Sunday, March 10, 2013

நீங்கா நிழல்

நடக்கத் துவங்கிய
நாளிலிருந்தே
பாதங்களின் அடியில்
முளைக்கத் துவக்கினாய் நீ
வெளிச்சத்தின் வீதம்
நீட்டிக் குறைக்கிறதுன் அளவை!

விட்டு விட்டு எரியும்
தெரு விளக்கொளியில்
ஊளையிடும் நாய்களுக்கு
உன்னைக் காட்டித்
தப்பிப் போயிருக்கிறேன்

இரவு வேளைகளில்
மேல்மாடிக் கதவடைக்க
எப்போதும்
உன் துணை தானெனக்கு

இரவில் என் முதுகின்
பின் நீ அயர
விடியும் வரையில்
தேடிக் கொண்டிருந்தேனுன்னை...


என்னோடு தூங்கி
என்னோடே எழுந்தாய் நீ
சூட்சுமம் புரியாமல்
காலத்தோடு கண்ணாம்பூச்சி ஆடிக்
கொண்டிருந்தேன்

விட்டுப் பிரியாமல்
விலகி நடக்காமல்
ஒட்டியும் உரசியும்
ஒன்றாகிய உன்னைப் போய்
எவருடனோ ஒப்பிட்டிருக்கிறேன்

நேற்றில்லை
இன்றில்லை
என்றும்
என்னோடே நீங்காது
நில் என் நிழலே!

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!