யாருமறியாமல் மறைத்து வைத்திருந்தேன் - அந்த
அவமான தருணங்களை பதுக்கி வைத்திருந்தேன்
நினைவுச் சுரங்கத்தில் பாரமான நினைவுகளாய்...
இதுநாள் வரையில் இறுக்கி வைத்திருந்த
இருதயத்து நினைவுகளை எடுத்து பகிர்கின்றேன்
எம்மக்கள் எல்லோரும் உணர்ந்திடவே!
எழுத்துத் தேர்வில் தேறிவிட்ட சந்தோசத்தில்
நேர்முகத் தேர்வுக்கான அறிக்கையுடன்!
இனியாவது நிமிருமா என் பொருளாதாரம்?
இயல்பான எதிர்பார்ப்போடு பதட்டத்தில் நான்
பன்னாட்டு நிறுவனமொன்றின் வரவேற்பறையில் ....
பதிவு கோட்புகளில் பதியாத பெயரோடும்
பாமரத்தனம் பசி இன்னபிற குறைகளோடும்
படிப்பே தெரியாத தமிழகத்து சாபக்கேடு
நான் பிறந்த "மலைக் கிராமம்"
சந்தவரி எழுதி சரித்திரமாக்க போவதில்லை
சமூகம் எனக்கிழைத்த சதியை எடுத்துரைத்து!
உள்ளங்கை நெல்லிக்கனி போல தெளிவாய் தெரிவதில்லை
உரிமையை தொலைத்த எம் மக்கள் வாழும்நிலை!!
கற்பிழந்தால் கன்னிமட்டும் .....
கொள்கையிழந்த மானுடர் - தம்
கொடிபிடிக்கும் குற்றத்தை
என்னவென்று இயம்புவது?
தேர்தல் சமயம் மட்டும் தேடி வரும் நரிக்கூட்டம்
தேவை முடிந்த பின் தேவர்களின் அணி வகுப்பாய்..
சூத்திர சாதியென்று ஒதுக்கி வைக்கும் - அவர்தம் வெற்றிக்கு
சூத்திரதாரியான எம்மக்கள் கூட்டத்தை!
மேடையெங்கும் பேய்முழக்கம் தாய்மொழியின் துளிர்பிற்க்காய்...
தமிழ் பாடமேயில்லாத பள்ளியில் தம்மக்கள் படித்திடினும்
தன்நெஞ்சறிந்து பொய்யாய் முழங்குகின்றார்
தம்பட்டமடிக்கின்றார் தாய்மொழிக்கல்வி கொள்கையென்று!
தலைமை இப்படியிருக்க,
கொள்கை பிடிப்புடனே தன்னைத் தொலைத்திட்ட தொண்டன் - தம்முள்
வளர்த்திட்ட வாழும் முறைமையினால்....
தாய்மொழி வழிக்கல்வியெனும் தம்கட்சி கொள்கைக்காய்
தார்மீகப் பொறுப்புணர்வில் என் தந்தை!
படிப்பதே பெரும்பாடு இதிலே தரம் வேறா?
இப்படியாக,
தமிழ்வழிக்கல்வி என் தலையெழுத்தாயிற்று!
எல்லோரும் சமமாய் வாழ்ந்திட்டால் எதுவுமே குற்றமில்லை - மாறாய்
தலைவனென்றும் தொண்டனென்றும் தரம்பிரித்த வாழ்க்கைத்தரம்!
வறுமை தொண்டனுக்கென்றும் வசதி தலைவனுக்கென்றும்
அண்மையில் மாறுதலுக்கு ஆட்பட்ட அரசியல் சட்டத்தால்
மதிப்பிழந்த தன்மானம் காலாவதியான கனவுகளுமாய்
காலச்சக்கரத்தில் நானும் வேலை தேடி....
பாவப்பட்ட சமூகத்தில் பதிக்கப்பட்ட விதை நான்!
பெரும்பாடுபட்டு சூரியவெளிச்சம் பார்த்த வீரிய விதை நான்!
பட்டம் முடித்து பட்டமேற்படிப்பு வரையான போதும்
பொருளாதாரம் மட்டும் கடைநிலையில்!
கலப்பில்லாத மொழியறிவு கனவாகிவிட்ட காரணத்தால்
கருத்தை தெரிவிக்க தமிழை தழிழாகச் சொல்லாமல்
அந்நிய மொழியோடு அரைகுறையாய் கலக்கச் செய்து....
அறிந்துமறியாமலும் யாம்புரியும் தவறனைத்தும்
பொருத்தருள்வாய் தமிழன்னாய்!
வேலைநிமித்தம் என்னுள் செத்துவிட்ட
தாய்மொழிக்காய் துக்கம் கொண்டாடி
பாடாய்படுத்தும் பண நெருக்கடியால்
பிரிதொரு மொழியின் ஆளுமையில்!
கருத்தாழம் மொழியறிவு உடனான கூட்டணி
தோற்றுப் போய் புதிய மொழியொன்று
பிழைப்பிற்காய் உலவுகையில் எப்படி தொடங்குவது?
தயக்கத்தில் கல்லாய் அமர்ந்திருந்தேன்!
நாகரீக நங்கையுடன் நேர்முகத் தேர்வு!
பெயரைக் கேட்டனள் பதிலை சொன்னபின்
வேறொன்றும் கேளாமல் மவுனமாய்- தாய்மொழியின்
தாக்கம் உள்ளதென தட்டிக்கழித்து விட்டாள்.
"தமிழ்ச்செல்வி" யெனும் என் பெயரை
அம்மொழியில் எப்படித் தான் சொல்லுவதோ?
அந்த நொடிப் பொழுதில் நான் பட்ட
அவமானத்தை என்னவென்று எழுதிக்காட்ட?
அம்மொழியும் இல்லாமல் நம்மொழியுமில்லாமல் -கலப்பினத்
தமிழோடு உலவுதல் தாம் இன்று பிழைக்கும்வழி!!
பழமையை கொன்று புதுமையா? - இல்லை
பழமையில் மெருகிடுவது புதுமையா? - தமிழை
முதலாய் கற்ற காரணத்தால் தன்மானம்
மிகுந்து போய் தட்டி கேட்டதன் விளைவு?
தாய்மண்ணில் நானிருந்தும்
மொழியால் அந்நியமாய்!!
தாய் மொழியே என் பெயரில் உள்ளதென
நான் கொண்ட கர்வம் தகர்ந்து போய்
தலைகுனிந்து நடந்ததேன் தன்னிலை மறந்து
என் எதிர்காலம் குறித்த எண்ணில்லா கேள்வியோடு!
வறுமை வதைத்த போதே தெரிந்தது
வாழுதற்கு வளைய தெரிய வேணுமென்று!
இன்று பன்னாட்டு நிறுவனமொன்றின் நிர்வாகஅறையில் ....
முயன்றவரை மொழி கலப்பின்றி மேலாளர் " தமிழ்ச்செல்வி"!