Tuesday, March 30, 2010

உணர்வுச் சங்கிலி

கார்முகிலொன்று
கனத்த இதயத்தோடு
கண்ணீர் உதிர்க்க‌ நேரம் பார்த்து
காற்றின் போக்கில்
கவலை சுமந்தபடி
ஆகாயமார்க்கத்தின் விதிகளை மீறி
விபத்தினை எதிர்பார்த்து....

தீஞ்சுவடு பட்டு தகதகக்கும்
தணலின் வெம்மையோடு
சூரியன் தீண்டிய தேகத்திற்கு
பன்னீர் ஒத்தடம் தேடும்
பருவப் பெண்ணாய்
பூமாதேவி
அண்ணாந்து பார்த்துப் பார்த்து
அவன்முகம் காணாமல்...

இலைதழையோடு காய்த்த மரமொன்று
பருவ மாற்றத்தில் பழுத்த நேரமது!
காவலாளி அயரும் தருணமெது?
கல்லெறிய சமயம் பார்த்து
கவனெல்லாம் கண்ணாகி காத்திருக்க....
கனிந்ததன் பலனாய்
சாவோடு பிரிவையும் சேர்த்து
பயத்தோடு எதிர்நோக்கி...

’இன்னார்க்கு இன்னது ஏற்புடைத்து’
சீராய் ஆராய்ந்து செயலாற்றும்
காலமெனும் கடவுளவன்
கண்ணுற்றான் இத்தனையும்...

கைம்பெண் நிலையில் களைப்புற்ற
கார்முகிலது அரற்றியழ
நெடுதுயர்ந்த மாமலை நோக்கி
காற்றின் திசையை மெல்ல முடுக்கினான்!

திடமுடன் திண்ணமும் கொண்டவன்
வன்தோள் பற்றி கடந்ததின் கதையை
கண்ணீர் மலக நவிலலானாள்
கார்முகில் பெண்ணாள்!

மேகமகள் கண்ணீர் நிறைந்து
மழையெனப் பொழிய
நிலமகள் தானும்
வேட்கையோடு வெட்கமும்
தணிய தன்வசமானாள்!

உற்றவினையாவும் நினைத்தபடி
நிறைவேற உயவுப் பொருளான
காற்றெனும் விதியினது
கருணை கடைசியில் - அந்த
பழுத்த மரத்தின்பால்!

கல்லடிக்கும் கண்ணடிக்கும்
கலங்கிப் போய்
முதிர்ச்சியின் பயனை
ருசிக்கும் உணர்வற்று..
ஏதேதோ மந்திரங்கள்
ஏதேதோ கடவுளுக்காய்
நித்தமும் ஓதியபடி
பருவம் சுமந்த பழுத்த மரம்!

உரிய வலுக்கொண்டு சுழற்றியடித்த
காற்றின் தினவில்
கல்லடியின்றி கனியுதிர்த்தது
நேற்று காய்த்து இன்று பழுத்த மரம்!

ஒன்றின் துயரது
மற்றதின் இன்பம்!
எல்லாம் அவன் செயல்...

இனியேனும் உகுக்கும் கண்ணீரை
இசைவுடன் சொரிக!
சிலரின் களர்நிலமேனும்
பயிர்பெறட்டும்
உன் கண்ணீரின் உரத்தில்!

Saturday, March 13, 2010

ஓர‌றிவே!


















சின்னஞ் சிறு நீர்ப்பரப்பு
காற்று முக்குளித்து
மீண்டுவரும் நீர்க்குமிழி
தாக‌ம் தீர்ந்த‌ பெரும‌கிழ்வில்
இசைந்தாடும் கோரைப்புற்கள்!

வெக்கைக்கு நீர்தெளித்து
சிற‌குலர்த்தும் சிறுமைனா
நாரையும் கெழுத்தியும்
நாலாதிசையும் கபடியாட
குற்ற‌லை ச‌கித‌ம்
குளித்துச் செல்கிறது தென்ற‌ல்!

ஆல‌ம‌ர‌ நிழ‌லில் இளைப்பாறி
பழ‌த்தோடு பாச‌த்தையும் ப‌ரிமாறி
குல‌விக் க‌ளித்த‌து அணிலிர‌ண்டு!
அள்ளித் தெளித்த மஞ்சளாய்
அங்கங்கே நெருஞ்சி
மிதிக்காதே குத்திடுவேன்
மிர‌ட்டாலாய்ச் சிரித்த‌து!

எங்கோ ஒரு ம‌ர‌ங்கொத்தி
ஊத‌ப்ப‌னை யொன்றை
உக்கிர‌மாய் கொத்திய‌து
மாசி ம‌க‌த்து மாரிய‌ம்ம‌ன்
முர‌சாட்ட‌ம் ஏதொவொரு தாள‌ம்
இன்ன‌தென்று விள‌ங‌கவில்லை!

காத்துல‌ ச‌ர‌ச‌ர‌க்கும்
காய்ந்த‌ ப‌னை ஓலை
இன்ன‌மொரு ச‌ங்க‌தியை
சினேகிதிக்குச் சொல்லுவ‌தாய்....

சந்தடியில்லா மத்தியான வேளைகளில்
நகரத்து நெருக்கடி மறந்து களைப்பாறி
உள்ளொடு கவிதை பரிமாறி
கற்றாழைப் பழத்தோடு
ஈச்சங்காய் கொறித்து
இதுவல்லோ வாழ்க்கையென
இன்புற்று நானிருந்தேன்!

அகலப்ப‌டர்ந்திருக்கும் ஆலம‌ர‌த்த‌டியில்
அதிச‌ய‌மாய் முளைவிட்ட‌
புளிய‌ஞ் செடியொன்னு
குறைமாச‌ புள்ள‌ போல
ஊட்டமாய் உணவின்றி
குறுகிச் சிறுத்திருக்க
நெஞ்சம் பதைபதைத்து
பலவாறு புலம்பிற்று!
அப்போது தவறவிட்ட‌ சேதி
இப்போது புத்திக்கு புரிஞ்சிருச்சு!

