Friday, April 26, 2013

எரிந்தது வீடு மட்டுமல்ல மிருகங்களே!

’வெந்து கடல் கொதித்தால் விளாவ தண்ணீருண்டோ?’ - பொன். செல்வகணபதி. நல்லாயிருக்குல்ல இந்த வரிகள். அதான் கடன் வாங்கிக்கிட்டேன்.

சொல்ல வந்த விசயம் வேற.

இந்தியாவில் 166 மில்லியன் தலித்துகள் உள்ளனராம். விக்கி சொல்லுது... உண்மையில் அதற்கும் மேலான எண்ணிக்கையில் இருக்கக்கூடும். இவங்கல்ல எத்தனை பேர் அடிமையாய் இல்லாமல் சுதந்திரமாய் வாழ்கிறார்கள்? எத்தனை பேர் உயிர் பயமில்லாமல் வாழ்கிறார்கள். உடமைக்கும் உயிருக்கும் பாதுகாப்பற்ற 166 மில்லியன் மக்களின் கவலையும் நிலையற்ற வாழ்வாதாரமும் ...இத்தனை பேரைக் குறிவைத்துக் கட்டமைக்கப்படும் அரசியலும் அவர்களை அடக்கியாண்டு ரத்தம் உறிஞ்சும் ஆதிக்க சக்திகளும் தான் எத்தனை எத்தனை? தலித் என்பவன் மதத்தால் இனத்தால் மட்டுமா ஒடுக்கப்படுகிறான்? மனித நேயமற்ற சைக்கோக்களால் அடிமைப்படுத்தப்படுகிறான்.ஒன்றுமில்லை, இதோ இங்கே, முகநூலில் தலித் என்கிற பதத்துக்கு கிடைக்கும் மோசமான அங்கீகாரமும் அவதூறுகளும் தான் சாட்சி உண்மையில் எத்தனை கொடூரமான மனப்பிறழ்வாளர்களுக்கு மத்தியில் ஒரு சாதாரணன் காலம் தள்ள வேண்டியிருக்கிறதென்பது ? வலியோடான வருத்தமில்லையா?

தமிழகத்திலோ, அரசியல் கபட நாடகத்தில் எல்லாக் காலமும் இந்த ஆதித் தமிழன் ஓட்டுக்காக மட்டும் பயன்படுத்தப்படுகிறான். அவரவர் பதவி வகிக்க நாங்கள் மிதிபடுகிறோம். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் எரிவது எங்கள் குடிசைகளாக மட்டுமே இருக்கிறது.ஆண்டாண்டு காலமாய் அடங்கிக் கிடந்தவன் அடித்தவனை முறைத்துப் பார்த்தால் வந்துவிடுகிறது கோபமும் குரோதமும்.

மேடை போட்டு சாதி வெறியூட்டி மிருகம் வளர்க்கும் மேதகு பெருந்தகைகளை அரசு சிவப்புக் கம்பளங்களில் வரவேற்றுச் சிறப்பிக்கிறது. இன்று வீராப்பு பேசியவர்கள் அரசியல் சதுரங்கத்தில் எங்கேனும் நகர்த்தப்படலாம். கூட்டணி தர்மத்தில் எப்போதும் உவப்பில்லை.

எப்போதும் அடங்கியே இருக்க பணிக்கப்பட்டவர்களென்று நம்ப வைத்து, அவருக்கெதிராய் கொம்பு சீவும் பிரயத்னங்களில சிலர். மாடுகளைப் போல சுவாதீனமிற்றி ஏவப்படுகிறார்கள் தற்சிந்தனை மறந்தவர்கள்.எரிந்தது வீடென்றால் வீடு மட்டுமா என்றொரு வாக்கியத்தை ஆதவனின் பதிவொன்றில் படித்தேன். எத்தனை உண்மை வீடென்றால் வீடு மட்டுமா? ஓலைக்குடிசையாயினும் சாணி மொழுகிய தரையாயினும் எத்தனை நினைவுகளைச் சுமந்திருக்கும். காரை பெயர்ந்த சுவர்களிலெல்லாம் நிச்சயம் நூறு கதையிருக்கும். இயற்கை விழுங்கியது போக, வறுமை விழுங்கியது போக, காலம் பலவற்றை கடந்த பின்னும் மிஞ்சியிருக்கும் வாழ்கையை, நேற்றைய நினைவுகளோடான ஒட்டுறவை கொளுத்திப் போட மிஞ்சிப்போனால் ஒரு நொடி ஆகியிருக்குமா? எரிந்தது வீடு மட்டுமல்ல மிருகங்களே... எரிந்தது வீடு மட்டுமல்ல.

