Saturday, January 7, 2012

6 நிமிடங்களில்...


”வேகமாய் போ! அந்த கறுப்பு நிற ... ம்ம் மஞ்சள் சட்டை ஊதா ஜீன்ஸ்
அவந்தான் பார்ட்டி”

“சரி சரி, இனி நான் பாத்துக்கிறேன்!நீ வை”

அலைபேசியை மடித்து கைப்பைக்குள் போட, தவறி தரையில் விழுந்தது.
அவள் அதை எடுக்கக் குனிந்த அதே நேரம், மதுக்குப்பிகளோடு ஒருவன் தன்னை அந்த காருக்குள் நிரப்பி அதை உயிர்ப்பித்தான்.
கணநேரத்தில் வந்த வேலை காரேறி போனது.
சிணுங்கியது அலைபேசி.
“முட்டாள். முட்டாள். கவனமேயில்லை. எல்லாங் கெட்டுச்சி. அறுவது லட்சம் மொத்தமா அறுவது.உன்னையெல்லாம் பெரிய பிஸ்துங்கிரானுங்க.... $$#$@@$@$”

வழக்கமான வசவுகள் தான். சளைக்காமல் இருந்தாள். அவன் கொதித்து முடித்ததும் ,

”முடிச்சிட்டு வர்றேன் நீ போ! சும்மா கத்திட்டேயிருக்காத”


15..30..45...60...
சரியாக ஒரு மணி நேரம் கழித்து .... 

அதே கார். கண்ணைக் கசக்கி கொண்டு பார்த்தாள். அந்த மூன்று நட்சத்திர விடுதி முகப்பின் சொற்ப விளக்கு வெளிச்சம் கனவல்ல மெய்தானென்றது.
கிரீச்சிட்டு நின்றது. அந்த மஞ்சள் சட்டையோடு ஒரு வெள்ளைச் சட்டையும் கூடுதல் இணைப்பாக. கைப்பையை தடவிக் கொண்டாள்.இன்னிக்கு என் திறமையை நிரூபிக்கிறேன் பார்.

“அறுவது லட்சம் மொத்தமா அறுவது” அசரீரியாய் கேட்டது இவள் காதுக்கு மட்டும்.

அவன் தள்ளாடியபடி நடந்து போனான். ஏதோ இரைந்தபடி, கூட வந்தவனிடம்
காட்டுக்கத்தலாய் கத்திக் கொண்டிருந்தான்.

”தண்ணி கேட்ட வாங்கித் தந்தேன்.இப்போ நீ எனக்கு கடனாளி.பதிலா நான் கேட்டா என்ன மழுப்புற”
ஓ! பிரகாசமானது முகம்.வழி கிடைக்கும்... காத்திருந்தாள்.

எதிர்பார்த்தபடி அரைமணியில் வெள்ளைச்சட்டை மட்டும் வர,மெல்ல நெருங்கினாள்.

”இல்ல மாமு! அவன் பொண்டாட்டி சரியில்லன்னு தண்ணியடிக்க கூப்டான். வந்தேன். தண்ணியடிச்சி முடிச்சதும் இப்ப வேற வேணுங்றான். இவன்டயும் இவங்கப்பன் கிட்டயும் கெடந்து அல்லாடுறேன். ஒரே ராவடி....அதான் தெரிஞ்ச இடமெல்லாம் தேடிப் பாக்கலாம்னு. உனக்கு யாருன்னா தெரியுமா மாமு?”
இவளின் நெருக்கத்தை வெளிநாட்டு சென்டின் மணம் காட்டிக் கொடுத்திருக்க வேண்டும்.

"மாமு நான் அப்றம் கூப்டறேன்”

“என்னா”

சில சமிஞ்ஞைகள். கண்டு கொண்டான்.
 சடாரலென,
“எவ்ளோ?”

“அறுவது”

“ஆயிரம்?”

“இல்ல லட்சம்”

“ஹிஹி உனக்கு குடுக்கலாம்.ஹி ஹி...”

“உன்னால முடியாது”

“ஆமா ஆமா உள்ள இருக்கது மந்திரி மகன் அவனால முடியும். ஹி ஹி”

“வழியக் காட்டு நான் கெளம்பணும்”

வரவேற்பறையில் “சார்” எனக் குரல் தந்தவன் வெள்ளைச் சட்டையின்
கண்சிமிட்டலில் தெளிந்தவனாக எரிச்சலாய் தலை குனிந்து கொண்டான்.

