Sunday, July 18, 2010

சுயபுராணம் ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா தாங்கல

பாத்தீங்களா! தலைப்ப படிக்கிறப்ப்போவே சிரிப்பு வருதுல்ல. இதாங்க நாம!விசயமும் ஒண்ணும் அத்தனை பெரிசில்ல. தன்னிலை விளக்கம் கொடுக்குற அளவுக்கு நாம ’பிரபலம்’ இல்லீங்கோ இல்லீங்கோ!அப்புறம் எதுக்கு இந்த சொறிதல்?என்னா சின்னப்புள்ளத் தனம்ன்னு கொந்தளிக்கிறது புரியுது.

இருங்க! இருங்க! திட்டாம கேளுங்க!

விசயம் இதாங்க! எஸ்தரம்மாவ பத்திப் புலம்பப் போய் அது பெண்ணீயவாதிங்கிற முத்திரை குத்தப்பட்டிருக்கு போல! பிரசூரிக்கப்படாத பின்னூட்டங்களும் மின்னஞ்சல்களும் சொல்கின்றன.சேகரனை வில்லனாக மிகைப்படுத்திச் சித்தரித்திருப்பதாக சொல்லபடுகிறது. எனக்கு அவரை முழுதாக,அப்பட்டமாக கொண்டுவரமுடியவில்லை என்கிற ஆதங்கமே இருக்கிறது.செய்தது பிழையோ என்ற குற்ற உணர்ச்சியோ,எந்த ஆணையும் குறிப்பதாகவோ தோன்றவில்லை.இது ஒரு வளர்ப்புத்தாயின் மீதான பற்று. அவள் வாழ்க்கை,இறப்பு குறித்த வேதனையின் பகிர்வு. இதற்கும் என் குறித்து நான் கொண்டிருக்கும் கருத்துக்கும் சம்பந்தமேயில்ல. நான் ஆதிக்கத்துக்கு எதிரானவாதி. அவளோ தான் சொல்ல முடியும். பெண் என்பதற்கான எந்த தனிப்பட்ட அங்கீகாரமோ சலுகையோ வேண்டாது அதே சமயம் அடக்குமுறையும் விரும்பாது சகஜீவியாக அவளும் மதிக்கப்படனும் என்கிற கோட்பாடுள்ளவள். என்னை[குறிப்பாக] அடக்குபவர் யாராயிருந்தாலும் அது ஆணோ பெண்ணோ வாளெடுக்கும் போராளி...

வின்சென்ட்சர்ச்சில் பத்தின ஒரு சுவையான சேதி. அவரது மேடைப் பேச்சுக்கான உரையை அவரே தான் தயார் செய்வாராம். அப்படி தயார் செய்யும் போது எங்கெல்லாம் கைதட்டல் வேண்டுமென நினைக்கிறாரோ அங்கெல்லாம் அடைப்புக்குள் claps என்று குறித்துக்கொள்ளுவாராம். உரை வாசிக்கப்படுகையில் அவ்விடத்தில் சில வினாடிகள் வாசிப்பை நிறுத்துவாராம்.கைதட்டல் கிடைக்குதோ இல்லயோ அங்கே நிறுத்தி பின் தொடர்வது வழக்கம். இது,ஒரு அரசியல்வாதி,தன் கருத்துக் குறித்த ஸ்திர தன்மையின் வெளிப்பாடு. மக்களின் எதிர்பார்ப்பும் தன் கருத்தும் ஒன்றாகத்தான் இருக்கவேண்டும் என்கிற நம்பிக்கையின் வெளிப்பாடு.இதை எழுதினா இப்படி பிரச்சனை வரலாம் என்கிற அளவுக்கு முதிர்ந்த ஞானம் ஏதும் எனக்கில்லை.

தவிரவும்,மக்களின் எதிர்பார்ப்பு மீதான பார்வை ஒரு கலைஞனுக்கு இப்படியிருக்க முடியுமா? இது மட்டும் கவனத்தில் இருந்தால் அவன் எதிர்பார்க்கும் ஆன்ம திருப்தி கிடைக்குமா? இதற்கும் பதிலுண்டு இசைஞானியின் வார்த்தைகளின் வாயிலாக. எத்தனையோ நல்ல பாடல்கள் தந்தும் அதில் ஏதோ சிலவற்றுக்குத் தான் தேசிய விருது கிடைக்கிறது.விருதுகளை எதிர்பார்த்து ஒரு கலைஞன் தன் கலையைத் தொடர்வதில்லை.தன் மனதுக்கு பிடித்த மிகச்சிறந்ததையே தருகிறான் எப்போதும்.அதில் மக்கள் விரும்பியவையும் இருக்கிறது.
பதிவுலகம் தரும் அங்கீகாரத்தை கருத்தில் கொண்டதல்ல எனது முயற்சிகள்.என் ரசனைகள் குறித்தது.பிழைகள் எதுவும் இல்லாமல் தமிழை என் கருத்தின் வடிவமாக்கிப் பார்ப்பதான சொற்ப சிந்தனை விகிதம்.அது என் சுதந்திரம் என்றெண்ணுகிறேன்.

