Wednesday, April 17, 2013

சிறகுப் புள்ளிக் கோலம்

வளைத்துச் சுருக்கிட்டு நீளும் கம்பிகளுக்கு
நடுவிலொரு புள்ளி
கோடுகளின் முனைகள் இணைக்கப்பட்டு
சிறு பரப்புகளும் அடைபட்டுவிடும்
அதிலும் வர்ணமடித்து வலியை மறைத்துவிடுவேன்
கம்பிக்கோடுகள் நீண்டபடியிருப்பதில்லை
உள்ளுக்குள்ளோ வெளிப்புறமோ
மொத்தமாய் வாலைச் சுருட்டிக் கொள்ளும்
எப்போதும் தனித்து விட்டதில்லை
ஒற்றைப் புள்ளியை...
சேது சமைத்த பெருமிதமெனக்கு
நட்டு வைத்த புள்ளியின் சுதந்திரம் பெரிதில்லை
தன்மேலொரு வடிவம் வரைந்தாலும்
அடையாளம் தொலைத்த
ஓராயிரம் புள்ளிகளுக்காய்
வருந்திய வாசலை இப்போதே கவனித்தேன்
கற்பனைக் கைங்கரியத்தால்
ஒவ்வொரு புள்ளியிலும் பட்டுச் சிறகுகள்
முளைக்கத் துவங்குகின்றன
சன்னமாகக் கேட்கிறதவற்றின்
விடுதலை முழக்கம்

1 comment:

கவியாழி said...

புள்ளி கோலமாக வாழ்த்துக்கள்

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!