Saturday, April 18, 2009

ஈன்று புறந்தருதல் தந்தைக்குக் கடனே!

        பசுமையான‌ பள்ளி நாட்கள்! பள்ளியிறுதியாண்டில் நடைபெற்ற ஒரு மறக்க முடியாத நிகழ்வு! பெண்கள் மட்டுமே படிக்கும் கிறித்துவ மதப் பள்ளி அது! அபூர்வமாய் ஆட்டம் போட வாய்ப்பு கிடைப்பதுண்டு! முதல் நாள் விடுதி தினக் கொண்டாட்டம்(Hostel Day Celeberation) ஆட்டம் பாட்டம் என அமர்கள‌ப்படுத்தி விட்டு மறுநாள் வகுப்பில‌ எல்லோரும் ஒரே சாமியாட்டம் தான்.தூக்கம்னா தூக்கம் அப்படி ஒரு தூக்கம். இந்த நெலமையில முதல் வகுப்பு வேதியியல் வகுப்பு எப்படியோ தள்ளியாச்சு!
        இரண்டாம் வகுப்பு, கண்டிப்புக்கு பேர் போன‌ ஒரு கன்னியாஸ்திரியின் தமிழ் வகுப்பு! கணீரென்ற குரலும் அவரது தமிழ் மொழி ஆளுமையும் கண்,செவி இரண்டையும் அவர்பால் இழுப்பதில் வியப்பொன்றும் இல்லை!ஆனா அன்னிக்கு எங்க‌ நெலமயே வேற!அவரோட வகுப்ப கவனிக்குற சுவராஸ்யத்த விடவும் நித்திரா தேவியின் தாலாட்டு ஆதரவா இருக்க போகவே, விடுதி மாணவிகள் எல்லோரும் அரைத் தூக்கத்துல! எங்கள் வரிசையில உள்ள ஐந்து பேர்ல ஒருத்தி தவிர எல்லோரும் சரியான தூக்கத்துல! என்னதான் சொல்லுங்க பாடம் நடத்துறவுங்களுக்கு டிமிக்கி கொடுத்துட்டு தூங்குறது ரொம்ப பெரிய சாதனை!
        இப்படியாக, "ஈன்று புறந்தருதல்"ன்னு ஆரம்பிக்கும் புறநானூறு(பொன்முடியார்) பாடலை அடிப்படையாகக் கொண்டு வகுப்பு நடைப்பெற்று கொண்டிருக்கையில், திடீரென நினைவு வந்தவர் போல், பாடத்தை நிறுத்தி விட்டு,"ஜான்சி,எங்கே படித்துக் காட்டு பார்க்கலாம்!", என்றார்.தெளிவான உச்சரிப்புக்கும், இனிமையான் குரலுக்கும் சொந்தக்காரியான,எனக்கடுத்து அம‌ர்ந்திருந்த‌ என் தோழிக்கான‌ அழைப்பு அது!
        அரை தூக்கத்திலிருந்த அத்த‌னை பேரும் வாரிச் சுருட்டிக் கொண்டு ஒர் வழியா சுயநினைவுக்கு வரவும், அவர் மத்த விசயங்களை சொல்லி முடித்து விட்டு, இவள் வாசிப்புக்கு செவிமடுக்கவும் மிகச் சரியா இருந்தது! (ந‌டுவுல எல்லாரும் தயாரா தமிழ் புத்தகத்ததுல அந்த குறிப்பிட்ட பக்கம் விரல் வச்சு கவனிக்குற அள‌வுக்கு பாசாங்கு) மொத்த வகுப்பும் ஜான்சியின் வாசிப்புக்கு கட்டுப்பட்டிருக்க, திடீரென ஒரே சிரிப்புச் சத்தம். மொத்த வகுப்பும் குலுங்கி குலுங்கி சிரிக்குது! ஜான்சிக்கோ,எனக்கோ ஒண்ணும் புரியல! எங்க தமிழாசிரியை அப்படி சிரிச்சு அதுவரைக்கும் பாத்ததேயில்லை! எதுக்கு சிரிக்கிறாங்கன்னே தெரியாம‌ நாங்களும் சிரிக்கோம்!!
        மெல்ல மெல்ல புரிய வந்துச்சு,ஜான்சி அம்மையார் தூக்க கலக்கத்துல இரண்டாம் வரியோட கடைசிய தூக்கி முதல் வரியில போட்டது தான் அந்த களேபாரத்துக்கு காரணம்!
        என்றைக்கும் நினைவில் நிற்கும் அந்த புற‌நானுற்றுப் பாட‌ல் பின்வ‌ருமாறு,

ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே!
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே!
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே!
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே!
ஒளிறு வால் அருஞ்சமம் முருக்கிக்
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே!
---புறநானூறு(பொன்முடியார்)


        ஒரு பெண்ணுக்கு தலையாய கடமையாக குழந்தைப் பேறும், தந்தைக்கு தலையாய‌ கடமை தன் குழந்தையை சான்றோனாக்குதலும் அவனுக்கு வேல் வடித்து தருதல் கொல்லனுக்கு கடமையாகவும், அப்படித் தயாராகி நிற்கும் தீரமான‌ இளைஞனுக்கு செழுமை நிரம்பிய நிலப்பரப்பை அரசாளக் கொடுப்பது வேந்தனுக்கு தலைக் கடமையாகவும் சொல்கிறது புறநானூறு.அப்படி சான்றோன் என பேர் பெற்ற அந்த இளைஞனுக்கு தலையாய கடமை, போரில் களிறை(யானையை) வென்று தன் வீரத்தை நிலை நிறுத்துவதே என்கிறார் பொன்முடியார்.இன்னார்க்கு இன்ன கடன் என வரைய‌றுக்கப்பட்ட சங்கத் தமிழர் நிலை போற்றுதற்குரியது. அது என் தோழியின் நாவில் பட்டு பொருள் மாறியது நகைப்புக்குரியது!'ஈன்று புறந்தருதல் தந்தைக்குக் கடனே!' அதாவது குழந்தை பேறு தந்தைக்குரிய கடன் எனச் வாசித்ததால் பொருள் திரிந்து போயிற்று!
        முன் வ‌ரிசை தோழிக‌ள் மூலமா நில‌வ‌ர‌ம் தெரிஞ்சுக்கிட்டு, ஜான்சிக்கு எப்ப‌டியோ புரிய‌ வ‌ச்சுட்டேன்! எல்லாம் சைகையில‌ தான்! சிரித்து முடித்து விட்டு, திருப்பியும் இவளை வாசிக்கச் சொல்ல அதே த‌ப்பு! கூண்டோட‌ கைலாச‌ம்ன்னு நாங்க க‌தி க‌ல‌ங்கி போயிருக்கையில் ஜான்சி ராணி ஒரு விள‌க்க‌ம் கொடுத்தா பாருங‌க‌! ஆயுசுக்கும் ம‌ற‌க்காது!
        "இல்ல‌ சிஸ்ட‌ர்! எத்த‌னை நாள் தான் நாம‌லே சும‌க்குற‌து? பாட்டுல‌யாவ‌து மாத்த‌ம் வ‌ர‌ட்டுமேன்னு தான்" என்று பெரிய‌ மாத‌ர் ச‌ங்க‌ த‌லைவி க‌ணக்கா நீளமான‌ உரை வேற‌! வ‌குப்பு ஆணாதிக்க‌ ச‌மூக‌ம் ப‌ற்றி திசை திரும்ப‌ 'அப்பாடா த‌ப்பிச்சுட்டோம்' பெருமூச்சு விட்டு ஜான்சியை நிமிர்ந்து பாத்தா அவ‌ என்ன‌மோ ரொம்ப‌ தீவிர‌மா வகுப்ப கவனிச்சுக்கிட்டு இருந்தா, ரொம்ப நல்ல புள்ளையா!

3 comments:

பழமைபேசி said...

ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே!
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே!
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே!
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே!
ஒளிறு வால் அருஞ்சமம் முருக்கிக்
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே!
படித்து மறுமொழி இடுதல் வாசகனுக்குக் கடனே!
கருத்து உரைப்பது மேன்மைக்குக் கடனே!
சொல்ல வந்த விபரம் சுவையா இருக்கு. ஆனா, விபரத்தைப் பத்தி பிரிச்சி, வடிவா தந்தா இன்னும் நல்லா இருக்குன் இனிய சினேகிதியே!

கயல் said...

//
பழமைபேசி said...
ஈன்று புறந்தருதல்
//
வாங்க!வாங்க‌! நன்றி! மாத்திட்டேனுங்க!

"உழவன்" "Uzhavan" said...

:-))

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!