Saturday, April 21, 2012

முத்தக்கா

மதிய நேரங்களில் புழக்கடை திண்ணையில் சீட்டி கலந்த சினிமாப்பாட்டு வாசனையோடு, உளுந்தும் அரிசியும் வாயில் பாதியும் ஆட்டுக்கல்லில் மீதியுமாய் அரைபட்டுக் கொண்டிருக்கும்.
இன்னாருக்கு இன்ன வேலை. தப்பாது நேர்த்தியாக செய்து முடிக்க வேணும். அப்பத்தாவின் வீட்டு நிர்வாகத்தின் எழுதப்படாத சட்டம்.ஆட்டுக்கல் சாம்ராஜ்யம் பெரும்பாலும் முத்தக்காவினுடையது.

”ஒரே நாள் உனை நான்..ம்ம்ம்ஹீம்ஹீம்”

”பார்த்த ஞாபகம் இல்லையோ...ம்ம்ம்ம்ம்...பருவ நாடகம் ...”

சுருதி சேராமல் ஆனா பாட்டு வரி பிசகாமல் ஒரு சங்கீதக் கச்சேரி. முத்தக்கா அதில் மகா கெட்டிக்காரி. இழுத்துச் சொருகிய பாவாடையும் அவள் தலை முடி போட்டிருக்கும் விதத்திலும் தெரியும் அவள் எத்தனை உழைப்பாளி என்று. ஒரு பெரிய ஆட்டுக்கல். மரப்பிடி கொண்ட குழவிக்கல். அசைக்க முடியாது நம்மால். அதைக் அப்படியே காற்றில் கை துழாவுவது போல் அசாதாரணமாய் சுற்றிக் கொண்டிருப்பாள்.

பாட்டுக் கட்டினால் அது ஒரு வேகம். ஊர்ப் புரணி பேசினால் அது ஒரு வேகம். அம்மாவோ சித்தியோ திட்டி விட்டால் இன்னொரு வேகம். ஒளியும் ஒலியும் பார்க்க போக வேணி வந்தால் அது ஒரு வேகம். இட்லிக்கு உளுந்து தனி, அரிசி தனி ஆட்ட வேண்டும். தோசைக்கு இரண்டும் சேர்ந்து. இடைப்பலகாரத்துக்கு தனியொரு பக்குவம்.எல்லாம்
அத்துப்படி. எனக்கு அவளைப் பார்த்தால் பொறாமையாக இருக்கும். முத்தக்கா எத்தனை பலசாலி.அப்படியே பரபரவென ஒரு பம்பரத்துக்கு கால் முளைத்தாற் போல.அத்தனை சுறுசுறுப்பு. ஏதோ ஒரு பாட்டை எப்போதும் முனுமுனுத்துக்கொண்டிருப்பாள். சிரித்த முகமும் சீதேவியும். பார்த்ததுமே நமக்கும் அவள் பரபரப்பு தொற்றிக் கொள்ளும். முகமோ நிறமோ எடுப்பில்லை என்றாலும் வனப்பின் மிகுதிக்கு குறைவே இருக்காது. செதுக்கி வைத்த கருஞ்சிலை போல் இருப்பாள்.

வீட்டு வேலை தொடங்கி தொழுவம் வரைக்கும் அவளின் பங்களிப்பு இருக்கும். சமையலறைக்குள்ளும் அப்படியே... அவள் கைப்பக்குவம் எவருக்கும் வராது.

”ஏ முத்து..”

“அடியே முத்து...”

“முத்தூ...”

இப்படியான ஏதோ ஒரு தொனியில் முத்தக்கா எப்போதும் வீட்டுக்குள் ஒலித்துக் கொண்டிருப்பாள்.

“இங்க வா.இந்த லெட்டரை முத்தப்பண்ணனங்கிட்ட குடுத்துட்டு ஓடியாந்துரு. நடுவில ஆருக்கிட்டயும் கொடுத்துறப்டாது. சரியா?”

இப்படி ஆரம்பித்த தகவல் பரிமாற்றத்தில் அன்றைக்கொரு சிக்கல். சித்தப்பாவின் கைகளில் அகப்பட்டுக் கொண்டது கடிதம். ஆறாம் வகுப்பு வரை அவள் கற்ற கல்வி அன்பே ஆருயிரே அத்தான் என்றெல்லாம் புலம்புவதற்கு போதுமானதாக இருந்தது.ஆனால் அவள் தலையெழுத்துத் தான் சரியேயில்லை.முத்தக்காவுக்கு அப்பா இல்லை. அவள் அண்ணாவும் தங்கையும் சேர்த்து நான்கு பேர் கொண்ட குடும்பம் எங்கள் வீட்டினை அடைக்கலமாக கொண்டிருந்தது.அவள் அம்மாவோ அத்தனை சுதாரிப்பில்லை. அண்ணாவும் தங்கையும் படிக்க தன்னை உருக்கிக்
கொண்டிருந்தாள். அவள் எனக்கு அத்தைமகள் உறவு.அந்த செக்கு மாட்டின் மேலும் யாரோ காதலெனும் கல்லெறிந்தார்கள்.

அப்பா,அய்யா,பெரியப்பா இப்படி யாருமே ஊரில் இல்லை.கல்லூரியில் படிக்கும் சித்தப்பாவும் என் அண்ணன்மார்களும் இந்த வழக்குக்கு நீதிபதிகளாயினர்.பெல்டும் பிரம்புகளும் அவளுடலை நன்றாய் பதம் பார்த்தன. பூட்டப்பட்டிருந்த பந்திக்கட்டு கீழறையில் ”அய்யோ அம்மா” என்ற கொடூரமான சத்தம் காதுகளின் வழி இதயத்தை கிழித்துக் கொண்டிருந்தது.வீட்டுப் பெண்கள் கண்ணீரும் கம்பலையுமாய் அங்கேயும் இங்கேயும் ஓடிக் கொண்டிருந்தார்கள். செய்வதறியாது அழுது கொண்டிருந்தோம் நடக்கும் விபரீதத்தின் வீரியம் தெரியாமல்.

