Tuesday, April 16, 2013

கோவேறு கழுதைகள்


எழுபது சவரனிலிருந்த
மாப்பிள்ளையின் விலை
மடமடவெனச் சரிந்து
நாற்பது சவரனைத் தொட்டது
சந்தையில் மலிவாய் கிடைத்த
மாப்பிள்ளைதம் புகழ்பாடிக் குதூகலிக்கிறார்கள்
அத்தையும் அம்மாவும்
வீட்டிலுள்ள ஏனையோர் நிலையுமதுவே
அவமானச் சுமையென்றென்னை
பகிரங்கமாய் அறிவித்திருக்கிறார்கள்

அதிருக்கட்டும்
விலைசரிவுக்கான காரணம் அறிகையில்
தங்கமான மாப்பிள்ளைக்கு
திருமணமாகி கூடவேயொரு குழந்தையுண்டு
நீ இரண்டாம்தாரமென்று சொல்லிப்போயினர்
என்னளவிலது சேவை அவருக்கேன் தட்சணை?
வழக்கமான பயத்தால் வாய் திறக்கவில்லை
தனித்து வாழத் துணிவில்லை
’தாலியால் மட்டும்’ இளப்பமாய்
சிரிக்கிறது மனச்சாட்சி

என்ன செய்வது முன்பொருகாலத்தில்
எதிர்காலமென நினைத்திருந்தவன்
அம்மாவின் சொல்லுக்குள்
பிணையாகிக் கிடக்கிறான்
விழுப்புண்கள் பலநூறு வீரத் தமிழ்மகளாய்
தன்னந்தனியே சமர் புரிந்த வேளையில்
வேசிப் பட்டங்களோடு துடிதுடித்து நான் மடிய
தார்மீக பொறுப்பற்றுக் கிடந்தவனை
இன்னமுமா காதலனென்பது?
ம்ம்ம்ம்... அது முடிந்த கதை
இருப்புக்குத் தக்க இணை தேடி
திருமணச் சந்தையில் முதிர்கன்னியாய்.....

எங்கேனும் இதுபோல் நடவாதென்போர்
எங்கே முன்னே வாருங்கள்!
எல்லாயிடமும் நடந்தபடிதானிருக்கிறது
எள்ளளவும் வெளிக்கசிவதில்லை
நானோர் தைரியசாலி
சொல்லி வைக்கிறேன்
இரகசிய சாட்சியாய் பதிந்து கொள்ளுங்கள்
இருள் விலகும் நல்லதொரு பொழுதில்
இன்னும் ஆயிரம் சாட்சிகள் கிடைக்கக் கூடும்
யார் கண்டது
விலை கொடுத்து விற்றதற்கான தண்டனையாய்
உங்கள் மகளோ சகோதரியோ
உங்களுக்கெதிராய்த் திரும்பக்கூடும்
அன்றேனும் புரிந்து கொள்ளுங்கள்
கோவேறு கழுதைகளுக்கும் குறைந்தபட்ச உணர்வுண்டு

1 comment:

கவியாழி said...

கோவேறு கழுதைகளுக்கும் குறைந்தபட்ச உணர்வுண்டு//உண்மைதான் மனம் உண்டு

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!