Saturday, November 3, 2012

சிறகுலர்ந்த கவிதை

’சொல்லுங்கள் கவிதாயினி’
திடீரெனச் சூட்டப்பட்ட பட்டத்தில் திக்குமுக்காடிப் போனாள்.

எதிர்பாராத பாராட்டுக்கும் போதையிருக்கிறது.

இலக்கியவாதியவன் கரகரக்கும் குரலுக்கும் சற்றே வசீகரமிருக்கிறது.

வயப்பட்ட மனதை இழுத்துப்பிடித்தது மனசாட்சி.

நேர்பார்வையில் அத்தனையும் உடைத்து நீந்திச் செல்ல... புன்னகையோடு எதிர்கொண்டான் அவன்.

எதிர்நீச்சல் பழக்கமென்பது உறைத்திருக்குமவனுக்கு. சற்றே கர்வமாயிருந்தது.

காற்புள்ளி அரைப்புள்ளி முற்றென நீண்டதென் கதை.

மமதை களைந்த நடுக்கத்தோடு அவள் யாரென வரையறுக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தாள்.

கவனமெங்கும் மணக்கும் மண்ணின் வாசத்திலிருந்தது.

ஆடத் துடித்த கால்களும் மறைக்கப்பட்டிருந்த தோகையும் கரும்மேகக் கூடலில் பரபரக்கத் துவங்கின.

கடந்த காலத்தில் தன் கைவரைந்த கதாபாத்திரங்களின் கலவையாய்,கவிதைகளின் வடிவில்,தேவதை சாயலில்.. அவள்பால் மையம் கொண்ட காதலில் பிதற்றலானான்  கவிதை ஆர்வலன்.

உறைந்த தண்மையில் பனியாலொரு சிற்பம் செய்து, விழிவழியாய் உயிர்கொடுக்க இதழ் குவித்தான்.

சட்டெனத் தொடங்கிய பூமழைத் தூவலில், மேலடுக்குக் கலைந்துச் சிறுமியெனவானாள்,கிளித்தட்டுச் சுற்றி மழையுள் கலந்தாள் பனிச்சிற்பமாயிருந்தவள்.

பம்பரக்கால்கள் மெல்ல மெல்ல வேகம் குறைத்த போது மென் புறாவாய் மேலெழும்பி அவன் வசமடைந்தாள்.

வெள்ளங்கிப் போர்த்திய போதகன் கனிவில், குளிரில் வெடவெடக்கும் அச்சிறுவுயிரின் நனைந்த சிறகுகளைத் தன் அலகால் சிக்கெடுத்து சுவாசத்தால் உலர்த்தத் துவங்கினான் பறவை உருக்கொண்ட இலக்கிய வித்தகன்.

வார்த்தைச் சூட்டில் தன் ஆழ்மன வக்கிரங்களெல்லாம் அவளாய் மாறி அள்ளித் தெளித்தப்பின்  ஆதிக்கப் புன்னகையொன்றை சிந்திவிட்டு இதுவேதும் தெரியாமல் தன்னறையில் உறங்கிக் கொண்டிருந்தவளைக் காமப் பார்வைப் பார்த்தபடி கடந்து போனான்.ஒர் ஆன்மாவை கொன்றுவிட்டு கவிதை வடிக்கும் அவனோடு வசமாக மறுத்தன வார்த்தைகள். அடையாத ஒருத்தியை அடைந்ததாக நீளும் புனைவோடு வன்மமாய் தொடர்ந்தபடியிருந்தது இப்படியாக....

இரட்டைக்கிளவிகளும் வியங்கோள் வினைமுற்றுகளும் எச்சச் சொச்சங்களும் பொறாமையோடு பார்த்துக்கொண்டிருக்க, கூச்சத்தால் மெய்சிலிர்க்கப் பெரும் குழைவோடு அவன் கவிக்கரமேகியது சிறகுலர்ந்த அக்கவிதை.

2 comments:

dheva said...

EXCELLENT!!!!!!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

வலைச்சரம் மூலம் தங்களின் வலைப்பூவினைப் பற்றி அறிந்தேன். வாழ்த்துக்கள்.

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!