உறவுகளையும் நேசிப்பதால்
வர்த்தியாய் வாழ்வைத் தொலைக்கிறேன் - அவர்
வசிக்க தோதாய் வெளிச்சம் தந்து
சிந்திய வேர்வைத் துளிகள் அத்தனையும்
சிப்பமாய் சேமித்து வைக்கிறேன்
என் சந்ததிகள் படித்துக் கொள்ளட்டுமென்று....
தனிமைக்கு பயந்து உனக்குள் சிறைபட்டேன்
வேட்டைக்காரனுக்கு பயந்து வலை புகும்
முயற்குட்டியின் சாமர்த்தியத்தில்....
தெரியவில்லை எனக்கு அன்று
வீடு முழுக்க வியாபித்திருந்த
கூரிய கொடுவாள்களுக்கு என் குருதி
இத்தனை பிரியமென்று
கூலிக்கு அதிகமாய் கூவியும்
அற்பமாய் கிடைத்த பொருளோடு
கூடு திரும்புகிறேன்
விசிறி விட வேண்டாம்
வேலால் குத்தாமலிருந்தால் சரி
தடவிப் பார்க்கையில்
தழும்பு மட்டும் மிச்சமாய்....
பார்ப்பவர்களுக்கு எப்படி புரியும்
காயம் காய்ந்து வடு வந்த வரலாறு
கேட்டு அழ வேண்டாம்
கேலி செய்யாதிருத்தல் உத்தமம்
பெண்ணீயம் பெருமையாய் பேசுகிறாய்
கேட்டவர் அனைவரும் சொக்கிப் போகிறார்
'கொடுத்து வைத்தவள்'
ஒருமித்த குரலில் ஒத்து ஊதுகிறார்
வேடனின் சாமர்த்தியம் உன் கண்ணில்...
வெறுப்பில் கண்ணீர் வந்ததெனக்கு
'இல்லையென்று சொல்லக் கூடாது'
வியாபாரியின் விற்பனைக் கொள்கை போல
'எதற்கும் கண்ணீர் கூடாது'
வஞ்சியென் வாழ்க்கை கொள்கை
மிடறு போல் வேதனை விழுங்குகிறேன்
நவயுக நாகரிகங்கள் எதற்கும்
ஏங்கவுமில்லை ஏற்கவுமில்லை
இயல்பாய் வாழ்வதே இனிப்பாய்.....
வாழ்க்கை விற்று வசதி வாங்கும்
விற்பனை பிரதிநிதி நீ!
மலரின் வாசனை என்றும்
மண் வாசனை என்றும்
தேடி நுகர்வது சாத்தியமில்லை
பணம் பண்ணும் எந்திரம் நீ
பாசத்துக்கு பணிவது சாத்தியமில்லை
உரையாடலுக்கு நடு நடுவே
மணித்துளிகளை கணக்கெடுக்கும் உனக்கு
மழையின் பிரவாகத்தினை எப்படி சொல்ல?
யதார்த்தம் பேசுவதாய் சொல்லிக் கொண்டு
எத்தனையோ முறை மிச்சமின்றி
கொன்றிருக்கிறாய் என்னை
பதிலேதும் சொல்லாமல் பாவையாய் நான்!
எதுவுமே இல்லை ஆனாலும்
'அரசிளங்குமாரி' நான் அப்பாவுக்கு
எல்லாமும் தருகிறேன்
இருந்தும் ஏற்க மறுக்கிறாய்
நானும் சராசரி மனுசியென்று
கனவுகள் தீர்ந்த நரக வாழ்வு
நிதமும் தினுசு தினுசாய்
தன்மான படுகொலைகள்
குற்றுயிராய் குமைந்து மறுகினும்
பொழுது விடிகையில் புத்தம் புதியளாய்
உதட்டில் ஒட்ட வைத்த புன்னகையுடன்
உற்சாகமாய் போலி ஊர்வலம்
இயந்திர நாட்டியம் மாதக் கடைசிக்காய்
இவைதாம் நடுத்தரவர்க்கத்து மருமகள்
'தாலிச்சிறை' என்று சொல்ல
ஒப்பவில்லை மனது
தானாய் வரைந்த வட்டத்தை
'சிறையென்றா' சொல்வது?
கண்ணாடி வேலி உடைப்பது கடினமில்லை
மனமில்லையென்பதே மகத்தான உண்மை!
மாற்றம் வரும் நம்பிக்கையில்
புழுதியாயினும் சுகித்தபடி.....