த‌ன் குடும்ப‌ம் த‌ன் சாதி
த‌ன் இனம் தன் மதமென்னும்
சுயநலம் கொழுத்த‌ மனிதம்
தாவ‌ர‌ ச‌ன‌த்துக்கும்
த‌ன் விச‌த்தைப் ப‌ர‌ப்பிற்றோ?
எப்படிச் ச‌ரி செய்ய?
எதுவ‌ரைக்கும் எட்டிய‌தோ
ஆறறறிவின் க‌ய‌மையெல்லாம்
க‌ள்ளங் க‌ப‌ட‌மில்லா
ஓர‌றிவு உயிரிட‌த்து!

Tuesday, March 9, 2010

கரையான் அரித்த ஏடுகள்

கனவுத்தச்சன் ஒருவன்
கால‌ங்கால‌மாய் க‌ண்ணில்
கருவாக்கிய‌ காவிய‌ம‌து!

க‌ளைவெட்டி சுள்ளி சும‌ந்து
க‌ளைப்பில் க‌ண்ணயருமுன்
வ‌ரைந்து வைத்த‌ வர‌லாறு!

வரையறையில்லா நெடுநிலப் ப‌ர‌ப்பு
வ‌ர‌ம்புக‌ள் தாண்டி வ‌றுமையும் தாண்டி
கேள்வி ஞான‌ம் த‌ந்த‌ த‌மிழாலே ‍- அது
வைரம் பதித்த‌ காப்பிய‌க் க‌ல‌ச‌ம்!

ஆண்டான் அடிமையெனும்
ஆதிக்க‌வாத‌ ச‌முதாய‌த்தில்
அட‌க்கி வைத்தான் அத்த‌னையும்
அவனுக்குள்ளே பொக்கிஷமாய்...

பட்டினத்தார் பாட்டும் பாவைக் கூத்தும்
பலவகை கீதமும் ஒலிக்கையில்
பாடிவைப்பான் இவனும் பாவத்தோடு
கூச்சலினூடே தானும் கவிதை சொல்வான்!
புரியாத மொழிக்கும் பழகாத இசைக்கும்
கைத்தட்டும் மேதாவிக் கூட்டம்
பாம‌ர‌ன் ப‌க்க‌ம் பார்க்க‌வேயில்லை!

உழ‌வு ந‌ட‌ அரைக்காணியில்லை
உண்டுறங்க ஒழுகாத‌ குடிசையில்லை
அடுத்த‌ வேளை உண‌வுக்கு....

இப்ப‌டியே இப்ப‌டியே
போராட்ட‌க்க‌ளம் நித‌மொரு
க‌த்தியோடு ம‌ல்லுக்கு வர
'பார்த்திப‌ன்' க‌ன‌வாய் மாறிப் போயின
பாமரன் கனவுகளும் பதிக்கத் தவறிய‌
இல‌க்கிய‌ முத்திரைக‌ளும்!

பின்னொரு நாள்
அன்பன‌வ‌ன் அவா இனிதே
அர‌ங்கேறிய‌து!
க‌லைம‌களே வ‌ந்திவ‌னை
வாழ்த்திவிட்டு
அவ‌ச‌ர‌மாய் அக்காப்பிய‌ம் கேட்க‌
புதைத்து வைத்த புலமையெல்லாம்
அப்ப‌டியே ஒப்புவித்தான்
செல்ல‌ரித்த‌ சொற்க‌ள் போக‌
மிச்ச‌மாய் ஏதுமில்லை!

கால‌ம் கட‌ந்து வ‌ந்த‌ க‌ட‌வுளை
குறை சொல்ல‌ யாருமில்லை
கொடுப்பினை இவ‌னுக்கில்லை
குத்தலாய் கேலிக‌ள் பலவும்!
ந‌ர‌ம்பில்லா நாக்கின் வ‌ழி
எள்ளுவாரெல்லாம் அறிவாரோ
பாமர‌ன் த‌ன் நிக‌ரில்லா புலமைத‌னை!


Thursday, March 4, 2010

உள்ளொன்று வைத்து

உரையின் உட்கருத்து மெதுவாய் உள்வாங்க
கருத்தின் செறிவில் தாக்குண்ட நெஞ்சம்
கன்னக் கதுப்பில் செந்நீர் பிரவாகம்
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார்....
ந‌ட்பில் கூட‌வா ந‌ல்ல‌தும் தீய‌தும்?
எதிரியிட‌ம் எச்ச‌ரிக்கை அவ‌சிய‌ம்
தகைசால் ந‌ட்பிலும் ந‌ஞ்சு க‌ல‌க்குமா?
ப‌ல‌முறை ப‌ட்டாலும் புத்திக்கு வருவ‌தில்லை
ந‌ண்ப‌னெனும் பாத்திர‌த்தை யாரோவென்று பார்க்க‌‌.....



Wednesday, March 3, 2010

இடம் சொல் பொருள்

"இங்க உக்காரலாமா?"

"ஓ! தாராளமா?"

"எங்க இறங்கணும்?"

"தாம்பரம்"

"கடைசி தானே."

"ஆமாங்க."

காதில் முணுமுணுத்த எம்.எஸ் இப்போ இன்னும் கொஞ்சம் பலமாய்...

சுற்றிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாய்... அதிக‌ம் கூட்ட‌மில்லை. ஒரு வெள்ளிக்கிழ‌மை முன்ப‌க‌ல் நேர‌ம். மாமாவின் நினைவு நாளுக்காக‌ அவ‌ர் குடும்ப‌த்தின‌ர் இருக்கும் ப‌குதிக்கு போய்க்கொண்டிருக்கிறேன். இழப்பின் வழி கண்ணீராய் மாற நேரம் பாத்துக் கிடந்தது. சரியாய் ஒரு வருடத்திற்கு முன்பு ஒரு அகோர கார் விபத்தில் பலியான மாமா எண்ணச் சிதறலாய் என்னை சிதறடித்துக் கொண்டிருந்தார்.

"உங்க‌ள‌ பாத்தா என் தோழி ஞாப‌க‌ம் வ‌ருது."

