Monday, April 15, 2013

அண்ணலின் ஜெயந்தியும் சித்திரைத் திருநாளும்

இன்றைய நாள் மிகப் பெரும் விவாதங்களுடன் ஆரம்பித்துக் குல்பி ஐஸுடன் முடிவுற்றது.அரிதான விடயம்  சித்திரைத் திருநாள் + ஞாயிற்றுக் கிழமை. இரண்டு மூன்று எலிகள் என் சமையலைச் சாப்பிட்டும் உயிருடன் உலவி கொண்டிருக்கிறது. வாதைகளும் வலியுமின்றிச் செத்துப் போக இரண்டொரு கவிதைகளை மொழிபெயர்த்துச் சொல்லிக் கொண்டிருந்தேன். வாவ், வரே வாஹ் என்று சொல்லிச் சிலாகித்தார்கள். அடக்கொடுமையே! கைவசம்மிருந்த கவிதைச் சரக்குக் காலியான சமயத்தில் சிறிது வயிற்றுக்கும் ஈயப்பட்டது. அவர்களுக்குச் சரக்கடிக்கும் பழக்கமிருப்பினும் எனக்கு இல்லையென்பதால் சாப்பாட்டோடு கொண்டாடிக் கொண்டிருந்தோம்.

யுகாதிக்குப் பச்சடி ஒன்று செய்வார்கள். மாங்காய்,வெல்லம்,வேப்பம்பூ எல்லாம் சேர்த்து. வாழ்க்கையின் அர்த்தம் இதுவே என்பது கணக்கு. யுகாதிக்கு யார் வீட்டுக்கோ விருந்துக்குப் போயிருக்கும் போல அந்தப் புனே பொண்ணு.தமிழ்ப் புத்தாண்டுல அது போல ஏதுமில்லையா என்றொரு கேள்வியை வைத்தது. தை மாதம் ஒன்றாம் தேதியைத் தான் நாங்கள் தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடுவோம். விருந்து, சித்திரைத் திருநாளுக்கில்ல அம்பேத்கார் ஜெயந்திக்கென்று சொல்லி வைத்தேன். அருமை அருமையென்று பாராட்டிக் கொண்டே சாப்பிட்டார்கள். அவ்ளோ நல்லாச் சமைக்கிற கயல் நீ!

சரி விசயத்துக்கு வருவோம். வடக்கத்தியர்களில் இந்து மதத்தைப் பின்பற்றுவோர் பெரும்பாலோர் இந்துத்துவாவின் பிடியில் தான் இன்னும் இருக்கிறார்கள். அதன்படியான மதக்கடமையைச் செய்பவன் மோட்சம் அடைவான் என்றாக அவர்களின் சிறுமூளையில் பதியப் பட்டிருக்கிறது. ஆத்ம ஞானம் என்பது தன்னையறிதல் என்று சொல்ல மிகப்போராட வேண்டியிருந்தது.அவர்கள் வார்த்தைகளைப் பூஜிக்கிறார்கள். அந்தப் பதங்களோடே அதன் அர்த்தம் எதுவென்று தெரியாமல் வாழ்கிறார்கள். வர்ணாசிரமங்களில் மிக மிக ஈடுபாடுடையவர்களாய் இருக்கிறார்கள். குறிப்பாகத் தீண்டாமை என்பது குற்றமென்று தெரிந்தும் அதை மிகவும் சரிவரக்  கடைபிடிக்கிறார்கள். எந்தச் சமூகமும் மறுமலர்ச்சி பெற வேண்டுமெனில் பெண்களிடமிருந்து ஆரம்பியுங்கள் என்ற பெரியார் மிகச்சரியாகப் புரிந்து கொண்டிருந்தார் எவருக்கு முதலில் மாற்றம் தேவை என்பதை. பெரும்பாலோர், நான் படிப்பறிவும் பொருளாதாரச் சுதந்திரமும் வாய்க்கப் பெற்ற பெண்களைச் சொல்கிறேன். அவர்களிடமும் அத்தனை தெளிவிருப்பதாகத்  தெரியவில்லை. ஒருவேளை எனக்கு அறிமுகமானவர்களால் அப்படித் தோன்றியிருக்கலாம்.

