Tuesday, May 22, 2012

நான்....

பண்டிகைகள்,விழாக்கள்,ஒன்று கூடல் சந்திப்புகள் இது போன்ற விசயங்களில் ஒப்புக்கு கலந்து கொள்ளாமல், சிவாஜி அல்வா மாதிரி அந்த பாத்திரமாவேமாறிப் போறது என்னோட பால்ய காலத்து பாதிப்புங்க. இப்பவும் அப்படித் தான்...வியாதி குணமாகல.பின்புலம் என்னான்னா? நான் வளர்ந்த குடும்ப சூழல் அப்படி. மொத்தமா ஒரு நாப்பது நாப்பத்தஞ்சு பேரு உள்ள கூட்டுக் குடும்பத்தில பிறந்து வளர்ந்துட்டு,சட்டுன்னு விலக்கி படிப்புக்காக தனிமைப்படுத்தப்பட்டு,காலப்போக்கில் வேலை,முன்னேற்றம் என மாறிப்போனது வாழ்வின் திசை. எண்ணங்களும் சமூகத்தின் மீதான மதிப்பீடல்களும் அவ்விதமே!
ஒவ்வொரு திருவிழாவுக்கும் ஏதோவொரு குறை எனக்குள் உறுத்திக் கொண்டேயிருக்கும்.உடையோ,காசோ,ஆபரணங்களோ ஏதோவொன்று மற்றவர்களை விடசற்று குறைவோ என்ற எண்ணம் இருந்ததுண்டு. அந்த நிறைவில்லாத மனப்பான்மையில் சில பொழுதுகள் அழுதே கழிந்ததுண்டு. இன்னிக்கு தவற விட்ட இந்தநாளும் வயசும் திரும்பி வராதுன்னு என் வீட்டு பெரிய மனுசி எப்பவும் சொல்லுறதுண்டு. அது எத்தன உண்மையின்னு இப்போல்லாம் உணர ஆரம்பிச்சிருக்கேன்.
பள்ளியில் மிகக் கடுமையான கட்டுப்பாடுகள்.அத்தனையும் களையத் துடிக்கும் மனம். யாரேனும் எது சொன்னாலும் அதை மீறியே ஆகனும்கிற வம்வரும். அப்போது பெரிதும் விரும்பப்பட்ட மையிடலும்,மல்லிகைப்பூவும் கல்லூரிக் காலங்களில் அபத்தமாயிப் போயின. பெரியார் தாக்கம் நிறைந்திருந்த காலங்களில் அணிகலன்கள் ஏதுமின்றி கருப்பு நிற உடைகளோடு சுற்றின நாட்களும் உண்டு. அம்மாவுக்கு கறுப்பு நிற உடைகள் பிடிக்காது என்பதால்அவரிலிருந்து என்னை அறிவுஜீவியாய் காட்டிக் கொள்ள அதைத் தேர்ந்தேன் என்றும் சொல்லாம்.மிகவும் நேசித்த எல்லாமும் ஏதேனும் ஒரு சில வினாடியில் அற்பமாகிப் போவதன் மாயமென்ன? கவிஞரின் வரிகள் எத்தனை சத்தியமானது?
 ’மாற்றம் என்பது மானிடத்தத்துவம்...’ விலங்காத்தான் இருந்தேனோ இத்தனை நாளும்.மனசு தான் எத்தனை வினோதமானதுங்க?  நெனைக்க நெனைக்க ஆச்சர்யம் தாங்க முடியல. வித விதமான எண்ணங்கள். பிரச்சனைகள் கொப்பளிக்கும் வாழ்வில் எதையும் மீறாமல் எதுவும் பிறழாமல் வாழ்தல் நிச்சயம் பெரிய விசயம் தான். பிரச்சனைக்குள் தலை மூழ்கி மூச்சடக்கி வாழும்ஆசையில் நீர்க்காகமாய் தலை சிலுப்பும் போதில் எனக்கு நானே செல்லமாய் தட்டிக் கொள்வதுண்டு ’சமத்துடீ நீ!’.

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!