"என்ன‌? ஒரு நிமிச‌ம் ... கேக்க‌ல‌ ச‌ரியா.", எம்.எஸ் ச‌ன்ன‌மாய் கிசுகிசுக்க‌லானார்.

"இல்ல‌ என் தோழி இற‌ந்து ஒரு மாத‌மாகிறது. அவ‌ உங்க‌ மாதிரியே இருப்பா."

"அப்ப‌டியா! ச்ச்சூ. என்னாச்சுங்க‌?"

"ஒரு விப‌த்து.ம்ம். அது முடிஞ்சு போன‌ க‌தை."

மாம்பலம் வந்தும் அத்தனை கூட்டமில்லை.

"ஏங்க பெரியார் பத்தி என்ன நினைக்கறீங்க?"

"என்ன‌ங்க‌? நாமெல்லாம் அவ‌ர‌ விம‌ர்ச்சிக்க‌லாமா? சும்மாவா சொன்னாங்க‌ ப‌குத்தறிவு ப‌க‌ல‌வ‌ன்னு. மூடநம்பிக்கை எனக்குள்ள இல்லாம பண்ணினவராச்சே."

அந்த‌ப் ப‌க்க‌ம் அட‌ர் ம‌வுன‌ம் சில ம‌ணித்துளிக‌ளுக்கு....

"தீயின்னா நாக்கு வெந்துடுமாங்க ?"

"யாரு சொன்னா? நான் இதெல்லாம் நம்புற ஆளு கெடையாதுங்க."

"ஒரு தீயின் வ‌டிவ‌ம் சொல்லுங்க‌ பாப்போம்"

"ம்ம்... விள‌க்குத்திரியில் எரியும் சிறு 'சுட‌ர்' " [க‌விஞ‌ராக்கும்.]

"ஒரு காட்சிய க‌ற்ப‌னை பண்ணிக்குங்க‌. அது உங்க‌ த‌லைக்கு மேலே எரியுது. அதுக்கு அடுத்து ஒரு மூட்டையா நீங்க‌. ஒரு விப‌த்துல‌ நீங்க‌ செத்துட்டீங்க‌" [அடிப்பாவி வெள்ளிக்கிழ‌மை அதுவுமா இப்படி அச்சாணியமா......ஸ்ஸ் பெரியார்..பெரியார்.]

உங்க‌ள‌ச் சுத்தி ஒரே ஒப்பாரி. எல்லாருக்கும் நீங்க வாங்கி வ‌ச்சிட்டு போன‌ க‌ட‌ன் ப‌த்தின ப‌ய‌ம் தான் க‌த‌றலா வ‌ருது. அப்ப‌ நீங்க‌ அனாதையா விட்டுட்டு போன‌ குடும்ப‌த்துக்கிட்ட‌ என்ன‌ சொல்ல‌ நினைப்பீங்க‌?"

"அழ‌ற‌த‌ நிறுத்திட்டு என்னைப் பாருங்க‌. இன்ன‌ம் உசுறு இருக்குன்னு சொல்ல‌ நெனைப்பேன்"

"த‌லையிலேயே நாலு வ‌ச்சேன்னா. நீதான் செத்துட்டீல்ல‌. அப்புற‌ம் எப்ப‌டி? இது வேற." [ஆத்தி. அர‌ லூசோ ? அடிச்சிரும் போல‌ இருக்கு. சூதான‌மா த‌ப்பிக்கோனும்.தாம்ப‌ர‌ம் எப்போ வ‌ரும்? இப்ப‌த்தானா ப‌ர‌ங்கிம‌லை... அய்யோ. யாராவ‌து இடையில‌ பேசி என்ன‌க் காப்பாதுங்க‌ப்பா. ப‌க்க‌த்துல‌ வேற‌..]

"சரி. நீங்களே சொல்லுங்க‌. அந்த‌ பிண‌ம் என்ன‌ சொல்ல‌ணும்?"

"பிண‌ம்ன்னு சொல்லாதே. அது நீதானே."

வதைக்குறாளே.

"தீயின்னா வாய் வெந்துட‌வா போகுது."

"சூப்ப‌ர்! சூப்ப‌ர்! ந‌ல்லா பேசுற. ஆங் எங்க வுட்டேன்? [அவ்வ்வ்வ்வ்வ்]

க‌வ‌ல‌ப் ப‌டாதீங்க! நான் எல்.ஐ.சி ல‌ 'ஆயுள் காப்பீடு[insurance]' எடுத்திருக்கேன்னு சொல்ல‌ணும்."

"நான் தான் காப்பீடு எடுக்க‌வே இல்லையே. என‌க்கு பொய்யெல்லாம் சொல்ல‌ தெரியாது"

"என்ன‌து? இன்னும் எடுக்க‌வேயில்லையா? உன்ன‌ என்ன‌ செஞ்சா தேவ‌லை? அப்ப‌டியே ர‌யில்ல‌ இருந்து த‌ள்ளிவிட்டுருவேன். பாலிசி எடுக்க‌லேயேன்னு பாக்குறேன். ச‌ரி ச‌ரி அட்ர‌ஸ் சொல்லு." [என்ன மரியாதை எகிறுது.நல்ல வேலை பாலிசி எடுக்கல]

"எ.. எதுக்கு?" [விட‌மாட்டிய்யா நிய்யி. அப்பாடா பல்லாவ‌ர‌ம் வ‌ந்துருச்சு.]

"ஆளுங்க‌ள‌ அனுப்ப‌த்தான்"

"எ.. என்ன‌து? "

"மேலும் விப‌ர‌ங்க‌ள் வேணுமில்ல‌. Mail ID சொல்லு.Test Mail with LIC Agent Membership Details அனுப்புறேன். ஒழுங்கு ம‌ரியாதையா பாலிசி எடுக்குற‌ ச‌ரியா?  "

ப‌ய‌த்தில் உள‌ர‌.. க‌ர்ம‌ சிர‌த்தையாக குறித்துக் கொண்ட‌து.அப்பாடா, தாம்ப‌ர‌ம் வ‌ந்திருச்சு. வேக‌மாய் எழுந்து போனேன்.