ஆகையினால் அன்பர்காள்,
நான் தேர்ந்த கலைஞனோ,பதிவரசியல்வாதியோ குறைந்தபட்சம் ‘பிரபல’ பதிவரோ அல்ல. தமிழ் கற்கும் மாணவி. கிறுக்கல்களை பதிவேற்றி விமர்சனங்களை உள்வாங்கி தமிழை படித்துக்கொண்டிருக்கிறேன் ரசனையோடு.
என் வரையில்,
ஒரு தமிழ் கற்கும் மாணவியின் மனப்பாங்கு தமிழ் எழுதுகையில்.எப்போதாவது, மிக அரிதாக கவிதையில்(?) உண்மையைச் சொல்லுதல், தமிழ் கற்க முற்படுதலினால் கொஞ்சம் தன்மானம் மிகுத்து நியாயமான சமூகக் கோவம் இப்படியாக பதிவுலகப் பயணம்.அவ்வளவே! எஸ்தரம்மா என் கண்முன்னே வாழ்ந்த ஒரு கதாபாத்திரத்தின் எழுத்து வடிவம்.அவளை அப்படியே வெளிக்கொண்டுவர முடியாமல் தோற்றதாய் நினைத்திருந்தேன்.வழக்கமான வாழ்த்துக்களையும்,குட்டுக்களையும் மீறி சில வசைகள் தெளிக்கப்பட்ட பின் தான் உணர்ந்தேன் திட்டினவங்களை எல்லாம் நான் எங்கேயோ பாதித்திருக்கிறேன் என்று. இது என் கிறுக்கலுக்கு வெற்றி என்பதாக எடுத்துக் கொண்டு மீண்டும் வருவேன் எனக் கூறி முடிக்கிறேன்.[விடாது கருப்பு]

பின்குறிப்பு:-
கல்லூரி நாட்களில் எங்கள் தமிழ்த்துறை தலைவர் கதிரேசன் அவர்கள்  சொன்ன ஒரு வேடிக்கை சம்பவம் நினைவுக்கு வருகிறது. வகுப்பில் ஜீவகாருண்யம் சம்பந்தமாக பாடம் நடத்தி விட்டு வெளியே வந்தாராம். அந்த வகுப்பு மாணவன் ஒருவன் நடக்கக் கூட திராணியற்ற ஒரு நாயை இவர் கண் முன்னே துரத்தித் துரத்திக் கல்லால் அடித்தானாம். பார்த்த இவருக்கு ரொம்ப மனவருத்தம்.
“ஏம்பா! இப்போ தானே பாடம் நடத்தினேன். கருணையே இல்லாம ஏன் இப்படி அடிக்கிறே. பாவம் அது” என்றாராம்.
ஏற இறங்க பார்த்துவிட்டு,
“உங்க சகோதரபாசம் பிரமிக்க வைக்குது சார்” என்றானாம் புத்திசாலி மாணவன். தூங்காம பாடத்த புரிஞ்சிக்கிட்டான்னு சந்தோசப்படுவாரா இல்ல இப்படி தன்னை இறக்கிட்டானேன்னு வருத்தப்படுவாரா?அவரு மாணவனை விட இன்னும் புத்திசாலி எல்லா வகுப்புலயும் இதச் சொல்லிச் சொல்லி ஜீவகாருண்யத்த ஆரப்பிப்பாராம்.மாணவர்கள் சிரிப்பொலியோட எல்லார் பார்வையும் இவன் மீது ஒருமுறை பட்டு மீளுமாம். வகுப்பு சுவராஸ்யமா போகுமாம்.அவருக்கு அதானே முக்கியம்.முதல்ல அவனுக்கு பெருமையா இருந்தாலும் போகப் போக அவனுக்கு ஏண்டா இவர கிண்டல் பண்ணினோமுன்னு ஆகிடுச்சாம்.அடுத்தவங்கள அவமதிச்சு தான் தான் எப்பவும் பெரிசுன்னு காட்டிக்க நினைக்கிறவங்களுக்கு நான் தமிழாசிரியராவே இருந்துட்டுப் போறேன். ஆனா இவக்கிட்ட ஏண்டா அரசியல் பண்ணினோம்கிற அளவுக்கு அவங்க வருத்தப்படுவாங்கன்னும் தாழ்மையா சொல்லிக்கிறேன்.

*

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!