ம்ம்...வாஜ்பாய் மற்றும் அத்வானியின் ஈழக் கோட்பாடு பற்றிய கேள்வியொன்றில் ஆரம்பித்தது பிரச்சினை. அதாங்க அனுமனின் வாரிசுகள். இராமயணத்தின்படி ராவணன் போன்ற கொடிய அரக்கர்கள் தமிழர்கள் வாழும் பகுதியில் தான் வாழ்ந்தார்களென்று சொல்லி நிறைய வாங்கிக் கட்டிக் கொண்டாள். இதிகாசங்கள் பொய் சொல்லாதென்று வாக்குவாதம் செய்ய ஆரம்பித்துவிட்டாள்.கைலாய மலையைச் சொர்க்கமாகச் சொல்லிச் சிவனை அங்கேயே வைத்துக் கொண்டிருக்காமல் உலகமெல்லாம் உலவ விடுங்களென்று கோரிக்கை வைத்தேனா, வந்து விட்டது அவளுக்குக் கோவம். . சைவம்,வைணவமென்ற பிரிவுகள் சமணம்,பௌத்தம் போன்ற சமங்களின் தலைவர்கள் அரசியலில் தலையீட்டதின் தாக்கத்திலிருந்து வெளிவர உதித்ததென்று சொல்ல மெல்ல அமைதியானாள். எல்.கே.ஜி குழந்தைக்குக் கதை சொல்லும் ஆர்வம் வந்துவிட்டது எனக்கு.  மகிஷாசுரன் முதல் மாபலி வரை கணக்கெடுக்க ஆரம்பித்தோம். அரக்கர்கள் வாழும் பகுதியைச் சேர்ந்தவர்கள் தமிழ் பேசுவோர் மட்டுமென்ற அவளின் மாபெரும் சந்தேகம் தெளியவைக்கப்பட்டது. நன்றி கூகுளாண்டவர்.
அகத்தியமுனி,தமிழ்ச் சித்தர்கள், தமிழின் தொன்மை,இராசராச சோழன்,வந்தியத்தேவன்,மதுரை மீனாட்சி-சொக்கனாதர் கடைசியாகக் கிராம தெய்வங்கள். நீண்ட உரையாடலுக்குப் பின், வந்தபோதிருந்த சிடுசிடுப்பு மறைந்து சினேகமாகப் புன்னகைக்க ஆரம்பித்தாள்.

நேரம் மாலை ஐந்தை நெருங்கியதும் காபி,டிபனோடு விடைகொடுத்தேன். தமிழனை இவர்கள் புரிந்து கொள்வது ரொம்பத் தான் கஷ்டம் போல. இவர்கள் அதிகம் புழங்காத கஷ்மீரிச் சமுகமும் இதுபோலான தவறான பொதுமைப்படுத்தலில் சிக்கிக் சீரழிகிறதோ? தமிழனாய் கஷ்மீரியின் வலி நிறைந்த வாழ்க்கையைப் புரிந்து கொள்ள முடிந்தது. பெரும்பாலும் மதத்தின்/இனத்தின்/மொழியின்/சாதியின் பெயரால் ஒதுக்கப்படுவதின் துயரம் தாளாமல் தானே தீவிரவாதம் முளைக்கிறது. தீவிரவாதத்தை அடக்குமுன் ஏன் அரசு இயந்திரம் இதற்கு அடிபோடும் தவறான அரசியல் தலைவர்களைக் களையெடுக்கக் கூடாது? நேயம் மிகுந்த அற்புதச் சமூகம் எப்போது சாத்தியம்? குழந்தை போல் இந்தக் கனவைக் காணப் பிடிக்கிறது.

குழந்தை வளர்ப்பில் தாய்க்கும் பள்ளிக்கும் எத்தனை பொறுப்பு இருக்கிறது. எத்தனை சதவீதம் மிகச்சரியாக வளர்க்கப்படுகிறார்கள். கவலையாய் இருந்தது. மரபென்பது உடைக்கப்பட்டால் தான் மறுமலர்ச்சி வருமென்பது சரியாய் இருக்கலாம். அதனிலும் முதலாய் சகிப்புத் தன்மையிலும் மனித நேயத்திலும் சிறந்த பெண்களால் மட்டும் தான் தன் சந்ததியை மிகச்சரியாய் வளர்க்கமுடியுமென்று ஆணித்தரமாக நம்புகிறேன். நீங்களும் தானே?

1 comment:

கவியாழி said...

முதலாய் சகிப்புத் தன்மையிலும் மனித நேயத்திலும் சிறந்த பெண்களால் மட்டும் தான் தன் சந்ததியை மிகச்சரியாய் வளர்க்கமுடியுமென்று ஆணித்தரமாக நம்புகிறேன். நீங்களும் தானே?///
உண்மைதான். சேலம் சம்பவம் இதையெல்லாம் தவிடு பொடியாக்கி விட்டதே? சகிப்புத்தன்மை,மனித நேயமற்ற பெண்கள்.

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!