எல்லாமும் பெரும்பான்மையென்கிற ஜனநாயக கலாச்சாரத்தில்,

கொத்துக் கொத்தாய் செத்து விழுபவன் தலித் என்றால்...
கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு கருகிப் போனவள் தலித் என்றால்...
வன்புணர்வுகளுக்கு ஆளாக்கப்பட்டு மரித்துப் போன சிறுமி தலித் என்றால்...
வருத்தங்களும் நிவாரணங்களும் வார்த்தையாகவும் செய்திகளாகவும் மட்டுமே... மறுக்க முடியுமா உங்களால்??

தலைமறைவான நடிகைக்குத் தரப்படும் முக்கியத்துவத்தைக் கூட ஆதிக்கவெறி கொன்று போட்ட தலித் இளைஞனுக்கு தருவதில்லை ஊடகங்கள். இத்தனைக்கும் அவன் அவன் குடும்பத்தின் ஒற்றை ஜீவநாடி என்கிற போதும்! தலித் பற்றின செய்திகளுக்கு ஆயுட்காலம் எத்தனையென்று நினைக்கிறீர்கள்? அதெல்லாம் சொல்லி முடியாது இந்தப் பதிவு. எத்தனை புறக்கணிப்புகளும் ஒதுக்குதல்களும்...துவண்டும் துளிரும் செடி போலத் தான் தலித் என்பவனின் வாழ்க்கை. மரமாகி கனி தர எம்சமூகம் எப்போது தலைப்படும்?

உயிருக்கு சாதிச் சாயம் பூசி, ஒரு கொலையை எப்படி நியாயப்படுத்துவாய்.கொலை எப்போதும் கொலைதான். புனிதப் போரே ஆனாலும் சிந்தப்படுவது ரத்தம் தானே? நாளை பாருங்கள். எல்லாம் மறைந்து விடும். அந்த ஏழைத் தாய் வாழ்க்கையில் பிடிமானம் ஏதுமின்றி வயோதிக காலத்திலும் கூலிக்கு மண் சுமந்து திரிவாள். மறக்கப்பட்டு விடும் ஒரு ஏழையின் கண்ணீர். நிறையப் பெண்களை இப்படி ஆதரவில்லாமல் தனித்துப் புலம்பி பார்த்திருக்கிறேன். உன் உரிமையைப் பறிப்பவன் தலித் அல்ல... அவன் வாழ்வுரிமையை பறித்து அவனை நாயை விடவும் கேவலமாக நடத்தும் உன்னிடமிருந்து தப்பிப் பிழைக்க அரசு தரும் அங்கீகாரம் அது. ஆண்ட பரம்பரைகள் இனி எப்போதும் ஆளப் போவதில்லை. மன்னர்களும் ஜமின்தார்களும் மக்களில் ஒருவராகிப் போன கதை புரியாமல் ஆண்டபரம்பரையாம்... தனி நாடாம்.. செம காமெடி. இந்தியா ஜனநாயக நாடு.(ம்ம்.. இதுவும் தான் காமெடி).ஊழல் அரசியலில் நீங்கள் உலவித் திரியலாம். அடங்கிக் கிடக்கும் பெரும்பான்யானவர்கள் திருப்பியடித்தால் எமை நோக்கி நீளும் கைகளுக்கு வேலையிராது.

