Saturday, September 21, 2013

தெத்துப்பல் அழகி

அரைமணி நேர உடற்பயிற்சியும் வேக நடையும் வெந்நீர் குளியலும் கடந்தும் அரற்றும் மனது ஒரே கேள்வியைத் தான் கேட்கிறது....
“உடல், உன் உயிரை விட பெரிதா ? அம்மணமென்ன அத்தனை பெரிதா?”
இந்த கவரிமான்,கற்பு பிதற்றலெல்லாம் எரிச்சலின் உச்சத்துக்கு கொண்டு செல்கிறது. உன்னுடம்பை ஆடையின்றி எவராவது பார்த்துவிட்டால் அவனோடே வாழ்ந்து செத்துப்போ எனவும் தூக்கில் தொங்கிவிடு என்றுமா நீ படித்த படிப்பு சொல்லி வளர்க்கிறது? எவர் வழி இவ்வழி தேர்ந்தாய்?
தெத்துப்பல்லிருக்கும். மாநிறம் தானென்றாலும் கண்களும் சேர்ந்து சிரிக்கும் அழகி. சின்ன வயதில் பார்த்தது. தோழியின் தங்கை. அத்தனைப் பரிச்சயமில்லையெனினும் பார்த்திருக்கிறேன்.
மரண ஓலமின்றி நடந்த அவளின் இறுதி ஊர்வலத்தில் கலந்துவிட்டு வந்தேன். இப்போதெல்லாம் மனம் மரத்துவிட்டது. அழுகை வருவதில்லை அத்தனை சீக்கிரம். என்னை விடுங்கள். அங்கே பெரிதாய் எவருமே அரற்றவில்லை. சீக்கிரம் சீக்கிரமென்கிற குரல்கள் தான் கேட்டபடி இருந்தன. வந்ததிருந்த உறவினர்கள் யார் நீங்களென்று விசாரித்து உள்ளே விட்டார்கள்.
இன்னும் சிலமணி நேரத்தில் சிதைக்குப் போகும் மகளென்ற போதும் அவள் மரணத்தை விடவும் அதன் காரணத்தை மறைக்கும் தவிப்பிலிருக்கும் தகப்பன் எத்தனை பெரிய மனச்சிதைவுக்கு ஆளாகியிருக்கிறான்? விசும்பாமல் வெறித்தபடியிருக்கும் அந்தக் குடும்பத்தின் அத்தனை முகத்திலும் பேரதிர்ச்சி.

’வயித்துவலி சார்’ அப்பட்டமாய் பொய் சொன்னார். எத்தனை வாதாடியும் ‘வேணாம்மா. போலீசு கீலீசு கோர்ட் பத்திரிக்கை இதெல்லாம் வேணாம்மா. விட்டுடுங்க ப்ளீஸ். இன்னும் ரெண்டு பொட்டப்பிள்ளைங்க...’ அமைதியாய் கலைந்தார்கள்.

எங்கிருந்தென்று புரியவில்லை.ஆனால் சரிசெய்ய வேண்டும். பாலியல் கொலைகளும் பலாத்காரங்களுக்கும் குற்றங்களுக்கும் காரணிகளாய் பிறர் இருந்தால் தண்டணை வாங்கித் தர முடியும். உள்ளுக்குள்ளே உடைந்து சிதறி தற்கொலையில் மாய்ந்து போகும் இவளைப் போன்றவர்கள் தான் சார்ந்த குடும்பத்துக்கு மனநோயை பரிசாய் தந்துவிடுகிறார்கள்.

அந்தம்மாவின் முகம் பார்க்கவே முடியவில்லை. சே! நினைவுகளைத் தூரப் போடும் வரமொன்று தாருங்களேன். இம்சித்தபடியிருக்கிறது வேதனையாய் தூங்கிய அந்த முகம்.

No comments:

Post a Comment

வந்தது வந்தீங்க வாழ்த்தோ வசவோ சொல்லிட்டுப் போங்க!