Friday, November 30, 2012

தியாகப் பெருவெளியில்...

அகழிகள் சுற்றிப் படர்ந்த
கோட்டையின் மதில்களுக்கப்பால்
சிம்மாசனத்தில் நீ!
மானுட நேயமேதும்
சுவாசத்தில் கலக்காமலிருக்க
நரமாமிசம் தின்னும் முதலைகளை
மிதக்கவிட்டிருகிறாய்
எச்சரிக்கை முயற்சியாக...
நானாய் இறங்கி
மீனாய் மாறி
நானாகவே கரையேறுகிறேன்
நாக்கில் சொட்டும் நீரோடு
பின் தொடருமவற்றின்
பசி தீருமுன்
வாயிலைத் திறந்துவிடு
வாழ்க்கை என்பதன் அர்த்ததைக்
கற்பித்துவிட்டு
இரையாகிப் போகிறேன்
என்றேனுமொரு நாள்
தெளிவுற்ற நீ
உப்பரிகையில் என்னை நினைத்து
கண்ணீர் சிந்தலாம்
வந்தேறிய நோக்கத்தை
வரலாற்றில் வரவு வைத்துவிட்டு
கூட்டுக்குள் உடல் சுருக்கிக் கொள்ளும் 
என் கவிதை!

1 comment:

கலாகுமரன் said...

மிகவும் அருமை
.
//வந்தேறிய நோக்கத்தை வரலாற்றில் வரவு வைத்து விட்டு//

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!