Thursday, July 7, 2016

மதுர அப்பளம்

நாக்கு அப்பளம்
சோவி அப்பளம்
மோதிர அப்பளம்
ஜவ்வரிசி அப்பளம்
மிளகு அப்பளம்
கறி வடகம்
இப்படி ஒரு கூட்டமே வந்து இறங்கியிருக்கு மதுரையிலிருந்து...
மெல்ல பழைய நினைவுகளையும் எழுப்பி விடுகிறது.
புதுமண்டபம் பக்கத்துல ஒரு அப்பளக் கடை.
வழக்கமா, தீபாவளி/பொங்கல் பர்சேஸ் பண்ணிட்டு, மதியானச் சாப்பாடு முடிச்சிட்டு, வரும் போது வாங்கவென்று ஒரு பெரிய லிஸ்ட்ல கடைசியா அப்பளக்கடை பர்ஸேஸ் இருக்கும்.
பக்கத்துவீட்டு அக்கா, கமலா அண்ணி,அம்மா கூட வேலை செய்றவங்க, அவங்க பிள்ளைங்க அப்றம் நானு.. இப்படி ஒரு கூட்டமா பண்டிகை நாளுக்கான தேடல் துவங்கும்.
எங்கள் வீட்டில் ஆட்களின் எண்ணிக்கை அதிகம். வேஷ்டியும் கண்டாங்கி சேலைகளும் மதுரையில் மிகத் தரமாகவும் விலை குறைவாகவும் கிடைக்கும் என்பதால் அம்மாவும் ஊர் சுற்ற வாய்ப்பென்பதால் இன்னும் சிலருமாக ஒரு பெரிய திட்டம் ரகசியமாக தயாராகி ஒரு சனிக்கிழமையென முடிவாகும்.
சின்ன வயதிலிருந்து மதுரை விழிகள் விரியச் செய்யும் ஒரு நகரமாகத் தானிருக்கிறது. மனுதுக்கு அணுக்கமான ஒரு நகரமாகவும்.
அதிகாலை ஆறு ஏழு மணிக்கு கிளம்பினால் ஒன்பது மணிக்கு மதுரை வந்து சேர்வோம். மதுரை மீனாட்சி அம்மனை தரிசித்துவிட்டு தாழம்பூ குங்குமமும் ஜவ்வாது விபூதியும் அர்ச்சனை வாழைப்பழங்களோடு நல்லதொரு இடம் பார்த்து உட்கார்ந்தால் பசி கப கபவென்றிருக்கும்.
இட்லியும் வெங்காயச் சட்னியும் வீட்டிலிருந்தே கட்டிக் கொண்டு போய் அங்கே சாப்பிட அத்தனை ருசியாய் இருக்கும்.
அன்றைக்கு வாழ்க்கையும் அத்தனை ருசியாய் இருந்தது.
சேலைகளுக்கென, பாவாடை சட்டைத் துணிகளுக்கென, அப்பாவின் கட்சி வேட்டி, தம்பிகளுக்கு யூனிபார்ம் துணி இப்படி நீளும் பட்டியல் முற்றுப்பெற மத்தியானமாகும்.
சாப்பிட்டுவிட்டு, சேலைக்கு மேட்சிங் வாங்கவென ஒரு அலசல். மொத்தமாய் ஜாக்கெட் துணிகளை நிறுத்து வாங்கும் ஓரிடம், கொள்முதல் கடை. அம்மாவைக் கேட்டால் இப்போதும் கடை பெயரை சரியாகச் சொல்லுவார்.
காலாற சுத்திட்டு, ஒரு தித்திப்பு காபியோட மாட்டுத்தாவணி வருவோம். ஆளுக்கு மூன்று முழம் பூவென்று கமகமக்கும் மல்லிப்பூ.
அதோடு பஸ் பிடிச்சு வீடு வர வேண்டியது தான்.
சென்னையில் ஏதோ குறைகிறது.
மதுரை தான் மனதில் நிற்கிறது.... எப்போது நினைத்தாலும் முதல் மழை நனைக்கும் போதெழும் மண் மணம் போலே.. 

No comments:

Post a Comment

வந்தது வந்தீங்க வாழ்த்தோ வசவோ சொல்லிட்டுப் போங்க!