"பாத்து எற‌ங்கு. இன்னும் பாலிசி எடுக்க‌ல‌" முதுகில் குத்திய‌ வார்த்தைக‌ள் , துர‌த்தியும் திரும்பாம‌ல் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடினேன் பாருங்க‌.... வெளியே வ‌ந்து ஆட்டோ வ‌ச்சதும் தான் ந‌டுங்கின‌ குலை மெதுவாய் அட‌ங்கிற்று. என்னையெல்லாம் எத்த‌ன‌ பெரியார் வ‌ந்தாலும் திருத்த‌வே முடியாது.

க‌ருத்து :‍

1.எல்லாரும் ஆயுள் காப்பீடு எடுக்க‌ணும்.

2.பெரியாரை ப‌டிப்ப‌தோடு ம‌ட்டும் நிறுத்தினா இப்ப‌டித்தான். வாழ்க்கையில‌ க‌டைபிடிக்க‌ணும். [எப்புடி நாங்க‌ளும் க‌ருத்து சொல்லுவோமுல்ல‌?]

Tuesday, March 2, 2010

வேடதாரி


மறைநூல் மன்னுவன் ஓதிய ம‌றைபொருள்
சிறும‌தி சேவி உள‌மொரு தாளமிட்டு
நாணம் மேவுறும் அடக்கம் த‌தும்ப‌
க‌ருத்தினை அட‌க்கி முன்ன‌து பிற‌ழா
காரிருள் தட‌வி முறுக்கிட்ட‌ ம‌ட‌மையில்
விசித்து அர‌ற்றி ஒளிவாள் கருமணி
ஒய்யாரமாய் அன்னநடை பேணுங்கால்,
அதிராம‌ல் வந்த‌னன்; ஏந்திழை இள‌கிட‌
ஏற்புடை மாண்ப‌து எடுத்திய‌ம்பின‌ன்
சொல்லிடை தழுவிய சிருங்காரச் சேதி
எச்சமாய் ஈறுகளில் தடம்மாறி..
குருதிபடிந்த‌ கீழுதடு கண்ணுற
பற்றினானதை பற்றில்லா வேடதாரி!

Monday, March 1, 2010

அது ஒரு அழ‌கிய‌ நிலாக்கால‌ம்

என் தூக்க கலக்கத்திலேயே என்னை முத்தமிட்டுவிட்டு வேலைக்குப் போய்விடும் அப்பாஅம்மா. யாரோ தலைசீவ, யாரோ உணவூட்ட,யாரோ குளிப்பாட்ட இப்படியாக ஒரு குழந்தையின் முழுநேர பராமரிப்புக்கு தோதான கூட்டுக்குடும்பச் சூழல்.

'அம்மா அதுக்குள்ளேயும் வேலைக்குப் போயிட்டாங்களா? ஞாயித்து கிழம எப்போ வரும்? அதுவரைக்கும் அம்மாவ பாக்கவே முடியாதா?இன்னிக்கு சீக்க‌ர‌மே எழுந்திருச்சு அப்பாகிட்ட‌ சைக்கிள் கேக்க‌னும்.'

இப்ப‌டியாக, அழுது அடம்பிடித்தால் அரைமணிக்குள் அம்மா அப்பா த‌விர‌ எல்லாமும் கிடைக்கிற‌ ஒரு வீடு. நிறைய சொந்தங்களும்,நித்தம் ஒரு விருந்தும், கேலியும் கும்மாளமும் என‌ எப்பவுமே எதாவது ஒரு பரபரப்பு இருந்து கொண்டேயிருக்கும்.தொழு நிறைய ஆவினமும்,அதற்கெனவே வீடு கொள்ளா வேலையாட்களும்,தட தடவென ஆர‌வார‌ங்களுமென‌ இருந்த‌ என் கிராம‌த்து வீடும் அது சார்ந்த‌ ம‌ண்வாச‌னையுமே என் மழ‌லைப் ப‌ருவ‌த்தின் ம‌ற‌க்க‌ முடியாத‌ கொடுப்பினை.

நினைக்க‌ நினைக்க‌ பெருமித‌ம் கலந்த வ‌ருத்த‌ம் ப‌ட‌ர்கிற‌து என்னுள்.எல்லாமும் இப்போதும் இருக்கிற‌து வெறும் உயிரோட்ட‌மில்லாத‌ அடையாள‌ங்க‌ளாய்... சந்தடியற்ற முன்னோர்கள் உறைவிடமாய், அள‌வெடுத்த எண்ணிக்கையில் ஆட்களின் நடமாட்டத்தோடு. ஒரு வாழ்ந்து கெட்ட‌ வீட்டின் வ‌லியை கேலிக்கு சொல்வதானால் முன்னாள் த‌லைவ‌னின் இந்நாள் போன்ற‌தான அவ‌ல‌ம். அது வார்த்தையில் சொல்லி மாளாது. ப‌டிப்புக்காக‌,எதிர்கால‌த்துக்காக,சம்பாத்தியத்திற்காக‌ இன்ன‌மும் ஏதேதோ கார‌ண‌ம் சொல்லியும் மனதால் ஒப்ப‌வே இய‌லாத‌ ஒரு பெரும் கொடுமை புல‌ம்பெய‌ர்தல். அது 'நான் பிறந்த மண்' என்கிற அடையாளத்தை அழித்து எழுதுகிற கையாலாகாத்தனம். கிராமம் விட்டு நகரம் தேடிய பல்லாயிரம் பேரில் நானும் ஒருத்தியாய் அங்கலாய்க்க மட்டுமே முடிகிறது. பல வ‌லிக‌ளை நினைவுப‌டுத்தும் வ‌டுக்க‌ள் என்ப‌தாலேயே என் பால்ய‌ பிராய‌ம் என்னால் அடிக்க‌டி நினைக்க‌ ம‌ற‌க்க‌ப்ப‌டுவ‌துண்டு. க‌ண்ணீர் தாண்டி கைத‌ட்டிச் சிரித்த சிற்சில‌ நினைவுக‌ள் உங்க‌ளுட‌ன் ப‌கிர்வ‌தில் இன்ப‌மாய் உண‌ர்கிறேன். முத‌ல் காத‌ல், முத‌ல் முத்த‌ம், முத‌ல் ஸ்ப‌ரிச‌ம் என்ப‌து போலே நான் பிற‌ந்த‌ ம‌ண்ணும் அது சார்ந்த கதைகளும் உணர்வுகள் சிலிர்த்தெழ அடுத்த‌வர் க‌தற‌ க‌தற க‌ழுத்த‌றுப்பது கைவ‌ந்த‌ க‌லையென‌க்கு.(என்ன.... தொட‌ர் ப‌திவுக்கு என்னை அழைத்த 'க‌ல‌க‌ல‌ப்பிரியா' இத‌ற்காக‌ க‌ல்ல‌டி படுகிறாரா? அந்தோ ப‌ரிதாப‌ம்!)

