Sunday, October 28, 2012

நோய்க்கூறு #1


வெறுமையும் இயலாமையும் கைகோர்த்துக் கொக்கரிக்கும் நிமிடங்களில் ஆழ்கடல் அமைதிக்குள் அமிழ்ந்து போகத் துடிக்கிறது மனது. தனிமையில் அழுவதெனக்கும் மிகப்பெரும் ஆசுவாசம்.பலவீனப்பட்டு விடுதலை உணர்தலில் சின்ன உறுத்தலும் கூட.தவிர்த்திடும் பொருட்டு எந்தப் புயல்மழைக்கும் அசையாதவாறு ஒரு கல்மண்டபமாய் மனதைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறேன். சந்தர்ப்ப அணில்கள் சேமித்துவந்த சிறுகற்களில் கட்டுமானம் பாதி நிறைவுற்றது.விமானம் அமைத்துத் தரக் கடந்ததின் பெருங்காயங்களை அசைப்போட்டபடியிருக்கிறேன்.
                     சன்னமான கதறலோடு கிளறத் துவங்கி காயத்தின் ஆறாத பாகத்தில் கைபட்டவுடன் மூர்ச்சித்து விழுகிறேன். ஏதோவொரு நட்பின் கரம் தண்ணீர் தெளிக்கிறது. சுயநினைவுறுகையில் தோல்வியின் அவமானம் என்னுடல் முழுக்க அப்பியிருக்கிறது. இதோ தோல்வியைக் கழுவி வெற்றியாக்கும் பொருட்டுக் கத்திச் சொல்கிறேன், பசுங்காயங்களின் பின்னால் ஒளிந்திருக்கும் உறவுகளே எழுந்து வாருங்கள் எனக்கு உங்களின் தேவையிருக்கிறது இப்போது. என் விரல் கொண்டு என் ரணம் கீறப் பயமாயிருக்கிறது. அந்தப் பேருதவியை நீங்கள் இப்போது செய்வீர்களாக!என் அழுகையும் கதறலும் உமக்குவந்த இசையென்பதை நானறிவேன்.மீட்டிச் செல்லுங்கள் என் மனதின் ஓலங்கள் வரிசையில் நிற்கின்றன.
                     இருத்தலின் நிலையாமையினுள் புழுங்கிச் சாகும் வரை நான் வாழ்க்கையின் பரவசங்களைத் தீண்டப் போவதில்லை.தாயின் கருவறையிருந்து மரணப்பாசறை வரையிலான மானுடப் பயணத்தில் நானெங்கிருக்கிறேன் என்கிற தெளிவு வேண்டும்.பேரன்பு மிக்க உறவின் மேதகு மக்களே என் உச்சந்தலையில் கால்வைத்து உபதேசித்துப் போங்கள் எப்படி வாழ்தல் எனக்குகதென்று.
                     யாதொரு உயிர்க்கும் தீங்கிழைக்காமல், சொல்லுக்கு வலிக்குமெனச் சிந்திச் சென்ற என் வார்த்தைகளில் எது உங்களைத் தைத்ததென்று. எப்போது ஒழியும் இந்த ‘வாழ்ந்தானுக்கு மாரடிக்கும்’ மானங்கெட்டச் சீர்மிகுக் கலாச்சாரம்.இத்தனைக் குழப்பத்திலும் அடுத்தது என்ன? எவ்வித முன்னேற்பாடுமின்றி வெறித்த பார்வையில் வெதுவெதுப்பான தேனீரோடு நானிருப்பது நிச்சயம் உங்களுக்கு நோய்க்கூறென்றேபடும்.

ஆம்!நான் உம்மிலிருந்து சற்றே மனப்பிறழ்வெய்தியவள்.

1 comment:

புதியவன் பக்கம் said...

//போர்க்குணங்கள் பழகாதிருப்பதில்
அனேகம் நன்மைகளுண்டு// என்ற கவிதையை இன்று படித்து விட்டு வலைப்பூவுக்கு வந்தேன். முகப்பு வாசகமே ஒரு கவிதை. பாராட்டுகிறேன்.

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!