மதுரை மாவட்டம் தும்பைப்பட்டி தான் என்னோட பாட்டி ஊர். மேலவளவு விவகாரம் நடந்த கொடூரமான நாட்களில் நான் அங்கிருந்தேன். பல குடும்பங்கள் சாதிவெறியால் தங்கள் எதிர்காலத்தை இழந்த அவலம். துடிதுடித்திருக்கிறேன். என்ன பிழை செய்து விட்டார்கள். பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட உரிமை கேட்டதற்கு, அதை தர மறுத்து உயிர்பறித்தார்கள் கொடூரர்கள். அந்தக் கலவரத்தில் என் தோழியின் அப்பா கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.அர்த்தசாமத்தில் ’அப்பா’வென வீறிட்டு அழுவாள். என்ன சொல்ல? பட்டு வந்த காயங்கள் இன்னும் ரத்தம் கசிந்தபடிதான் இருக்கிறது. தலித் எனும் சொல் அவமானம் இல்லை. வேதனை. எல்லோருக்குள்ளும் வேதனையின் வலி நிச்சயமிருக்கும்.

சகமனிதனை மனிதனாகப் பார்க்கும் நல்ல மனிதர்களே! உங்களின் மேன்மையான இப்போது உதவி தேவைப்படுகிறது.
மரக்காணத்தில் மிருகமாகிப் போனவர்களுக்கு மனிதத்தைப் புகட்டுங்கள்.
வதைப்பட்டுக் கதறும் எமக்கு எப்படிச் சத்தமில்லாமல் அழவேண்டுமென்று சொல்லிப் போங்கள்.
இரண்டும் சாத்தியமில்லையெனில், மிதிக்கும் கால்களை வெட்டும் வித்தையைக் கற்பித்துவிடுங்கள்.
அஹிம்சா தேசத்தில் அடிமைக்கு மட்டுமேன் ஆயுதங்கள் மறுக்கப்படுகிறது?

கடலென விரிந்து கிடக்கும் சாதிய வன்முறைகள் ஒரு சொட்டு கண்ணீரை வரவழைத்தால், உண்மையில் அவன் தான் மனிதன். அர்த்தமில்லாத அடையாளங்களில்லை மனிதனென்பது.... நேசமுடன் விரியும் சின்னதொரு புன்னகையில் மறைந்து கிடக்கிறது.

பிரச்சினைக்கு முடிவாய் பாகிஸ்தானைப் போல தலித்ஸ்தான் என்கிற முடிவுக்கு அடிகோலும் அதிமேதாவிகளே!
நாங்களில்லாமல் உங்களால் ஆளமுடியாது. நாங்களில்லாமல் ஒரு அணுவும் நகராது. நீங்களெல்லாம் பேசிப் பழகியவர்கள். நாங்கள் களம் கண்டு போராடிக் கொண்டிருக்கிறோம் உங்களின் சுகவாழ்வுக்காக. நாங்களில்லாமல், அதாகப்பட்டது அடிமைகளில்லாது ஆண்டபரம்பரைக்கள் எப்படி பெருமை பேசித் திரிய முடியும்.

சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்று தான் சகிப்புத்தன்மையோடிருக்கப் பழகுங்கள். இல்லையெனில் சுக்கல் சுக்கலாய் சிதறுண்டு போகும் இத்தனை காலம் கட்டி வைத்த ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்னும் அற்புதம்.சுயநலத்துக்காக இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசுக்கு ஒப்பானவர்கள் சரியாக வழிநடத்தத் தவறிய தலைவர்கள்.

இவர்களைப் போலானவர்களைப் பேசவிட்டு வெள்ளோட்டம் பார்க்கும் அரசியலார் அநாகரிகமான அஸ்திவாரத்திற்கு அடிபோடுகிறார்கள் அது மட்டும் நிச்சயம்.

மனிதனாக வாழ முயற்சிப்போம்!

3 comments:

கவியாழி said...

உங்களின் ஆதங்கம் புரிகிறது.நாமும் ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோம்?

Unknown said...

9578456438

Vaibhawy said...

One Ambedkar is not enough for our country.. Many leaders like him should rise up

Post a Comment

வந்தது வந்தீங்க வாழ்த்தோ வசவோ சொல்லிட்டுப் போங்க!