மூன்று த‌லைமுறையாய் ஒரு குடியாய் வாழ்ந்து வ‌ந்த‌ கூட்டுக்குடும்ப‌த்தில் ப‌தினைந்து வ‌ருட‌ங்க‌ள் க‌ழிந்து பிற‌ந்த‌ குழ‌ந்தை.அதுவும் பெண் குழந்தை. அத்தைக‌ள்,சித்திக‌ள்,மாமா,அத்தை,அவ‌ர்க‌ளுக்கு அடுத்த‌ ச‌ந்த‌தியினர் என‌ எல்லோருக்கும் எடுப்பார் கைப்பிள்ளை நான். என் வ‌ய‌துக்கு தோதாய் எவ‌ருமே இல்லாத கார‌ண‌த்தால் கொள்ளுப்பாட்டி,அய்யா,அப்ப‌த்தா,ஆச்சி,தாத்தா என‌ இன்றைய‌ குலுவான்க‌ள் பாட‌த்தில் ப‌டிக்கும் உற‌வுக‌ளோடு நிச‌மாய் நெடுநாள் வாழ்ந்தேன் என்ப‌தில் எப்போதும் என‌க்கு ஈடில்லா ம‌கிழ்ச்சி. வீடு என்கிற‌ கோட்டை தாண்டி என‌க்கு பள்ளி செல்வதற்கு முந்தைய‌ கால‌ க‌ட்ட‌த்தில் தோழ‌மையே இல்லை. ஏதோ ஒருமுறை அரிதாக எல்லோரும் இணைந்த போது அது துக்க நிகழ்வே எனினும் அத்துணை மகிழ்வு. பகிர இத்தனை இருந்திருக்கிறதா?அதே ம‌கிழ்வு உங்க‌ளுட‌ன் என் ப‌தின்ம‌ ப‌ருவ‌த்தின் நினைவுகளை பகிர்வதிலும் பெறுகிறேன். சரி ச‌ரி அழாம வாங்க‌. ந‌ம்ம‌ விச‌ய‌த்துக்கு.

*******************

என்னை டாக்டராகவோ இன்சினியராகவோ ஆசப்பட்டது அம்மா தான்.ஒரு ஜோசியன் சொன்னானாம்.[ அவனதான் தேடிக்கிட்டு இருக்கேன் இது நாள் வரைக்கும் சிக்கவேயில்ல சாமி].ப‌ள்ளிக்கூட‌ நாட்க‌ள் பெரும்பாலும் ம‌துரையில். இப்ப‌வும் தாத்தா ஆச்சி கூட‌ தான்.ஆனா சூழ்நிலை அப்ப‌டியே உல்டா. என் தாயின் தாய் வீடு, ஒரு பாரம்பரியமுள்ள காங்கிரஸ் குடும்பம். ஆச்சி அந்த‌ கால‌த்து எஸ்.எஸ்.எல்.சி. நாகரீக மிடுக்கும் ஆபிஸர் மனைவி என்கிற பெருமிதமும் கொண்டவர்.அத‌ன் ஆளுமை வீட்டின் ஒவ்வொரு பொருளிலும் தெரியும் என் வ‌ள‌ர்ப்பிலும் அப்ப‌டியே. தாத்தா ஒரு வக்கீல் - காதி கிராப்ட்ஸுல் பணி - காந்தீய வாதி ‍- முன்னாள் சுதந்திர போராட்ட வீரர் - சமூக சேவகர் - சிறந்த பேச்சாளர் என பன்முக திறமைகள் கொண்டவர். அவரின் ஒரு செருமலுக்கு வீடே கதிகலங்கிப் போகும். ஆனாலும் நான் மட்டும் எப்பவும் அவருக்குச் செல்லம். ஜான்,பூர‌ணி,பிர‌சாத் என‌ இப்பவும் நினைத்து நினைத்து சிரிக்கிற‌ வாலுத்தன‌ம் மட்டுமே கொண்ட ந‌ண்ப‌ர் வ‌ட்ட‌ம் என‌ அழகாய் ஆர‌ம்ப‌மான‌து ப‌ள்ளி வாழ்க்கை.எல்லா வீட்டு பிள்ளைகளை விடவும் என்னை ஒருபடி மேலாக காட்ட ஆச்சி எடுத்துக் கொண்ட முயற்சிகள் இப்போது நினைத்தாலும் நன்றிக்கடன் பட்டுள்ளதாய் மனச்சாட்சி சொல்லிக் கொண்டே இருக்கிறது. பஞ்ச தந்திர கதைகள் தொடங்கி சமஸ்கிருத ஸ்லோகங்கள்,சுதந்திர கதைகள்,பாட்டு,படிப்பு இப்படியே கட்டிவிட்ட கடிவாளத்தோடு ஆரோக்கியமான அடித்தளம் அமையப் பெற்றேன்.

