Tuesday, October 30, 2012

நோய்க்கூறு#2

எங்கோ துவங்கி எங்கு முடிவதென்ற இலக்கில்லாமல் பயணிக்கிறேன். காடு,மலை,சமவெளி எனபதான புவிப்பரப்பின் எல்லா அங்கங்களையும் கடந்தே வருகிறேன். பாரத நாட்டின் சாபங்களில்(!) காலநிலை மாற்றங்களும் ஒன்று. வெள்ளத்தின் பிரளய நாட்களில் வடக்கில் கொட்டும் மழை  தெற்கே எட்டியும் பார்ப்பதில்லை. மாசுபட்ட புண்ணிய நதியதன் தளும்பலில் கழிமுகம் நோக்கிப் பயணிக்கும் மயிர்கற்றை நான்.தீண்டுதலுக்குட்பட்ட எல்லா சாத்தியங்களையும் தொட்டு மீள முடியும் என் பிறப்பின் பலனாய்.மிகைப்படுத்தப்பட்ட விதிகள் எதுவும் எம் நுனி சீண்டாது. எனக்கும் யாரும் பயணிக்காத வறண்ட பரப்புகளை உரசிப் போவதே பேரின்பம் என்ன செய்வது நதியின் போக்கில் நடைபயில்கிறதென் நிகழ்காலம்.மயிரென என்னைத் தீண்ட மறுப்போர் தீர்த்தமெனக் கொண்டாடும் நதி மாசுறும் கதை கேட்டால் எவ்விதம் முகம் கோணும்.நினைக்கையில் சிரிப்பு வருகிறது.புனிதமென்ற வரையறைகள் தனிமனித ஒழுக்கமென்பதை தவிர்த்து சாஸ்திரங்களோடு மல்லுக்கட்டும் இவர்களைப் பார்த்தால் சிரிக்கத் தோணுகிறது.அடுத்தவரை காயப்படுத்தி,வன்மமேவி,காழ்ப்பில் சொல்லடுக்கி நசுக்கி உமிழ்வோர் தவிர்த்து யாவரும் புனிதரே!பாவமந்த கங்கை நதி... எல்லார் சுயநலங்களையும் பொறுப்பின்மைகளையும் தாங்கியும் அருள்பாலிப்பதைத்  தொடர்ந்தாக வேண்டும்.மதக்குருக்கள்,கட்சிகள்,வாரியங்கள் இன்னும்பிற கட்டமைப்புகள் மிதக்கும் பிணங்களில் எப்படி நிலைநிறுத்தும் எம்மத தர்மத்தை..? இன்றதன் நிலைமை புரிந்தபின் இறக்கும் தருவாயில் விழுங்கும் கடைசி மிடறு அதன் தீர்த்தம் என்பதைக் காட்டிலும் என்வீட்டு கிணற்றடி நீரென்பதே என் வேண்டுதலாக இருக்கக் கூடும்.

பகுத்தறிவு பரவியிராத என் பாமர மூளைக்குள் கேள்விகள் முளைத்த வண்ணம் உள்ளன.

செத்த ஆடு,மீன்,கோழி என்றெல்லாமும் புசித்துப் பழகிய நான் ஏன் மனிதப் பிணம் மிதக்கும் புண்ணிய நீரைப் புனிதமென ஏற்பதில்லை?

என்னவாகும் சொல்லக் கேட்டச் சாஸ்திரங்கள் ?
நரகம் வாய்க்குமோ?
சிவபதம் சித்திக்குமா?

தமிழனா இந்தியனா இருக்கட்டும் அப்புறம்..

நான் இந்துவா.. ?
ஆமெனில் என்ன சாதி ?
ஆதிக்க வர்க்கமா அடிமைவர்க்கமா?
இத்துப்போன வர்ணாசிரமங்களில் வேதமென்பது எவருக்கு மட்டும்..?

இருவருக்கும் வெவ்வேறு சொர்க்கம் வெவ்வேறு நரகமா?

கங்கை நீரைக் குடித்தால் தான் சொர்க்கம் கிட்டுமமெனில் கங்கையை சுற்றியிருக்கும் அத்துணை பேரும் சொர்க்கம் சென்றாரா?

எடுத்த எடுப்பிலேயே மனிதனை நினைத்து புளங்காகிதம் அடைதல் நாத்திகம். சுயம் பற்றி தெளிவு வேண்டுமென்பதால் மிரட்டும் விசயமாய் இருக்கக் கூடும். தன்னையரிதல் ’அகம் பிரம்மாஸ்மி’ இதைத் தான் சொல்கிறது ஆத்திகம்.தன்னையறிந்தவனை கடைசியில் ‘ஞானி’ என்கிறது. கவனிக்க, மனிதர்கள் என்பவர்கள் மரபுகளுக்குட்பட்டு வாழும் மந்தை என்றெழுதப்பட்டிருக்கிறது. மரபைப் பேணாத என் போன்ற தாந்தோன்றிகள் தன்னையறிந்து மனிதனாய் இருக்கவே விழைகிறோம்.

புனிதம் குறித்த இத்தனை கருத்துக்களும் நா நுனிவரை வந்தும் சொல்லாமல் வந்துவிட்டேன்.சொல்லியிருந்தால் கேலியும் எள்ளலும் உன்னறை நிறைத்திருக்கும்.
ஒவ்வாத உணவை ஒதுக்குவது போல ஒவ்வாத கருத்துக்களோடும் பயணிப்பதில்லை நான். எல்லாரும் வழிதொடரும் மந்தை ஆடாய் நானிருக்கப் போவதில்லை.

ஆம்! நான் தூங்கும்போது கிசுகிசுத்துக் கொள்ளுங்கள் “பைத்தியம் உளறியதென்று”

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!