Friday, May 14, 2010

சிந்தனை செய் மனமே!

எத்தனை முறை கைக்கடிகாரத்தை திருப்பித் திருப்பி பார்ப்பது? எண்ண ஓட்டம் அழுதபடி விடை கொடுத்த அம்மாவுடன் பயணிக்கத் தொடங்கியது. என்னாச்சு அம்மாவுக்கு?

இப்பல்லாம் அழறதே வாடிக்கையா இருக்கு.வயதின் வாட்டம் அவளை இப்படி நிதானமிழக்கச் செய்திருக்கலாம். கூடவே மன நிம்மதியிழந்த அவளின் ஆற்றாமையும்!

புரியாமலில்லை.பதிலாய் கனமான அமைதியை தந்துவிட்டு நகர்வது என்றாகிவிட்டது இப்போதெல்லாம்.

”சுமி! தெரியுமா? என் பாட்டியவிட என் அம்மாக்கு தான் எல்லாந் தெரியும். மெட்டில்டா மிஸ் குடுத்த எல்லா அல்ஜீப்ராவும் என் அம்மா தான் போட்டுத் தந்தாங்க.” அடுத்த வீட்டு பெண்ணிடம் அறிவாளி அம்மாவை விளம்பரப்படுத்திய போது கேலியாய் சிரித்த அம்மா.

”அம்மா! இவ்ளோ நல்லா பாடுறீங்களே ஏன்மா பாட்டுக் கத்துக்கல?” பதிலாய் “என் பாடே பெரிசா போச்சுடி! இதுல தனியா பாட்டா?” நக்கலாய் சொன்ன போதும் கண்ணோரம் துளிர்க்கும் இரு துளிக் கண்ணீர் காட்டிக்கொடுத்து விடும்.

“ஆங்ங் ... என்ன செய்தான் தெரியுமா ஹனுமன்? ராமனின் மீதான பக்தியைக் காட்ட அப்படியே குங்குமம் சாற்றிக் கொண்டு கோமாளியாக வந்தான். எல்லாரும் சிரிக்கையில் அவன் மட்டும் ராமனின் நலத்தில் மட்டும் கவனம் வைத்தபடி பூரண பக்தியை நிரூபித்தான்.” ஆம்.அவள் என் மீதான பாசத்தில் பைத்தியமாய் சுற்றுக் கொண்டிருக்க நான் அவள் பாசம் தெரியாமல் அவளை குறைத்துச் சொல்லிக் கொண்டிருந்தேன் பள்ளி நாட்களில்...

“எப்படிம்மா உன்னால இப்படி இருக்க முடியுது? ஒரே புயல் மழை. தம்பி எங்கயோ திருச்சி பக்கத்துல மாட்டிக்கிட்டானாம். நான் என்னடான்னா புலம்பிக்கிட்டு இருக்கேன் நீங்க பாட்டுக்கு..?”

“அதெல்லாம் நல்லபடியா வருவான் பாரு” அலட்சியமாய் சொன்ன அம்மா.நம்பிக்கையின் உச்சம்.

“என்ன பெரிசா சம்பாதிக்கிறான் உன் புருசன். இத்தனை பெரிய குடும்பத்துக்கு நீங்க செய்யுறது மட்டும் தனியா தெரியவா போகுது? தனியா போயிரு இல்ல பிள்ளைங்களோட நம்ம வீட்டுக்கு வந்திடு.” அதட்டலும் அவளின் பரதேசிக்கோலத்தின் கொடுமையிலும் வெகுண்டெழும் தாத்தா , “எல்லாம் சரியாயிடும்பா. கொஞ்ச நாள் தானே இந்த தடவையாவது அவரு மேல வந்திருவாருப்பா!” நம்பிக்கையுடன் தைரியம் தரும் அம்மா.

”என் பொண்டாட்டி மூக்குல ஒரு வைரமூக்குத்தி போட்டா எப்படியிருக்கும்?” பொய்யெனத் தெரிந்தும் பூரித்து போகும் அம்மா. “ஏன்மா அப்பவே ‘நறுக்குன்னு’ ஏதாவது சொல்லுறது தானே?”, “விடுடி. ஆம்பளைங்க வீரம் எல்லாம் முழுசா பொண்டாட்டிக்கிட்ட தான் செல்லும். நாம முட்டாளாவே காட்டிக்கணும் எப்பவும்.அப்பத்தான் வண்டி ஓடும்” சாமர்த்தியமா அது தாம்பத்திய தந்திரமா? புரியாத வயசில் அம்மாவின் அத்தனை செயலிலும் ஏதோ ஒரு அர்த்தம் உள்ளதாய்...

ஓடி ஒடி உழைத்த பயனெல்லாம் என் மூலமாய் திரும்ப பெறுகையில்,கணவன் மகனுக்கு பதிலாய் வயசுப் பெண்ணிடம் எதிர்பார்க்கிறோமே எனக் குற்ற உணர்வில் மயங்கும் அம்மா.

எல்லாவற்றிற்கும் கொள்கை பேசும் சீர்திருத்த வாதி, கட்டிக்கொண்ட பாவத்துக்கு அவரை தாழ்த்தாது தான் தாழ்ந்து எனக்குள் உயர்ந்த அம்மா.

எப்போது கோழையானாள்?

“என் கண் மூடுறதுக்குள்ள ....”

தளர்வாய் கண்ணீர் தாங்கியபடி பலகீனமாய் முனங்கிய போது தெரிந்தது. உடல்வலிமை குறைய குறைய மனவலிமையும் ஒடுங்கி போகிறதென்று.....