தாத்தாவின் ஓய்வுக்குப்பின் அவ‌ர் குடும்பத்தோடு கிராம‌த்துக்கே சென்றுவிட‌, பள்ளி மேல்ப்படிப்பு, விடுதி வாழ்க்கையான‌து. தாய் பாசம் என்பதை உணர்ந்து தெளிகிற‌ வரை தோழியருடன் தான் எல்லா பகிர்தலும் புரித‌லும்.பள்ளி + விடுதி கண்டிப்புக்கு பேர் போன ஒரு கிறித்தவ ஸ்தாபனம்.பள்ளியோடு சேர்ந்த கன்னியாஸ்திரிகள் விடுதி அது, அந்த‌ வாழ்க்கைக்கும் சிறை வாழ்க்கைக்கும் கொஞ்ச‌மும் வித்தியாச‌மே இல்லை. படிப்பு,ஒழுக்க‌ம்,எளிமை,ப‌ண்பு இதெல்லாம் இயல்பா வ‌ர‌ணுமின்னு அம்மாவோட பாழாப் போன க‌னவு என்னை ஒரு சாமியாரிணியா சுத்த விட்டுச்சு. ஆனா விதி அவங்க கனவு நிறைவேறாதே போச்சுது. கொலுசு,பூ,க‌ண்மை,தங்க ந‌கைகள்,ஆடம்பரமான உடைகள் இப்ப‌டி எந்த‌வித‌மான பெண்க‌ளின் ஆசாபாசமும் செல்லுப‌டியாத‌ இட‌ம். ஒரு பெரிய‌ வ‌ளாக‌த்தில் ஆண்க‌ள் என‌க் க‌ண‌க்கிட்டால் சர்ச்சுக்கு வரும் வயதான பாதிரியார் தவிர்த்து இர‌ண்டே இர‌ண்டு காவலாளிகள் மட்டும். மீதி அத்தனை பேரும் பெண்கள்..பெண்கள்..பெண்கள்.வ‌ளாக‌த்தை தாண்டிச் செல்ல‌ எங்களுக்கு அனும‌தியே கிடையாது.

நான்,ஜான்சி,மேரி,லிசா,அகிலா,வேணி,சரபின் என‌ எங்க‌ள் ம‌க‌ளீர‌ணி வீர‌ சாக‌ச‌ங்க‌ள் ப‌ல‌ செய்து 'ஒழுங்கீனம்' என‌ க‌வுர‌ ப‌ட்ட‌ம் பலமுறை பெற்ற‌து. க‌ல்கி,குமுத‌ம்,ஆன‌ந்த‌விக‌ட‌ன் இது போலும் புத்த‌க‌ங்க‌ள் க‌ண்ணிலேயே ப‌ட‌க் கூடாது. ஆனா ஜான்சிக்கும் என‌க்கும் க‌தை புத்த‌கம்னா அப்ப‌டி ஒரு ஈடுபாடு. பாடப் புத்த‌க‌த்து மேல‌ இருந்த‌ வெறுப்பு தாங்க‌ காரண‌ம். அந்த புத்தகங்களை எங்க‌ள் விடுதி வ‌ரைக்கும் கொண்டு வ‌ர்ற சாக‌ச‌ம் ஜான்சிக்கு ம‌ட்டுமே தெரிஞ்ச‌ ர‌க‌சிய‌ம்.ம‌ல்லி ம‌ண‌க்கும் ம‌துரையிலே எங்க‌ளுக்கு ம‌ட்டும் பூ வைக்க‌ அனும‌தியில்லை. இந்த‌ அட‌க்குமுறையை மீறுவது என சபையில் முடிவு செய்யப்பட்டது. புட‌வையும் ந‌கைக‌ளும் தலை நிறைய‌ ம‌ல்லிப் பூவும் உடுத்தி அழகுபார்ப்பது, நடப்பது எங்க‌ள் க‌ன‌வு.ஆனா வார்ட‌ன் சிஸ்ட‌ருக்கு தெரிஞ்சா அவ்வ‌ள‌வுதான்.லிசா அருமையான திட்டம் ஒன்னு சொன்னா. அதன்படி வார்டன்கிட்டயிருந்து சாவி க‌ள‌வாடி, ஒவ்வொரு முதல் சனிக்கிழமை இரவும் மொட்டை மாடியில் உல‌வுவ‌து வாடிக்கையாயிற்று. ஆஷா, வீட்டிலிருந்து ப‌ள்ளிக்கு வ‌ரும் மாண‌வி.அவ‌ள் மூல‌மாக‌ வெள்ளிக்கிழ‌மை வெளியிலிருந்து ம‌ல்லிப்பூ ப‌ழைய கதை புத்த‌க‌ங்க‌ள் எல்லாம் வ‌ந்துவிடும்.

ஒவ்வொரு நாளும் 10 ம‌ணிக்கு வார்ட‌ன் சிஸ்ட‌ர் மெழுகு வ‌ர்த்தியோட எங்க‌ ஹாலுக்கு வ‌ருவாங்க.உடை விலக கூடாது, தலைக்கு அணைப்பு எதுவும் வைக்காமல் தரையில் தான் படுக்க வேணும், ஒவ்வொரு படுக்கைக்கும் குறிப்பிட்ட இடைவெளி இதுபோலும் விதிகள் நிதமும் பரிசோதிக்கப்படும்.எல்லாரும் இருக்காங்க‌ளான்னு க‌ண‌க்கு பண்ணிட்டு போயிருவாங்க‌. அதுக்க‌ப்புற‌ம் தான் எங்க‌ ஆட்ட‌ம் ஆர‌ம்ப‌மாகும். மெதுவா பூனை பாத‌ம் வ‌ச்சு மொட்ட‌மாடிக்கு போயி அல‌ங்கார‌ம் எல்லாம் ப‌ண்ணிக்கிட்டு ஆடுறது,நடிக்கிறது அப்புறம் ஃபேஷ‌ன் ஷோ மாதிரி அங்க‌ இங்க‌ ந‌ட‌ந்துட்டு க‌ளைச்சு போயி வ‌ந்து 12 மணிக்கெல்லாம் தூங்கிடுவோம். ஜூனிய‌ர் பொண்ணு ஒருத்தி ஒரு நாள் அல‌ங்கார‌த்தோட‌ எங்க மக்களப் பாத்துட்டா. எங்க‌ குட்டு அம்ப‌ல‌மாக‌ போகுதுன்னு ஒரே ப‌ய‌ம். ஜான்சியா? கொக்கா? வேப்பிலை சருகு எல்லாம் கொளுத்தி அவ‌ திரும்பி வ‌ர்ற‌ப்போ ஒரு பேய் வீடு செட்ட‌ப் செஞ்சா பாருங்க‌ அம்மிணி நாலு நாள் குளிர் காய்ச்சலிலே சிக் ரூமில‌ போயி ப‌டுத்திட்டா. யாருக்கிட்டேயும் அவ எதுவுமே சொல்லல. ஏன்னு இன்னும் தெரியல.

