Tuesday, June 25, 2013

போலிகளே!!!

எத்தனை தடவை தான்
நிரூபிப்பது?
நீ தேடும் காரணிகளேதுமில்லாத
சாமான்ய பெண் நானென்று?
திரும்பத் திரும்ப இம்சிப்பதில்
தெளிவாகிறது
நான் யாரெனச் சொல்வதில்
நான் யாரென அறிவித்தலில்
என் இயலாமையை உலகறியச் செய்தலில்
என்னைப் பற்றி நீ கட்டமைத்த
ஏதோவொரு
முன்முடிவின் அடித்தளம் வலுப்படுகிறது
வலுத்த அரசியல் பிண்ணனியாயிருக்கும்
அறியாமைகளென நான் சொன்னதை
கண்டுபிடித்ததாய் நீ அறிவிக்கிறாய்
அடிபொடிகளின் கரகோஷத்தில் விண்ணதிர்கிறது
என்னைப் பற்றிய உண்மைகள் தான்
இருந்தாலும் குரல் வேறு
அவமானத்தில் கூனிப் போகிறேன்
அழுது முடியும் வரை தைரியம் வரப்போவதில்லை
அழுவது வீரமல்ல இது மனச்சாட்சி
அதனாலென்ன விருதுக்கெனவா வீற்றிருக்கிறேன்
அவமானத்துக்கு அழுவது கறை கழுவுதல்
போலிகளை இனங்காண்வதாய்
போலிகளே புறப்படுகிறார்கள்
உரைக்கப் பேசுபவன்
உத்தமனாகிறான்
என் உழைப்பெல்லாம் பிரளயம் விழுங்கிவிட்டது
இருக்கும் பிடி தானியத்தில்
எத்தனை கதிர் விளையும்
கணக்கீடுகளோடு
வரப்பு வயல்களில் நீர்வடியுமட்டும்...

No comments:

Post a Comment

வந்தது வந்தீங்க வாழ்த்தோ வசவோ சொல்லிட்டுப் போங்க!