வரவேற்பறை கடந்து, முதல் மாடியில் , அடுத்த மாடிப் படிக்கட்டின் தொடக்கத்தில் அந்த அறை.அனிச்சையாய் கடிகாரம் பார்த்தாள்.மணி அதிகாலை 1.00.

அழைப்பு மணியை தொட நீட்டிய அவன் கைகளை, இழுத்து முறித்தவள் சத்தம் வராதபடி வாயை மூடினாள். விலா எலும்புகள் நொறுங்கி விழுமளவு கால் முட்டியால் தாக்கப்பட்டவன் மடிந்து மாடிப் படியின் ஓரத்தில் உட்கார்ந்தான்.கைப்பையினுள் துழாவி கிடைத்த மாத்திரத்தில், சராலென பிரயோகித்தாள் அவன் குரல்வளையில். இரண்டு மூன்று நான்கு ...பருத்த சரீரம்.வெள்ளை சட்டையை நனைக்க தொடங்கியது குருதி....

யாரும் பார்க்குமுன் அறுவது லட்சம்....

சட்டை நனைத்த குருதி படிக்கட்டுகளில் பரவும் முன்னர்.... திட்ட மிட்டுக் கொண்டாள்.
அழையாத விருந்தாளியாக அறைக்குள் நுழைந்தவள், கட்டிலில் சிதறிக்கிடந்தவனை நிதானமாகப் பார்த்தாள்.

”வா... வா.. எடுப்பு நீ கில்லாடிடா.தேவதடா.. எங்க ... அவன் ...?”

தள்ளாடி எழ முயற்சித்தவனை தள்ளி அவன் கழுத்து,மார்பு என விரும்பியபடி கத்தியால் கிழித்துப் பார்த்தாள்.துடித்து அடங்கியது அவனுயிர்.பீறீட்ட ரத்தம் பஞ்சணை நனைத்தது.


கடிகாரம் பார்த்தாள்.இரவு  1.03.

சட்டென கண்ணாடி பார்த்தவள். அணிந்திருந்த வெள்ளை உடுப்பை கழற்றி,
வேறுடை ,வேற்று உருவமென கண நேரத்தில மாறினாள். கதவை திறந்து வெளியே வந்து படியிறங்கினாள். அவளோடே படியிறங்கியது குருதி ஒரு மெல்லிய கோடாக....

வரவேற்பறையை கடக்கையில், மெல்ல நிமிர்ந்த தலை ஏதும் சொல்லாமல் தலை கவிழ்ந்து கொணடது.

ஹோட்டலை விட்டு நெடுஞ்சாலைக்கு வந்தவள், திடுமென ஒரு பெரிய லாரியின் உரசலில் திடுகிட்டு பின் முகமலர்தாள்.அவளையும் அள்ளிக் கொண்டு பறந்தது லாரி.

மணிக்கட்டை திருப்பி மணி பார்த்தாள் 1:06.

”நீ டாக்டர் படிப்பை முடிச்சி வேலை செஞ்சா கூட இவ்ளோ சீக்கிரம் இவ்ளோ பணத்தை பார்க்க முடியாது.ஹி ஹி”
கறைபடிந்த பற்கள் தெரிய சிரித்தான்.

ரத்தம் படிந்த கையுறைகளோடு பணத்தையும் பையில் போட்டுக் கொண்டாள்.ஆயுதம் இடறவும்,’அடுத்த முறை ஐந்து நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்’. விரக்தியாய் சாலையை வெறிக்கத் தொடங்கினாள். அவள் கண்ணெதிரே கடந்து போனது மருத்துவக் கல்லூரி.

அந்த திசைக்கு நேரெதிரே அவர்கள் பயணிக்கத் தொடங்கினார்கள்.

1 comment:

ashik said...

First things first. Sorry for typing in english, right now i cant do it in tamil.I chanced upon this blog and i felt i should respond. The concept was good and new but to put it in ms-off parlance "fragment- consider revising". niraya vaakiyangalai maatriyamaithal veechu nandraaga irukkum endru en manadhirkku pattadhu. thaalmaiyaana karuththu mattumae. aarvathai thoonduvathaaga ulla sindhamani ennai meendum ingu alaithu varum endrae nambugiraen. vaalthukkal.

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!