இட்லிக்கு எதிர்ப்பு தெரிவிக்க துடைப்ப குச்சிகளில் கோர்க்கப்பட்ட இட்லிகளை வார்டன் ஜன்னலுக்கு நேரே நட்டு வைப்பது,பவுர்ணமி இரவுகளில் எல்லாருக்கும் போக்கு காட்டி விட்டு மொட்டை மாடியில் சாப்பிடுவது,பின்னிரவு வரைக்கும் சினிமா கதை பேசுவது,காலையில் எல்லாரும் பைபிள் படிக்கையில் நான் மட்டும் வீம்புக்கென்றே பகவத் கீதை படிப்பது[புரியலையினாலும்],தினமும் 4 மணி மாஸுக்கு செல்லாமல் பாத்ரூமில் தூங்குவது,வார்டன் ரூமில் துளையிடப்பட்ட சீகைகாய் பாக்கெட்டை போட்டு விட்டு அவஸ்தையில் அவர் தும்முவதை பார்த்து ம‌கிழ்வ‌து என விடுதி விதி முறைகளில் என்னென்ன‌ பாவ‌ப்ப‌ட்ட‌ செய‌ல்க‌ள் உண்டோ அது எல்லாமும் எங்க‌ள் 'ம‌க‌ளீர‌ணி' செய்யும். எல்லாருக்கும் சேர்த்து ச‌ண்டே மாஸில் லிசாவோ மேரியோ பாவ‌ம‌ன்னிப்பு வாங்கி விடுவ‌ர். இத்த‌னையும் தாண்டி நாங்க‌ ஏன் ம‌திக்க‌ப் ப‌ட்டோம்னா ப‌டிப்போ,விளையாட்டோ,ம‌ற்ற‌ த‌னித்திற‌மைக‌ளோ ஏதாவ‌தொன்றில் எங்க‌ளின் ப‌ங்க‌ளிப்பு முக்கிய‌மான‌தாய் இருக்கும்.

ஒவ்வொரு ஞாயிறும் தூர்த‌ர்ஷன் சினிமா காட்ட‌ப்ப‌டும். இதெல்லாம் எங்க‌ புஷ்பா சிஸ்ட‌ர் க‌ருணை. பெரிய‌ போராட்ட‌த்துக்கு பின்னாடி அனும‌தி வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து. ஆனா எல்லாரும் அன்னிக்கு போடுற‌ பட‌ம் காத‌ல் காட்சிக‌ளில் இல்லாத‌ ப‌ட‌மா இருக்க‌ணும்னு வேண்டிக்குவோம். ஏன்னா அப்ப‌டி ஏதாவ‌து ந‌ட‌ந்தா ப‌ட‌ம் நிறுத்த‌ப்ப‌ட்டு அந்த‌ நேர‌த்துல‌ ப‌டிக்க‌ உக்கார‌னும் க‌ட்டாய‌மா. 'தூற‌ல் நின்னு போச்சு' ந்னு ஒரு பாக்கிய‌ராஜ் ப‌ட‌ம் பாதி ப‌ட‌ம் வ‌ரை சிஸ்ட‌ர் இல்ல‌வே இல்லை. ச‌ரியா பாக்கிய‌ராஜ் ‍சுலோக்ச‌னா காத‌ல்காட்சிக‌ள் தொட‌ங்குற‌ நேரம் சிஸ்டர் வந்தாச்சு. அப்புற‌மென்ன‌ வார்ட‌ன் அக்கா ரெண்டு பேருக்கும் சீட்டை கிழிச்சாச்சு. எல்லாரும் முணுமுணுப்போட‌ 'Study hall' போயிட்டோம்.அன்னைக்கு கெடைச்ச‌ சாப‌த்தை எல்லாம் தொலைக்க அவங்க இன்னும் ரெண்டு ஜென்ம‌ம் எடுக்க‌ணும்.

