த இதழ்களுக்கு எப்பவும் ஒரே தண்டனை தான்.”

“என்ன தண்டனை?”

“ம்ம் எப்பவும் என் இதழ்களின் அரவணைப்பில் இருப்பது!அதுக்கு தான் ...அந்த ராட்சசியோட அப்பாகிட்ட அனுமதி கேக்கப் போறேனாக்கும்”

“ஏண்டா பொய் சொன்ன?என்னமா நடிச்ச? சே நீ மனுசனே இல்ல! அத்தை மாமா கூட... அய்யோ என்ன நெனச்சிருப்பாங்க?ச்சீய்” அழகாய்ச் சிணுங்கி அவன் தோளில் சரிந்தாள்.

அந்த இளம் ஜோடிகளின் சந்தோச சிணுங்கல்களை சுமந்தபடி, ஒய்யாரமாய் விசிலடித்தவாறு பயணித்தது தொடர்வண்டி.

8 comments:

கலகலப்ரியா said...

ஆகா...கதாசிரியை கயல்... நல்லாகீது...

நசரேயன் said...

//நான் சரியான லூசுங்க//

தனியா சொல்லனுமா என்ன ?

நசரேயன் said...

//ஆகா...கதாசிரியை கயல்... நல்லாகீது//
ஆமா .. ஆமா

கார்க்கிபவா said...

நல்லா இருக்குங்க. சில டவுட்டு

// அந்தமானில்
வசிப்பவள்//

இங்க இருந்து கண்யாகுமரி எக்ஸ்பிரஸ் வருமா??????

அப்புறம், அந்த குழப்பத்திலே பையன் கவுசிக்க்கிட்ட சிக்கிட்டானு தெரிஞ்சிடுச்சு. அதனால் தொடர்ந்து வர்ற களேபரங்கள் அத்தனை சுவாரஸ்யம் இல்லை.

எப்படியோ அந்த மிஷினிக்கு ஒரு பொண்ணு கிடைச்சுட்டான்னு படிக்கிரப்ப சந்தோஷமாத்தான் இருக்கு..


வாழ்த்துகள். நல்ல முயற்சி.

'பரிவை' சே.குமார் said...

Kayal ippo Story Writter Ayachchu...
mm... kalakkal.
romba nalla irukku.

vazhththukkal.

mudinthal namm valai manasu (http://www.vayalaan.blogspot.com) pakkam vanthu konjam ilapparittu porathu. konja nalaa alaiye kanom.

'பரிவை' சே.குமார் said...

Kayal ippo Story Writter Ayachchu...
mm... kalakkal.
romba nalla irukku.

vazhththukkal.

mudinthal namm valai manasu (http://www.vayalaan.blogspot.com) pakkam vanthu konjam ilapparittu porathu. konja nalaa alaiye kanom.

'பரிவை' சே.குமார் said...

Kayal ippo Story Writter Ayachchu...
mm... kalakkal.
romba nalla irukku.

vazhththukkal.

mudinthal namm valai manasu (http://www.vayalaan.blogspot.com) pakkam vanthu konjam ilapparittu porathu. konja nalaa alaiye kanom.

Anonymous said...

நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!