”தம்பி விட்டிருங்க! பாவம் செத்துறப் போவுது” இது அம்மா.

“வேணாம்பா பாவம் பொம்பளப்புள்ள” இது சித்தி.

“வயசு வந்த புள்ளடா!கை நீட்டப்படாது” இது அப்பத்தா.

“கொல்லு மாணிக்கம். கொன்னு போடு! நமக்கு வேண்டாம் அந்தப் பயபுள்ள” இது முத்தக்காவோட அம்மா.

“கொன்னுருங்க மாமா!” இது முத்தக்காவோட அண்ணன்.

பிரம்பு ஒடிஞ்சதோ, கை ஓய்ந்ததோ ... கதவு மெதுவாய் திறந்தது.

வேர்த்து விறுவிறுக்க, கைகளை உதறியபடி சித்தப்பாவும் அண்ணன்களும் ஏதோ சாதித்த பூரிப்பில்... காது கூசுமளவுக்கு வசவுகளை சிந்தியபடி நகர்ந்தார்கள்.

அடுத்து பெண்கள் கூட்டம். நைந்து போன அவளை இன்னும் நோகடித்துக் கொண்டிருந்தது வார்த்தைகளால்...

அப்பா வரும் வரை கிழிந்த நாராய் கிடந்தாள் அந்த காற்றோட்டமில்லாத அறைக்குள். அன்று தொடங்கி நாலு நாட்கள் முத்தக்கா கண்ணில் படவேயில்லை. ”முத்தக்கா எங்கம்மா?”

வாயில் சோற்றோடு மெதுவாய் கேட்டேன். பதிலாய் சப்பென அறை விழுந்தது.

அப்பா வந்தார். சத்தமாய் பேசினார். அய்யாவும் பெரியப்பாவும் தலை கவிழ்ந்து உட்கார்ந்திருந்தார்கள். அண்ணகளும் சித்தப்பாவும் ஆக்ரோசமாய் கத்தினார்கள்.

முத்தக்காவின் அம்மா அய்யாவின் காலில் விழுந்து அழுது கொண்டிருந்தார்.

முத்தக்கா முற்றத்து தூணோரம் ஒடிந்து நின்றிருந்தாள்.அழுது வீங்கிய கண்களும் உதடு கிழுந்து வீங்கிய முகமுமாய் பார்த்ததும் அழுகை முட்டிக் கொண்டு வந்தது.நான் அவளின் ரசிகை. அவள் சுறுசுறுப்பின் - அவள் வழி நுகர்ந்த சினிமா பாடல்கள்-பால் கறக்கும் இலட்சுமி பசு -முற்றத்து மாக்கோலம்- மொட்டை மாடி வற்றலென எனக்கு அவள் செய்கைகள் மீதான பிரமிப்பும் ஈர்ப்பும் அலாதி. என் பசிக்கு சோறூட்டிய கை. தலை பின்னி பூ முடித்த கை. கைகளுக்குள் கை கோர்த்து ராட்டினம் போல சுற்றிக்காட்டுவாள். எனக்கு

தலை கிறுகிறுக்கும் ஆனால் அவள் அசையாம்ல் அப்படியே நிற்பாள். ஆச்சரியமாய் இருக்கும்.இப்போதோ சோர்ந்து போய்க் கிடந்தாள்.
இரவு முழுக்க ஒரே இரைச்சல்.அத்தைகளும் வந்திருந்தார்கள்.தூங்கிப் போனேன்.

மறுநாள் வீடு முழுக்க தேடியும் முத்தக்கா கண்ணில் படவேயில்லை. வெள்ளிக் கிழமை அப்பத்தாவுடன் கோவிலுக்கு போகும் போது பார்த்தேன். முத்தக்கா முத்தப்பண்ணன் வீட்டில் பாத்திரம் தேய்ப்பதை. மூணரை வயதுக்கு சாதியும் காதலும் பெரிதாய் தெரியவில்லை எனக்கு.

”முத்தக்காஆஆ!”

என் பெயரைச் சொல்லியபடி ஓடிவந்தவள் அப்பத்தாவின் சுட்டெரிக்கும் பார்வையில் அப்படியே நின்றுவிட்டாள். கோயில் வந்து விட்டது. முத்தக்கா சின்னதொரு புள்ளியாகிப் போனாள்.

“ம்ம்ம்! கையில அரைக்கிற மாதிரி வருமா மிசினில அரைக்கிறது? கல்லுமாதிரிக் கெடக்கு இட்டிலி... “ அங்கலாய்த்த அப்பத்தா மருந்துக்கும் ’முத்து இருந்தா..’ என்று

சொல்லவில்லை. வம்படியாக மறக்கப்பட்டாள் அவள் காதலின் பெயரால்...

ஈரம் படாமல் எவர் கையும் படாமல் வெறிச்செனக் கிடந்தது ஆட்டுக்கல்.

3 comments:

Thuvarakan said...

the ways you tells the story was good.....

Thoduvanam said...

மண்ணின் மனம் மாறாமல் ,மன மெல்லாம் முத்தக்கா.அருமை வாழ்த்துக்கள்.

KARTHIK said...

// முத்தக்கா நாச்சியப்பண்ணன் வீட்டில் பாத்திரம் தேய்ப்பதை. //

அங்க மாவு,இங்க பாத்திரமா...

எழுத்துநடை அருமைங்க :-)

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!