'பூவே உன‌க்காக‌' ப‌ட‌ம் வெளி வ‌ந்த‌ ச‌ம‌ய‌ம் என‌ நினைக்கிறேன்.ஜான்சி அவ‌ங்க சித்த‌ப்பா க‌ல்யாண‌த்துக்கு போயிட்டு படம் பாத்திட்டு வ‌ந்தா. அதுக்கு முத‌ல் நாள், ந‌க‌ம் நீள‌மா வ‌ள‌த்திருகேன்னு சொல்லி கை விர‌ல்க‌ள்ல‌ ஸ்கேல் வ‌ச்சு வார்டன் செம‌ அடி. ஜான்சி க‌த‌ சொல்ல ஆர‌ம்பிச்சா. க‌த‌ பாதி போயிருக்கும், 12B[எங்க‌ கேங்க்]முழுக்க‌ ஜான்சி தலை ப‌க்க‌த்துல‌. சிஸ்ட‌ர் க‌தவ‌ திற‌க்குற ச‌த்த‌த்துல‌ எல்லாரும் சுதாரிச்சு அவ‌ங்க‌வ‌ங்க‌ எட‌த்துக்கு போயாச்சு. என்னைக்குமில்லாம அன்னிக்கு சிஸ்ட‌ர் அவ‌ங்க வழக்கமான உடுப்பு இல்லாம‌ த‌லைவிரி கோல‌மா, நைட்டியோட‌ கையில் மெழுகுவ‌ர்த்தி சகிதமா வ‌ர்றாங்க. அத பார்த்ததும் முத‌ல்ல‌ ப‌ய‌ம் தெளிஞ்சு அப்புற‌ம் ஆத்திர‌ம் வ‌ந்திருச்சு. அடிவாங்குன‌ நானும் அகிலாவும் திட்ட‌ம் தீட்டிடோம். க‌டைசி வ‌ரை போயிட்டு அவங்க எங்க‌ வழியா திரும்புற‌ப்போ ப‌ய‌ந்து அலறி, தெரியாம செய்யுற மாதிரி சிஸ்ட‌ர் காலை இட‌றி விட்டோம்.நாங்க‌ தொட‌ங்க‌ எல்லாரும் தொட‌ர‌ வெளிச்ச‌ம் வ‌ந்த‌தும் பாத்தா அந்த‌ வ‌ய‌தான‌ ம‌னுசி க‌த‌வு ஓர‌த்திலே, அலங்கோலமாக‌ த‌ரையில். ம‌னசுக்கு க‌ஷ்ட‌மாயிடுச்சு. அதை விட‌ என்ன‌ கொடுமையினா என்னையும் அகிலாவையும் prayer hall க்கு கூட்டி போய் நாங்க‌ ப‌ய‌ந்த‌துக்காக‌ அவ‌ங்க‌ வேண்டின‌து தான். அதுக்க‌ப்புற‌ம் அவ‌ங்க‌ க‌வ‌னிக்க‌ப் ப‌டுற‌ முக்கிய‌மான ஆளாய் மாறிப் போனேன்.எல்லாத்துக்கும் நானும் ஜான்சியும் முன் மொழிய‌ப்ப‌டுவோம். திருட‌ன் கையில‌ காவ‌லைக் கொடுத்த‌ மாதிரி பிர‌ச்ச‌னைக‌ள் விடுதிக்குள் ரொம்ப‌ கொற‌ஞ்சு போச்சு.

அழ‌காக‌ பாடும் லில்லி சிஸ்ட‌ர்,த‌மிழ‌றிவு புக‌ட்டிய‌ புஷ்பா சிஸ்ட‌ர்,க‌ம்பீர‌த்துக்கு பேர் போன‌ ஜோதி சிஸ்ட‌ர் என நான் படித்த நல்ல உள்ளங்கள் இன்னும் இன்னும் எத்த‌னை எத்த‌னையோ! ஜடேஜா,ரஜினி,அமீர்கான் என யாருக்கும் தெரியாமல் மறைக்கப்பட்டிருந்த போஸ்டர்கள் லிசாவிடமிருந்து கைப்பற்ற போது,'யாருடீ! இவெனெல்லாம் உனக்கு பாய் பிரெண்டா?' எனக் கேட்டு நிறுத்தவும், அடக்கமாட்டாமல் சிரித்து நாள் முழுக்க சிஸ்டருக்கு முன்னால் வசைகளோடு முட்டி போட்ட அனுபவம்.'ஏப்பா! zoology record ‍எழுதனும் யாராவது 'லப்பர்' கொடுங்கப்பா' என்று ஒருமுறை வாய் குழறிய‌ குற்றத்துக்கு 'லப்பர் ஜெயா' என நாமகரணம் சூட்டப்பட்டு வ‌தைப்ப‌ட்டு எதிரியாய் மாறிப் போன என் முன்னாள் தோழி.கவிதை என்கிற பேரில் பிதற்றலாய் இருந்தாலும் கைதட்டி ஆர்ப்பரிக்கும் தோழிகள் வட்டம். 'என்னடா உன் லட்சியம்?' எனக் கேட்ட அம்மாவிடம் 'எய்ட்ஸ்சுக்கு மருந்து கண்டுபிடிக்கணும்னு' சொல்லி தோலுரிபட்ட ஜான்சி,ஒவ்வொரு Dec 12 ம் நினைக்கப்ப‌டும் கீதப் பிரியா, அண்மையில் மாமியார் கொடுமையில் மரித்துப் போன எங்களுள் கலந்த‌ தோழியொருத்தி என‌ இப்படி சொல்ல எத்தனை எத்தனையோ இருக்கு.

கல்லூரி வாழ்க்கை எல்லாமும் அம்மா அப்பா கூட. அதப்படி இதச் செய்யின்னு எப்பவும் அப்பா அம்மாவின் அடக்குமுறைகளோடும் தனிமையின் பிடியில்.வீட்டுக்குள்ள அப்பிராணியா, வெளியில அடங்காப் பிடாரியா அது ஒரு அழகிய நிலாக்காலம்.பகிர்ந்துக்க எத்தனையோ ......நான் ரெடி ஆனா நீங்க‌ ரெடியில்லையின்னு க‌த‌றுற‌து என‌க்கு கேட்ப‌தினாலே என் க‌டியை இதோட‌ நிறுத்தி மேலும் க‌டிக்க‌ இல்ல‌ தொட‌ர வசந்த் மற்றும் கமலேஷ் இருவரையும் அழைக்கிறேன்.

முத‌ன் முத‌லில் தொட‌ர் ப‌திவெழுத‌ வைத்த‌ க‌ல‌க‌ல‌ப்பிரியாவுக்கு ந‌ன்றி....

குறிப்பு :‍

ப‌ள்ளி குறித்த‌ நினைவுக‌ள் அத‌னினும் மேலாய் காத‌ல் அரும்பிய‌ நாட்க‌ள் த‌ழும்ப‌ ப‌டைப்புக‌ள் த‌ருமாறு கேட்டுக் கொள்ள‌ப் ப‌டுகிறார்க‌ள்.ஏன் நீ இப்ப‌டி எல்லாம் எழுத‌லைன்னு கேக்க‌ப்ப‌டாது. நான் இப்போ தான் முத‌லாமாண்டு க‌ணிணியியல்(?) போறேன் அதுக்குள்ளேயும் காத‌லா? எப்ப‌டி சாமி பொய் சொல்லுற‌து? இஃகி. :)))
வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!