Monday, October 8, 2012

அவன் அழுவதில்லை

பிணந்தின்னி வண்டுக் குவியலில்
தோட்டாக்கள் முனுமுனுப்பில்
தூரிகையோ புகைப்படக்கருவியோ
ஏதேனும் ஒன்றின் பிடிமானத்தில்
வாழ்க்கை

நேர்பட உரைத்தல் தர்மம்

உதிரம் சொட்ட உயிர் துடிக்கும்
கடைசி நேரங்களை
காட்சிமைப்படுத்தும் பணி அவனுக்கு

புகையும் சுருட்டு இடக்கையில்
வண்ணத்தில் குளித்த தூரிகை
மறுகையில்
காய்ந்த ரத்தத்தை
சவத்தின் நாற்றத்தை
ஆர்வமாய் பதியத்துவங்கும்
அகோரியாய் வெறிகொண்டலையும்
சிதைந்த கோரங்களில் உக்கிரமானவொன்றின்
பிரதியை தாளில் தெளித்த பின்
சாந்தம் கொள்ளும் காளியின் பாவனையில்
சன்னமாய் அடங்குமவன் நாடிகள் ஏழும்!

போர்க்களங்கள்
போராட்டங்கள்
புரட்சிகள்

எதாகிலும் அழிவின் வர்ணனை
அப்படியே வேண்டும்
கற்பனைகள் கலக்காமல்

கொடூரங்கள் வாடிக்கையானபின்
சின்னதொரு மறுப்பிற்கோ
காதலியின் பிரிவுக்கோ
செல்ல நாயின் மரணத்திற்கோ
நடிகையின் தற்கொலைக்கோ
லௌகீகத்தின் உச்சத்துக்கோ
துடிப்பதேயில்லை அவன் மனம்

2 comments:

நேசமித்ரன். said...

நன்று :)

மதி said...

நல்ல கவிதை.. வித்தியாசமான தளம்... அருமையான வார்த்தைப் பிரயோகம்

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!