”ஏன்மா இதே சொல்லி சொல்லி என்ன படுத்தறீங்க! ஊருக்கு போறப்போ நிம்மதியா போக விடுங்க”

”யாரு இருந்தாலும் நீ இல்லாத வெறுமை எனக்கு மட்டும் தாண்டி தெரியுது. முன்ன மாதிரி இல்லடா அம்மாக்கு. கஷ்டமா இருக்கு. பல சமயம் வெந்நீர் வச்சுத் தரக் கூட யாருமில்ல.”

”சரிம்மா! நான் இங்கயே இருந்தா எப்படி முடியும்.அதுக்கா எல்லாரையும் எதிர்த்திட்டு படிச்சேன் வேலை செய்யுறேன்.”

“இல்லடாம்மா நான் என்ன சொல்லுறேன்னா...”

“சாப்பிட்டு தூங்குங்க நான் காலையில சீக்கிரம் கிளம்பிடுவேன்.பேசுறேன் அங்க போயி”


************

சன்னலோர இருக்கையில் தலை சாய்த்தபடி கடந்தவைகளை துணைக்கழைத்தேன்.

நவம்பர் 24,2009. மாலை 5:30 மணி.

“எப்படிம்மா இருக்க?”

“நான் அப்புறம் பேசுறேன்மா.”

நவம்பர் 25,2009.காலை 9:30 மணி.

“எப்படிம்மா இருக்க?உங்கிட்ட”

“என்ன்ம்மா ? எத்தனை தடவை சொல்லியிருக்கேன்.வைங்க அப்புறம் பேசுறேன்”

நவம்பர் 25,2009.மாலை 7:30 மணி.

”இப்பவாவது பேசலாமாடீ?”

“சொல்லுங்க! என்ன விசயம்?”

“அப்படியே ஏதாவது கோவிலுக்கு போ!”

“ஏன்?”

“நான் இங்க உம் பேருக்கு அர்ச்சனை பண்ணிட்டேன். நீ சும்மா சாமி மட்டும் கும்பிட்டா போதும்”

“ஏன்னு சொல்லாம சும்மா தொணத்தொணன்னு...”

“இன்னிக்கு பிறந்த நாளுடீ உனக்கு!அத சொல்ல இரண்டு நாளா பாக்குறேன் கடிச்சிட்டே இருக்க..”

”ம்ம்... சரி சரி.. போறேன் போறேன்” வீராப்பு குறையாமல் .... ஆனால் என்னை நினைக்க இந்த நாளில் நீ இருக்கிறாய் என்கிற தெம்பில் கும்மாளமிட்டது மனது.

அந்த நம்பிக்கையும் இப்போது ஆட்டம் கண்டதில்...

பதினைந்து நாள் கழித்து அவளை பார்த்த போது இன்னும் உள்ளுக்குள் உறுத்தியது.

அவள் நலமாக வேண்டும் என்கிற வேண்டுதலோடு நித்தமும் அலுவலகம் விடுதி என்கிற ஒட்டாத வாழ்க்கை.ஒப்புக்கு சிரித்தும் உள்ளுக்குள் மருகும் நரக வாழ்க்கை.

என்ன செய்வது? விதி அப்படி.நானாய் போட்டுக் கொண்ட கடமை அரிதாரம் அப்படி.


*************


“ஏண்டா அழற? குமாரு அழாதடா.”

“இல்லம்மா உன்ன விட்டுட்டு வெளி நாட்டுக்கு போயெல்லாம் சம்பாதிச்சு என்ன பண்ணப் போறேன். உனக்கே முடியல. எதாச்சும்னா சட்டுன்னு வர முடியுமா என்னால?என்ன சம்பாதிச்சி என்ன...”

“விடுடா! எல்லாஞ் சரியாயிடும்.என்ன என் கண் மூடுறதுக்குள்ள உனக்குன்னு ஒரு வாழ்க்கை... அய்ய ஆம்பளப் புள்ள இப்படியா அழறது?கண்ணத் தொடச்சிக்க.கடுதாசி போடு. வண்டி கெளம்புது பாரு!”

திடமான அம்மா அவள் மகனுக்கு தைரியம் சொன்னாள்.

விந்தி விந்தி நடந்தபடி என்னைத் தாண்டிப் போனார் அவர்.

இறங்கி நடந்தேன் என் அம்மாவுக்கு தாயாக வீடு நோக்கி...


8 comments:

நசரேயன் said...

ம்ம்.. நல்ல முன்னேற்றம் .. என்னையவே கருத்து சொல்லவைத்து விட்ட கருத்து கயல்விழி

'பரிவை' சே.குமார் said...

arumai...

Neenda natkal kaziththu varum pothey nalla idukaiyudan.

vazhththukkal.

கார்க்கிபவா said...

கலக்கறீங்க போங்க்..

கயல் said...

//
நசரேயன் said...
ம்ம்.. நல்ல முன்னேற்றம் .. என்னையவே கருத்து சொல்லவைத்து விட்ட கருத்து கயல்விழி
//

நன்றி அண்ணாச்சி!

கயல் said...

//
சே.குமார் said...
arumai...

Neenda natkal kaziththu varum pothey nalla idukaiyudan.

vazhththukkal.

//

நன்றி குமார். நாம எழுதறதையும் கவனிக்க சில பேர். சந்தோசமா இருக்கு.

கயல் said...

//

கார்க்கி said...
கலக்கறீங்க போங்க்..
//
அப்படீங்களாண்ணா... நெசமாத்தானே சொல்றீங்க?

ரவி said...

good one.......

கயல் said...

//
செந்தழல் ரவி said...
good one.......

//
நன்றி

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!