Monday, July 5, 2010

சீதா பிராட்டிகள்

இரையை பிடிப்பதாயும்
இணையை தேடுவதாயுமான
ஒரு உணர்வின் விளிம்பு
தளும்ப நேரம் பார்த்து..

விளக்கொளியில் சுவர்கோழிகள்
இரண்டின் ஊடலும் குலவலும்..

பிரிந்த காதலோ இழந்த
நேசமோ ஏதோவொன்று
தொட்டிருக்க கூடும்
அவளின் உயிர் வரை

தெளிந்த நிலவொளியில்
விரகத்தின் பெருமூச்சு
அனேகம் குற்றலைகள்
அமைதியான ஊருணிக்குள்

மெல்ல மெல்ல விடிகையில்
ஈரமுலர்ந்த சேலையுடன்
குடம் நிறைய நீருடனும்
எத்தனை முறை பார்த்திருப்பேன்

வயல் வீடு பிள்ளை மக்கள்
மகசூல் வட்டிப்பணம் புள்ளிவரி
எல்லாமும் ஏறக்கட்டி
ராத்திரியில் தலைசாய்க்க
பாழும் அவன் நினைவு!

எப்போதோ வரும் கடுதாசியும்
எழுத்துக்கூட்டி கூட்டி
வரையப்பட்ட வார்த்தைகளும்
தபால்காரன் புண்ணியத்தில்
தாலிச்சரடோடு அவன்
குறித்த சேதிகளும்...

தீர்மானங்களும் சம்பிரதாயங்களும்
தானே நிர்மாணித்த சட்டங்களும்
திரவியம் தேடிப் போனவன்
திரும்பி வரும் வரை
முள் மேல் தவமாய்..

எல்லாப் பாசத்தையும்
குழந்தையிடம் நிரப்பிவிட்டு
கொண்டவன் முகம் காண..

இன்னமும் என் கிராமத்தில்
வறுமை சிறைபிடித்தும்
’சீதைகள்’ ஆயிரமுண்டு!

3 comments:

சுசி said...

கயல்..

காட்சி கண் முன்னே..

//இரையை பிடிப்பதாயும்
இணையை தேடுவதாயுமான
ஒரு உணர்வின் விளிம்பு
தளும்ப நேரம் பார்த்து..//

ஆரம்பமே அட்டகாசம்.

என் பதிவில உங்களுக்கு ஒரு விருது கொடுத்திருக்கேன்.

கமலேஷ் said...

கவிதையின் தலை(ப்பி)லிருந்து உள்ளங்கால் வரை அத்தனையும் அருமை...

நல்ல கருத்து மற்றும் நல்ல வெளிப்பாடு

'பரிவை' சே.குமார் said...

//எப்போதோ வரும் கடுதாசியும்
எழுத்துக்கூட்டி கூட்டி
வரையப்பட்ட வார்த்தைகளும்
தபால்காரன் புண்ணியத்தில்
தாலிச்சரடோடு அவன்
குறித்த சேதிகளும்...//

Excellent.

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!